அவங்க எல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. திருமாவுக்கு கேசிஆர் கொடுத்த ‘மெசேஜ்’.. உற்று நோக்கும் கட்சிகள்!
சென்னை : தெலுங்கானா முதல்வரும், பிஆர்எஸ் கட்சியின் தேசிய தலைவருமான சந்திர சேகர் ராவ், விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஒரு முக்கியமான உறுதிமொழியைக் கொடுத்திருக்கிறார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விசிக தலைவர் திருமாவளவனுடன் காட்டிய நெருக்கம் அரசியல் அரங்கில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
கட்சியை தேசியக் கட்சியாக அறிவிக்கும் விழாவுக்காக திருமாவளவனை ஹைதராபாத் அழைத்த கேசிஆர், அவருடன் நீண்ட நேரம் தேசிய அரசியல், தமிழக அரசியல் நிலை பற்றி ஆலோசித்துள்ளார்.
தேசிய அரசியலை நோக்கி முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ள கேசிஆர், திருமாவளவனிடம் சொன்ன விஷயங்கள் அரசியல் கட்சிகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளன

கேசிஆருடன் திருமாவளவன்
தேசிய அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கும் தெலுங்கானா முதலமைச்சரும் டிஆர்எஸ் தலைவருமான சந்திரசேகர ராவ், பாரத் ராஷ்ட்ரிய சமிதி என தனது கட்சியை தேசிய கட்சியாக மாற்றி அறிவித்துள்ளார். இதற்காக அவர் நடத்திய விழாவில் விசிக தலைவர் திருமாவளவன், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, தெலுங்கானா முதல்வர் மாளிகையில் திருமாவளவன், குமாரசாமி, விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், முக்கியத் தலைவர்களுடன் இணைந்து காலை சிற்றுண்டி சாப்பிட்டார் கேசிஆர்.

தேசிய கட்சியாக மாற்றம்
தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனது கட்சியை தேசிய கட்சியாக மாற்றி அறிவித்த மேடையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, "தெலுங்கானா மக்களுக்காகத் தனி மாநிலத்தைச் சாதித்துக் காட்டிய சந்திர சேகர ராவ், தற்போது இந்திய மக்களுக்காகச் சாதிக்க உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி கேசிஆருக்கு பக்கபலமாக இருக்கும்." என்றார்.

பாஜகவுக்கு ஆதரவாக?
மேலும், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து, இந்தியாவில் பிரிவினையைத் தூண்டும் சக்திகளை வீழ்த்த வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டியது அவசியம். காங்கிரஸ் அல்லாத அணி அமைந்தால் அது பாஜகவுக்கு ஆதரவாக பயணிப்பதாக அமைந்துவிடும். ஜனநாயகத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாத்திட வேண்டியது அவசியம் எனப் பேசினார்.

திருமா வைத்த கோரிக்கை
மேலும், ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க இந்திய அரசுக்குப் பரிந்துரைத்த மண்டல் அவர்களுக்கும் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி, சிறுபான்மையினர் ஆகிய பகுஜன் மக்களுக்காகப் பாடுபட்ட கான்ஷிராம் அவர்களுக்கும் சிலைகள் எழுப்ப வேண்டும் என கேசிஆரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் திருமாவளவன். அதற்கு கேசிஆரும், நிச்சயமாக தெலுங்கானாவில் அவர்களுக்கு சிலைகளை நிறுவுவோம் என உறுதியளித்துள்ளார்.

கேசிஆர் - திருமா ஆலோசனை
நேற்று பிற்பகலில் கேசிஆரை சந்திக்கச் சென்ற திருமாவளவனிடம் தேசிய அரசியல் பற்றி ஆலோசித்தார் கேசிஆர். இந்த ஆலோசனையின்போது, காங்கிரஸ் கட்சி இல்லாமல் எவ்வளவு பெரிய கூட்டணியை அமைத்தாலும், அது பாஜகவுக்கு சாதகமாகவே அமையும், காங்கிரஸ் கட்சி உள்ளடங்கிய கூட்டணியை நீங்கள் அமைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் சக்தி வாய்ந்தவர் நீங்கள் என திருமாவளவன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேசிஆர் கொடுத்த மெசேஜ்
இதையடுத்து ஒரு முக்கியமான மெசேஜை திருமாவளவனுக்கு கொடுத்திருக்கிறார் சந்திரசேகர் ராவ். பாஜகவை வீழ்த்திவிடலாம், நல்ல பலனை சீக்கிரம் பார்ப்பீர்கள் எனக் கூறியுள்ளார் கேசிஆர். திருமாவிடம், "உங்கள் சகோதரன் இங்கே இருக்கிறேன். ஹைதராபாத் உங்கள் இல்லம். எப்போது வேண்டுமானாலும் வரலாம்; என்னைச் சந்திக்கலாம். பாஜகவைப் பற்றி பயம் வேண்டாம். அவர்களை எளிதில் வீழ்த்தலாம். நாம் இணைந்து செயல்படுவோம்." என நம்பிக்கை அளித்துள்ளார்.

உன்னிப்பாக கவனிக்கும் கட்சிகள்
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது எனப் பேசி வருகிறார் சந்திரசேகர் ராவ். பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கட்சிகள் ஒன்று திரள வேண்டும் என்று அவர் கூறி வருகிறார். விசிக தலைவர் திருமாவளவனும், இதே கருத்தோடு தான் இருக்கிறார். நாடு முழுவதுமுள்ள கட்சிகள் ஒன்றிணைந்தால் தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்பது அவரது கருத்தாக இருக்கிறது. இந்நிலையில் தான் இவர்கள் இருவரின் நெருக்கமும் அரசியல் கட்சிகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications