வெப்பச்சலனத்தால் கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை... பலத்த காற்று வீசும்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனத்தின் காரணமாக கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. நீலகிரி, கோவை, சென்னை, புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவக்காற்றினால் கடந்த சில வாரங்களாகவே மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நீலகிரி, கோவை, மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரியில் 3 செமீ மழை பெய்துள்ளது. கோவை, சின்னக்கல்லார், சோலையாரில் 1 செமீ மழை பெய்துள்ளது. தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, தேனி, சென்னை, புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் உள் மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரைக்கும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
இன்று முதல் 23ஆம் தேதி வரைக்கும் அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.