மாற்றம் தெரியுது.. விடாதீங்க.. அண்ணாமலைக்கு மோடி கொடுத்த சிக்னல் - ராஜ் பவன் ஹாலில் நடந்தது என்ன?
சென்னை : சென்னை வந்திருந்த பிரதமர் மோடி, நிகழ்ச்சியை முடித்துவிட்டு, கிண்டி ராஜ் பவனில் ஓய்வெடுக்கச் சென்றபோது, பாஜக நிர்வாகிகளைச் சந்தித்து சுமார் முக்கால் மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி என்ன பேசினார் என்பது குறித்த தகவல்கள் லேசாக கசிந்துள்ளன.
இந்த ஆலோசனையின்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றியும், பாஜக செயல்பாடுகள் பற்றியும் கேட்டறிந்த பிரதமர் மோடி, சில முக்கிய ஆலோசனைகளையும் தமிழக நிர்வாகிகளுக்குத் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகளையும், மத்திய அரசை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருவது பற்றியும் புகார் கூறியுள்ளனர் பாஜக நிர்வாகிகள். அதை ஆமோதித்துக் கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி அதனால் ஒன்றும் பிரச்சனை வராது எனக் கூறியுள்ளார்.

ராஜ் பவனில் மீட்டிங்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடி, தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்.எல்.ஏக்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.

புதிய நிர்வாகிகள்
இவர்களோடு அமர்பிரசாத் ரெட்டி, ஏ.பி.முருகானந்தம், இயக்குநர் பேரரசு, நடிகர் ஆர்.கே.சுரேஷ், இசையமைப்பாளர் தீனா, குஷ்பூ, மாநில-மாவட்ட நிர்வாகிகள் பலரும் மோடியை சந்தித்துள்ளனர். புதிய நிர்வாகிகள் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச வேண்டும் என்பதற்காக முன்பே நேரம் கேட்கப்பட்டு, அவர்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பல்வேறு விஷயங்கள்
இந்தச் சந்திப்பின்போது பல்வேறு விஷயங்கள் குறித்து பாஜக நிர்வாகிகள் பிரதமர் மோடியிடம் பேசியுள்ளனர். குறிப்பாக, பாஜக நடத்தும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு சமீபகாலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு பிரதமர் மோடி மகிழ்ந்து, அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளை பாராட்டியுள்ளார். அண்ணாமலைக்கு சில யோசனைகளையும் மோடி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மாற்றம் தெரிகிறது
மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழகம் வந்ததற்கும் இப்போது வருவதற்கும் நிறைய மாற்றம் தெரிகிறது, கடந்த முறை நமது கூட்டணிக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் கூட இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை, இப்போது நமக்கு இவ்வளவு மக்கள் ஆதரவு கிடைப்பது திமுக அரசு மீது அதிருப்தி இருப்பதையே காட்டுகிறது, பாஜகவை தமிழக மக்கள் சிறப்பாக வரவேற்று வருகின்றனர். இதை அப்படியே தொடரச் செய்ய வேண்டும், நாடாளுமன்றத் தேர்தலில் சாதித்து விடலாம் என பிரதமர் மோடி நம்பிக்கையோடு பேசியதாகக் கூறப்படுகிறது.

மோடி சொன்ன அட்வைஸ்
மேலும், பொறுப்புக்கு வந்தபிறகு மக்களைச் சந்திக்காமல், யாரையும் மதிக்காமல் வேலை செய்யக்கூடாது. மத்திய பாஜக அரசை மக்கள் எப்படி பார்க்கின்றனர் என தொடர்ந்து களத்திலேயே இருந்து பார்த்து, சீனியர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் புதிதாக பொறுப்பேற்றவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் மோடி. மேலும் மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் பிரதமர் மோடி.

அதிமுக விவகாரம்
இந்தச் சந்திப்பின்போது அதிமுக விவகாரம் பற்றியும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் பாஜகவுக்கு எதிராகப் பேசி வருவதாகவும் தமிழக பாஜக நிர்வாகிகள் மோடியிடம் தெரிவித்துள்ளனர். இதனால் இப்போது வெளிப்படையாக யாருக்கும் எந்த ஆதரவும் தெரிவிக்க வேண்டாம், விட்டுப் பிடிப்போம் என ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications