அதென்ன “கடவுள் செயல்”.. தவறு செய்பவர்கள் தப்பிக்கும் வழியா? இதற்கென சட்ட விதிகள் வேற இருக்காம்
காந்திநகர்: குஜராத் பாலம் அறுந்து விழுந்த விபத்து தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பாலத்தை பராமரிக்க ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தின் மேலாளர் இது கடவுளின் விருப்பம் என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில் கடவுளின் செயல் என்றால் என்ன? அதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா என்பதை பார்ப்போம்.
உலகம் அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி என பல துறைகளில் இமாலய முன்னேற்றம் அடைந்தாலும், கடவுள் நம்பிக்கை என்பது மக்கள் மத்தியில் மறையாமல் அப்படியே இருக்கிறது.
கடவுள் மறுப்பாளர்கள் ஒரு பக்கம், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரங்கள், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் மக்கள் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றி கடவுள் வழிபாட்டில் ஈடுபடவே செய்கிறார்கள்.
குஜராத் பால விபத்து.. 9 பேருக்கு சிறை - 2 முறை அதே காண்டிராக்டர்! “அன் ஃபிட்” என நீதிமன்றம் கருத்து
கடவுள் செயல்
இவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், உலகில் ஏதாவது ஒரு நண்மை, தீமை நடந்தால் அதற்கு கடவுள்தான் காரணம் என்று கூறுகிறார்கள். தாங்கள் நினைத்தது நடக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். வேண்டியபடி நினைத்து நடந்து ஏதாவது சாதித்தால் பெரும்பாலானோர் கடவுளை மறந்துவிடுகின்றனர்.
சக்திக்கு மீறிய செயல்
ஆனால், தவறாக ஏதாவது அரங்கேறினால் அந்த தவறை நான் செய்தேன் ஏற்றுக்கொள்ளாமல் கடவுள் மீது பழிசுமத்தும் பழக்கம் அதிகம் இருக்கிறது. தங்கள் கையை மீறிய, மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஏதாவது ஒரு நிகழ்வு நடந்தால் அது கடவுளின் செயல் எனப்படுகிறது. குறிப்பாக குஜராத்தில் இந்த பாலம் அறுந்த விபத்தில் 134 பேர் உயிரிழந்ததை கடவுளின் செயல் என்று கூறி வருகிறார்கள்.
குஜராத் பாலம்
குஜராத் பாலம் புணரமைக்கப்பட்டபோது பழைய கேபிளை மாற்றாமல் அப்படியே பயன்படுத்தியது, நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாக மக்களை அனுமதித்தது, அதிக எடைகொண்ட 4 அடுக்கு அலுமினியம் தரையை பயன்படுத்தியது போன்றவை விபத்துக்கு காரணம் என்று தடயவியல் அறிக்கை கூறுகிறது. ஆனால், இதை கடவுளின் செயல் என பராமரிப்பு நிறுவன மேலாளர் நீதிமன்றத்திலேயே கூறி இருக்கிறார்.
பேரிடர்கள்
சட்டத்தின் அடிப்படையில் எடுத்துக்கொண்டால் பேரிடர் நேரங்களில் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகளின்போது கடவுளின் செயல் என்ற சொற்றொடர் அதிகம் பயன்படுத்தப்படும். பேரிடர் காலத்திலும் மனித அலட்சியங்களால் விபத்துக்கள், உயிரிழப்புகள் நிகழ்ந்தாலும், இந்த சொற்றொடரை சொல்லி தப்பிக்க பல முயல்வது உண்டு.
சட்டங்கள்
சுனாமி, நிலநடுக்கம், புயல் போன்ற நேரத்தில் ஏற்படும் விபத்துக்களை இதுபோல் அழைப்பார்கள். எந்த உத்திரவாதமும், நடைமுறைக்கு சாத்தியமற்ற சம்பவங்கள் நிகழ்கையில் அதை இந்த சொற்றொடரை கொண்டு அழைப்பது வழக்கம். பல நாடுகளில் கடவுளின் செயலுக்கான சட்டங்கள் வகுக்கப்பட்டு இருக்கின்றன.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
ஆனால் அவை ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடக்கூடியவை. சில நாடுகள் கடவுள் செயல் என்ற சொற்றொடரையே ஏற்பதில்லை. அதற்காக விதிகளை வகுக்கவும் இல்லை. குறிப்பாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீட்டு தொகை வழங்குவதில் இருந்து தப்பிக்க பல நேரங்களில் இந்த சொற்றொடரை பயன்படுத்துவார்கள்.
எளிட வழி
கடவுளின் செயல் என்ற விதியின் கீழ் நடக்கும் விபத்துகளுக்கு காப்பீட்டு தொகையை பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்குவது கிடையாது. இப்படி இன்சூரன்ஸ் நிறுவனங்கள், குற்றவாளிகள் வழக்குகள், தண்டனைகளில் இருந்து தப்பிக்கவும் இந்த வார்த்தையை தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.