ஜூலை 28.. ஒரே சான்ஸ்.. கெட்டியாக பிடிக்க ஓபிஎஸ் பிளான்- க்ளீன் ஸ்வீப்புக்கு காய்நகர்த்தும் எடப்பாடி!
சென்னை : கட்சியில் ஈபிஎஸ் கை ஓங்கியுள்ள நிலையில், ஓபிஎஸ் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதுதான் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பு. இந்நிலையில், சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசி, தனது சாதகமான முடிவுகளைப் பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.
அதேநேரம், எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காக டெல்லியில் காய்நகர்த்தி வருகிறார். ஓபிஎஸ்ஸை பிரதமர் சந்திக்கக் கூடாது என்றும் அவர் அழுத்தம் கொடுத்து வருகிறாராம்.
அதிமுகவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, பொதுக்குழு களேபரங்கள், நீதிமன்ற வழக்குகள், தேர்தல் ஆணைய முறையீடுகள் என இருந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் சென்னை வருகையும் அதிமுகவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சென்னை வரும் மோடி
சென்னையில் ஜூலை 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 28-ஆம் தேதி தொடக்கவிழா மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்று போட்டியை தொடங்கி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சென்னை வருவதற்கான திட்டங்களை பிரதமர் அலுவலகம் வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்திக்க திட்டம்
சென்னை வரும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுவதற்கு ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை கடுமையாக ஓங்கியுள்ள நிலையில், தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தை திறக்கும் உரிமையும் எடப்பாடி பழனிசாமியின் கைக்கே சென்றுள்ளது. நீதிமன்றத்தில் தன் முயற்சி பலிக்காததால் மத்திய பாஜக அரசின் ஆதரவை முழுமையாக நம்பியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

மோடியிடம் பேச
ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு முடிந்ததுமே அதிமுகவில் தனது இடத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் பாஜக தலைமையின் ஆதரவு கேட்டு டெல்லி சென்றார் ஓபிஎஸ். அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியாத நிலையில், பாஜகவின் மேலிட புள்ளிகளைச் சந்தித்து விட்டு நம்பிக்கையோடு திரும்பினார். ஆனாலும், பாஜகவின் ஆதரவுக் காற்று முழுமையாக ஓபிஎஸ் பக்கம் வீசவில்லை.

டெல்லியின் ஆதரவு
தொடர்ந்து டெல்லியின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் இறங்கி வருகிறார் ஓபிஎஸ். பிரதமர் மோடியுடன் பேசுவதற்காக டெல்லியில் ஓபிஎஸ் காய் நகர்த்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தரப்பு, தனக்கு சாதகமான பதில்களையே கூறி வருவதால், கட்சி நம் கையை விட்டுப் போகாது, கவலைப்படாதீர்கள் என தனது ஆதரவாளர்களிடம் நம்பிக்கையோடு பேசி வருகிறாராம் ஓபிஎஸ்.

ஈபிஎஸ் ஸ்கெட்ச்
அதேநேரம், எடப்பாடி பழனிசாமியும் சென்னை வரும் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்கான திட்டங்களைத் தீட்டி வருகிறாராம். தான் சந்திப்பது மட்டுமல்ல, ஓபிஎஸ்ஸை பிரதமருடன் சந்திக்க விடக்கூடாது என்பதற்கும் ஸ்கெட்ச் போட்டு வேலை செய்கிறாராம் ஈபிஎஸ். ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதால் ஓபிஎஸ்ஸை சந்திப்பதை பிரதமர் மோடி தவிர்க்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி இப்போதே டெல்லிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறாராம்.

மைலேஜ் கூடும்
ஒருவேளை, சென்னை வரும் பிரதமர் மோடி ஓ.பன்னீர்செல்வம் உடனான சந்திப்பைத் தவிர்த்து, எடப்பாடி பழனிசாமியை மட்டும் சந்தித்தால், டெல்லியின் ஆதரவு முழுமையாக ஈபிஎஸ் பக்கம் இருப்பதாகவே புரிந்து கொள்ளலாம். இது தனக்கு மேலும் மைலேஜ் ஏற்றித் தரும் என எடப்பாடி பழனிசாமி நம்புகிறாராம். அதனால், பாஜகவின் முக்கிய தலைகளுடன் இது தொடர்பாக பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

டெல்லி கையில்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தர்ம யுத்தம் நடத்தி பிரிந்து சென்ற நிலையில், ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரையும் இணைத்து வைத்து ஓபிஎஸ்ஸை துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளச் செய்ததே டெல்லிதான். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றுத்தான், எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து செயல்பட முடிவெடுத்ததாக வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார் ஓபிஎஸ்.
Recommended Video

சேர்த்து வைப்பாரா மோடி?
அந்த வகையில் இந்த முறையும் அதிமுக இணைப்பு பிரதமர் மோடியால் சாத்தியமாகுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. அதிமுக அதிகார யுத்தத்தில், எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ள நிலையில், நீதிமன்றத்திலும் கடும் சறுக்கல்களைச் சந்தித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். நெருக்கடியான காலகட்டத்தில், டெல்லியின் ஆதரவைத் தன் பக்கம் திருப்புவதில் ஓபிஎஸ் வெற்றி பெறுவாரா என்பது சென்னைக்கு பிரதமர் மோடி வந்து சென்ற பிறகு தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications