இந்த பக்கமும் சண்டை.. அந்த பக்கமும் மோதல்.. அப்ப மெகா கூட்டணி யாருடன்.. அதிமுக வியூகம் என்ன?
சென்னை: 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக அமைக்கும் மெகா கூட்டணி யாருடன் என்ற கேள்வி எழுகிறது.
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை பாஜகவுடன் இணைந்து அதிமுக களம் கண்டது. இதில் தமிழகத்தில் தேனி தொகுதியை தவிர்த்து ஏனைய தொகுதிகளில் அதிமுக பாஜக கூட்டணி தோல்வி அடைந்தது. இதையடுத்து நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தது.
இந்த நிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஆமோதித்துள்ளார். அது போல் 2021 இல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டது. எனினும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இரு கட்சிகள்
இந்த நிலையில் இரு கட்சிகளுடனும் அதிமுக கடும் மோதல் போக்கில் இருக்கிறது. அதாவது சென்னைக்கு அமித்ஷா வந்திருந்த போது அவரை எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று சந்திக்கவில்லை. இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு தனிப்பட்ட நிகழச்சிகளுக்கு வரும் அமித்ஷாவை ஒவ்வொரு முறையம் போய் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

மத்திய அரசின் ஜி 20 மாநாடு
அது போல் மத்திய அரசின் ஜி 20 மாநாடு ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டிருந்தார். ஆனால் காசி தமிழ் சங்கமம் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. அது போல் குஜராத்தில் பாஜக பதவியேற்பு விழாவில் பங்கேற்க எடப்பாடிக்கு அழைப்பு விடுத்தும் அவர் செல்லவில்லை.

மாநிலங்களவை உறுப்பினர்
இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினரான சி.வி.சண்முகம் நெய்வேலியில் நடந்த அதிமுகு போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கும் என தெரிவித்திருந்தார். இதற்கு அண்ணாமலை பதிலடி கொடுக்கும் போது ஒரு கட்சியின் கூட்டணி விவகாரத்தை தலைமைதான் முடிவு செய்யும். எனவே பாஜகவில் சி.வி.சண்முகம் சேர்ந்து விட்டாரா என தெரியவில்லை. நான் கமலாலயத்திடம் கேட்டு சொல்கிறேன் என தெரிவித்திருந்தார்.

கூட்டணி
ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுகவும் பாஜகவும் மாறி மாறி கடுமையாக விமர்சித்துக் கொண்டனர். அது போல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது அக்கட்சியுடன் பாமக கூட்டணி வைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டு ஜெயலலிதாவை பாமக ராமதாஸ் கடுமையாக விமர்சிக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.

பாமக தலைவர் அன்புமணி
இந்த நிலையில் கடந்த புத்தாண்டு அன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாமகவினரை சந்தித்தார். அப்போது அதிமுக நான்காக உடைந்துவிட்டது. இனி நாம்தான் இருக்கிறோம். கட்சிக்காக உழையுங்கள் என தெரிவித்திருந்தார். இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

1998 ஆம் ஆண்டு நடந்த சம்பவம்
அதில் அதிமுக இல்லாவிட்டால் பாமகவுக்கு அங்கீகாரமே கிடைத்திருக்காது. 1998ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக 5 இடங்களில் 4 இடங்களில் வென்றது. இதன் மூலம் தேர்தல் ஆணையம் பாமகவை அரசியல் கட்சியாக அங்கீகரித்தது. அன்புமணி எம்பியானதற்கும் அதிமுகதான் காரணம். எனவே அதிமுக நான்காக உடைந்துவிட்டது என சொல்ல வேண்டாம்.

பதிலடி கொடுப்போம்
நாங்கள் பதிலடி கொடுக்க நேரிடும். உங்கள் கட்சி குறித்து எதுவாக இருந்தாலும் பேசி கொள்ளுங்கள் எங்களை ஏன் இழுக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பாமக வழக்கறிஞர் பாலு பேட்டி அளிக்கையில் அதிமுக நான்காக உடைந்திருக்கிறது என்பது குழந்தைக்குக் கூட தெரியும். எங்களால்தான் அதிமுக ஜெயித்தது என நாங்கள் எங்கும் கூறவில்லை. 2019 ஆம் ஆண்டு நடந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியை தக்க வைக்க பாமகதான் காரணம் என தெரிவித்திருந்தார்.

ஜெயக்குமாரின் பேச்சு
ஜெயகுமாரின் இந்த பேச்சு குறித்து அன்புமணி பேசுகையில் நான் பேசிய கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி கேட்கட்டும் நான் பதில் சொல்கிறேன் என்றார். ஆனால் எடப்பாடி பழனிசாமி இதுவரை எதையுமே பேசவில்லை. அது போல் பாஜக திமுக கூட்டணி என சி.வி.சண்முகம் கூறிய விவகாரத்திலும் எடப்பாடி பழனிசாமி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. சி.வி.சண்முகத்தின் விமர்சனம் குறித்து பாஜக நிர்வாகிகளிடம் கேட்ட போது எடப்பாடி பழனிசாமி எதுவும் சொல்லவில்லையே, பிறகு ஏன் மற்றவர்கள் பேசுவதை நாம் பொருட்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் திமுகவும் சரி பாஜகவும் சரி கட்சித் தலைமையை மட்டுமே நம்பியுள்ளார்கள். மற்ற நிர்வாகிகள் எதை பேசினாலும் நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது.

அண்ணாமலை சொல்வது என்ன
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எங்கு சென்றாலும் 2024 ஆம் ஆண்டு 20 க்கும் மேற்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வர் என்கிறார். அது போல் கூட்டணி குறித்து அன்புமணியிடம் கேட்ட போது தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு முடிவு செய்வோம். மேலும் பாமக தலைமையில்தான் கூட்டணி என்றும் தெரிவித்தார். அப்படியானால் பாஜகவும் பாமகவும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயாராக இல்லையா என்ற கேள்வி எழுகிறது. அப்படியானால் எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி என யாரை குறிப்பிடுகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications