சென்னையில் குறிப்பிட்ட வகை கட்டிடங்களுக்கு குடிநீர் கட்டணம் உயரும்.. அரசிடம் திட்டம்..வெளியான தகவல்
சென்னை: சென்னையில் பெரிய வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் கட்டணத்தை உயர்த்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பங்களா வீடுகளில் குடிநீர் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது என்று ஐஏஎன்எஸ் செய்தி ஏஜென்சி தகவல் வெளியிட்டு இருக்கிறது.
தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையை தொடர்ந்து இதுபோன்ற ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழக வெள்ளையறிக்கை
தமிழக நிதி நிலைமை பற்றிய வெள்ளை அறிக்கை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சத்து 60 ஆயிரம் அளவுக்கு கடன் இருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும், அரசு போக்குவரத்து துறை , மின்வாரியம், குடிநீர் வழங்கல் போன்ற துறைகள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்றும், அதற்கான காரணத்தையும் அவர் பட்டியலிட்டார்.

போக்குவரத்து துறை, குடிநீர் வாரியம்
போக்குவரத்து துறையில் இன்றைக்கு உள்ள சூழ்நிலை படி, ஒவ்வொரு கிலோ மீட்டர் ஒரு அரசு பேருந்து ஓடினால் 59.15 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. தொடர்ந்து டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால், பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. மேலாண்மை குறைபாடுகளும் இதற்கு ஒரு முக்கியமான காரணம். ஒரு ரூபாய் வருமானம் வந்தால் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு மட்டும் சுமார் 2.50 ரூபாய் வரை செலவாகிறது. அதேபோல, சென்னை மாநகரத்தில் குடிநீர் வழங்க செலவு மிக அதிகம். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்துவதற்காக உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டிருப்பது மற்றும் பிற நகரங்களை போலல்லாமல் சென்னை மாநகராட்சியில் வீடுகள் வரை சென்று இணைப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பில் மெட்ரோ வாட்டர் நிர்வாகம் இருப்பது போன்ற காரணங்களால் அங்கு பிற நகரங்களை விட செலவு அதிகமாக இருக்கிறது என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார்.

சென்னை செலவீனம்
2021ம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி சென்னை மாநகர குடிநீர் வழங்கும் வாரியத்திற்கு 549 கோடி அளவுக்கு கடன் பாக்கி இருக்கிறது. குடிநீர் வழங்கல் வாரியத்தில் மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 2621 ஊழியர்கள் உள்ளனர். ஆனால் ஓய்வூதியதாரர் ஓய்வூதியதாரர்கள் 5818 என்ற அளவுக்கு உள்ளனர். ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு ஆண்டுக்கான செலவினம் 140 கோடி என்ற அளவுக்கு இருக்கிறது.

தண்ணீர் செலவு
ஒரு கிலோ லிட்டர் தண்ணீருக்கு இயக்க செலவு 20 ரூபாய் 81 பைசா என்ற அளவுக்கு இருக்கிறது. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு கிலோ லிட்டருக்கு 10 ரூபாய் 42 பைசா கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 8 ரூபாய் 10 பைசா என்ற அளவுக்குத்தான் குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் குடிநீர் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அரசு இருப்பதாக கூறப்படுகிறது என்கிறது ஐஏஎன்எஸ் ஏஜென்சி செய்தி.

எந்த மாதிரி கட்டிடங்கள்
சென்னையில் ஒரே நிலையான கட்டணத்தை பெரிய வீடுகளிலும் பிற இடங்களிலும் வசூலிக்கிறார்கள். சிறிய வீடுகளில் வசித்து வரும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அளவிடும் கருவிகள் மூலம் பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் செலுத்தி வருகின்றனர். எனவே பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள பெரிய பங்களா அல்லது பெரிய அளவிலான வீடுகள் போன்றவற்றிற்கு குடிநீர் கட்டணத்தை வேறுமாதிரி வசூல் செய்யலாம், அவர்களிடம் அதிகமாக வசூல் செய்யலாம் என்பதே திட்டமாக இருக்கிறது.

சமூக நீதி முக்கியம்
நிதி துறை அமைச்சர் தனது பேட்டியின்போது, போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கிய போதிலும் கூட, பெண்களுக்கு இலவசமாக பேருந்து பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சமூகநீதி விஷயத்தில் பணம் கணக்கு பார்க்கப்படுவது கிடையாது. அதற்கு பதிலாக வேறு பகுதிகளில் இருந்து பணத்தை மிச்சப்படுத்தலாம் என்று தெரிவித்திருந்தார். எனவே ஏழைகள் விஷயத்தில் கட்டணத்தை உயர்த்தி கை வைக்காமல், ஓரளவுக்கு செல்வந்தர்களிடம் இருந்து கூடுதலாக நிதி பெறுவது என்பது எப்போதுமே நிதி துறை அமைச்சரின் திட்டமாகவே இருந்துவந்துள்ளது. அவரது பழைய பேட்டிகளிலும் அதை கவனிக்க முடியும்.

கட்டண உயர்வு அச்சம் தேவையில்லை
இப்போது, வெள்ளை அறிக்கை எதிரொலியாக இதுபோன்ற திட்டங்களை கையில் எடுக்கக் கூடும் என்கிறார்கள். எனவே அனைவருக்குமே கட்டணம் உயர்ந்து விடும் என்ற அச்சம் தேவையில்லை. மேல்தட்டு வகுப்பினருக்கு மட்டும் வேறுமாதிரியான அதாவது கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டு, மற்றவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்பது தான் இந்த அரசின் திட்டமாக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளையறிக்கை
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளையறிக்கையின்படி, குடிநீர் வாரியம் உட்பட 26 அரசுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த நிதி சுமை காரணமாக இந்த அரசாங்கம் அதிகமாக அவர்களின் கடனுக்கு உத்தரவாதம் அளிக்க தேவை ஏற்படுகிறது. மின்சாரத் துறை, போக்குவரத்து கழகம் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் மட்டும் 2 லட்சம் கோடி கடன் வைத்துள்ளன. தமிழக மொத்த கடனில், 10% கடன்கள் மின்சாரத் துறை மற்றும் போக்குவரத்து துறைக்கு செலவிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications