தண்ணீர் பிரச்சனை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம்.! எதிர் கட்சிகளுக்கு முதல்வர் சரமாரி கேள்வி
சென்னை: தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் தான் வறட்சி ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கூறியுள்ளாார். தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் குறித்து, திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் பருவமழை பொய்துள்ளதால் நிலத்தடி நீரும் சராசரிக்கு கீழே சென்று விட்டது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரும் திறக்கப்படவில்லை. நிலைமை இப்படி இருப்பினும், முடிந்தவரை மக்களுக்கு தண்ணீர் விநியோகித்து வருகிறோம்.
நாளொன்றுக்கு தமிழகம் முழுவதும் 7,508 எம்எல்டி நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி. மேலும் பேசிய அவர் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடகாவில் ராகுல் காந்தி பேசினார்.
மேலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்றும் ராகுல் அம்மாநிலத்தில் பேசியுள்ளார். ஏற்கனவே தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீர் தர மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் தான், ராகுல் கர்நாடக மக்களிடம் இது போல பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள திமுக, தமிழக நலன்களுக்கு எதிராக கர்நாடகாவில் பேசிய ராகுலிடம் இது பற்றி ஏன் கேள்வி எதுவும் எழுப்பவில்லை என முதல்வர் வினவியுள்ளார்.
நீதிமன்றம் மூலம் தீர்ப்பு பெற்று தானே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், தேர்தல் பிரசாரத்தில், ராகுல்காந்தி பேசியது குறித்து ஒரு குரல் கொடுத்தீர்களா என திமுகவினருக்கு முதல்வர் கேள்வி எழுப்பினார்.
அதே போல தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை பார்த்து பேசிய முதல்வர் பழனிசாமி, கர்நாடகாவில் உங்களது கூட்டணி கட்சியின் ஆட்சி தானே நடக்கிறது. தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுங்கள் என கூறினார்.
முதல்வரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி, காவிரி நீரை கொண்டு வர வேண்டியது ஆளும் கட்சியின் பொறுப்பு. இவ்விகாரத்தில் எதிர்க்கட்சியை குற்றம்சாட்டுவது சரியல்ல என பதிலளித்தார்.