கஜானாவை திறந்து பார்த்தா.. அதிர்ச்சி.. உள்ளே இருந்த அந்த துண்டு சீட்டு! புட்டு புட்டு வைத்த அமைச்சர்
சென்னை: அதிமுக ஆட்சியின் கீழ் அனைத்து துறையின் கஜானாவும் காலி செய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆளும் திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்த நிலையில், திமுக சார்பாக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக பேச்சாளர்கள் பலர் களத்தில் இறங்கி பல்வேறு இடங்களில் கூட்டம் நடத்தி வருகிறார்கள்.
திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள், செய்தி தொடர்பாளர்கள், பிரபல திமுக பேச்சாளர்கள் மூலம் பொது கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மோடி சர்வ வல்லமையோடு இருக்கிறார்... திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல - அமைச்சர் ராமச்சந்திரன்
என்ன சொன்னார்?
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் நேற்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் நேற்று பேசினார். அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசிய அவர், திமுக சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறது. ஆட்சிக்கு எதிராக எந்த குறைகளும் இல்லை. எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைக்க முடியாமல் திணறி வருகின்றன.
சிறப்பான ஆட்சி
ஆட்சி அவ்வளவு சிறப்பாக இருக்கிறது. எங்களுக்கு கெட்ட பெயர் இல்லை. 1 ஆண்டு ஆட்சி முடிந்துவிட்டது. இன்னும் 20 வருடத்திற்கு முதல்வராக ஸ்டாலின்தான் இருக்க போகிறார். எங்களுக்கு எதிரிகளே இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் நிதி நிர்வாகம் மோசமாக இருந்தது. இதனால்தான் இன்னும் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவேயில்லை.
வாக்குறுதி
நாங்கள் வாக்குறுதி கொடுத்த போது கஜானாவை நம்பித்தான் கொடுத்தோம். ஆனால் கஜானாவை ஆட்சிக்கு வந்ததும் திறந்து பார்த்தோம். பார்த்தால் கஜானாவில் ஒன்றுமே இல்லை.. உள்ளே ஒரே ஒரு துண்டு சீட்டுதான் இருந்தது. அந்த துண்டு சீட்டில் பார்த்தால்.. 4 லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறப்பட்டது. அந்த அளவிற்கு அதிமுக மோசமான ஆட்சியை செய்து இருக்கிறது.
ஒற்றுமை இல்லை
இப்போது அவர்களுக்கு உள்ளேயே ஒற்றுமை இல்லை. அவர்களே தங்களுக்கு உள்ளே அடித்துக்கொள்கிறார்கள். அவர்களால் ராஜ்ய சபா எம்பியை கூட தேர்வு செய்ய முடியவில்லை. அதிமுக கட்சியே காணாமல் போய்கொண்டு இருக்கிறது. இப்போது கஜானா காலியானதால் இல்லத்தரசிகளுக்கு விரைவில் மாதம் ரூ. 1000 ரூபாய் கொடுக்க முடியாமல் உள்ளது.
தமிழ்நாடு முன்னேற்றம்
ஆனால் நாங்கள் தமிழ்நாட்டை வேகமாக முன்னேற்றி வருகிறோம். விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். அதிமுக தமிழ்நாட்டை மிக இக்கட்டான நிலையில் விட்டு சென்றது. அதில் இருந்து தமிழ்நாட்டை மீட்டு வருகிறோம் என்று அமைச்சர் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.