அடித்து ஆடும் அதிமுக.. உள்ளே வந்த "நிர்மல்".. எடப்பாடி தந்த பெரிய டாஸ்க்! பாஜக மட்டுமல்ல திமுகவுமாம்
சென்னை: அதிமுகவிற்கு பாஜகவின் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் வந்துள்ளது அதிமுகவிற்கு இணையத்தில் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி சமூக வலைத்தளங்களில் அதிமுக அடித்து ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவில் அறியப்படும் முகமாக இருந்தவர்கள் வரிசையாக வெளியேறி வருகிறார்கள். காயத்ரி ரகுராம், எம்எல்ஏ சரவணன் வரிசையில் தற்போது நிர்மல் குமார் இணைந்துள்ளார்.
பாஜகவின் ஐடி விங்கை தமிழ்நாட்டில் புதிய உயரத்திற்கு கொண்டு சென்றதில் நிர்மல் குமாருக்கு முக்கியமான பங்கு. இன்னும் கிரவுண்டில் பாஜக பெரிதாக வளரவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் பாஜக பெரிய அளவில் பிரபலமாக இருக்க தமிழ்நாட்டில் நிர்மல் குமார் முக்கிய காரணம்.

அக்ரஸிவ்
இவர் ஆக்ரோஷமான அரசியல் பாணியை கொண்டவர். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து புகார்களை வைத்து எதிரணியை பதில்கள் சொல்ல வைக்க கூடியவர். பொதுவாக அரசியல் ஐடி விங்குகளில் இது மிக முக்கியம். அதை செய்ததன் மூலம்தான் நிர்மல் குமார் பாஜகவின் ஐடி விங்கை பிரபலப்படுத்தினார். இந்த நிலையில்தான் அவர் தற்போது பாஜகவில் இருந்து வெளியேறி இருக்கிறார். அண்ணாமலை மீது கடுமையான புகார்களை வைத்துவிட்டு அவர் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார். நிர்மல் குமார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்.

என்ன சொன்னார்?
பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை. அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் "மனநலம் குன்றிய மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது. 2019யில் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது, அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம்.

அதிமுக
எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்? மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்? , என்று குறிப்பிட்டு உள்ளார். நிர்மல் குமார் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். நிர்மல் குமாரின் இந்த வருகை அதிமுகவிற்கு அரசியல் ரீதியாக பெரிய பலன் அளிக்கும் என்று எதிர்பாப்படுகிறது. ஏனென்றால் அவர் ஐடி விங் பிரிவில் சிறப்பாக செயல்பட கூடியவர்.

அதிமுக மோதல்
அதிமுக உட்கட்சி மோதல் காரணமாக அக்கட்சி தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் சிதறுண்டு கிடந்தனர். முக்கியமாக நிர்வாகிகள் பல பிரிவுகளாக பிரிந்து கிடந்தனர். இந்த நிலையில் நிர்மல் குமார் வருகையால் அக்கட்சியின் சமூக வலைதள டீம் மீண்டும் புத்துயிர் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக வட்டாரத்தில் விசாரித்ததில் எடப்பாடி, நிர்மலுக்கு புதிய டாஸ்க் ஒன்றையும் கொடுத்து இருக்கிறாராம். தன்னை ஒற்றை தலைமையாக முன்னிறுத்துவது பற்றி அவர் பேசி உள்ளாராம். இதற்கான பணிகளை நிர்மல் விரைவில் சமூக வலைத்தளங்களில் முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வப்போது இனி அதிமுக பாஜகவையும் அட்டாக் செய்யும் வாய்ப்புகள் உள்ளன. அக்ரஸிவ் சமூக வலைதள அரசியல் செய்யும் நிர்மல் அதிமுகவிற்கு சென்றுள்ளதால் திமுகவிற்கும் சமூக வலைத்தளங்களில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications