கீமோதெரபின்னாலே பயப்படணுமா.. தேவையில்லங்க.. இதைப் படிங்க!
மனித உடல் பல செல்களாலானது. உடல் தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயல்பாகவே புதிய செல்களை தானே உருவாக்கிக் கொள்ளும். இவ்வாறு தொடர்ச்சியாக செல்களை உருவாக்கிக் கொள்ளும் செயல்முறையில் முன்னமே உருவான பழைய செல்கள் தானே அழிந்து வெளியேறாமல் உடலிலேயே தங்கி நாளடைவில் அதுவே கட்டியாக மாறும் நிலையைத் தான் நாம் புற்றுநோய் என்று குறிப்பிடுகிறோம்.
புற்றுநோயின் முக்கியச் சிகிச்சைகளில் ஒன்றுதான் இந்த கீமோதெரபி. நிறையப் பேருக்கு கீமோ தெரபி என்றால் என்ன என்று தெரிவதில்லை . அவர்களுக்காகவே இந்த கட்டுரை.
கீமோதெரபி என்றால் என்ன?
கீமோதெரபி சுருக்கமாக கீமோ என்பது புற்றுநோய் எனப்படும் கேன்சர் நோயாளிகளுக்கு மருத்துவர்களால் பெரிதும் பரிந்துரைக்கப்படும் சிகிச்சை முறையாகும். இவ்வகையான சிகிச்சை முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேன்சர் செல்களின் பெருக்கத்தைக் குறைக்கவும் அதன் வளர்ச்சியைத் தடுக்கவும் மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் சக்தி வாய்ந்தவையாகும்.
கீமோதெரபி சிகிச்சை முறை பல வழி முறைகளில் அளிக்கப்படுகிறது.
மருந்துகளாகவும், கேப்ஸ்யூல்களாகவும், திரவங்களாகவும் வாய்வழியாக அளிக்கப்படுகின்றன.
ஊசிகள் மூலம் நரம்பு வழியாகவும் செலுத்தப்படுகின்றன.
சிலருக்கு தோலில் மேற்பூச்சாகவும் அளிக்கப்படுகின்றன.
அறுவை சிகிச்சைக்கு முன் புற்றுநோய் கட்டிகளின் அளவை சுருங்க வைக்கவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடலில் ஏதேனும் கேன்சர் செல்கள் மீதமிருந்தால் அதை முற்றிலுமாக நீக்கவும், மேலும் அதன் வளர்ச்சியைத் தடுக்கவும் கீமோதெரபி சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது. நோயை முழுமையாகக் குணப்படுத்த சாத்தியமில்லாத நிலையில் நோயின் தீவிரமான முன்னேற்றத்தைத் தடுக்கவும் இவ்வகையான சிகிச்சை முறை தேவைப்படுகிறது.
கீமோதெரபி சிகிச்சை நாளொன்றுக்கு ஒரு முறை என்று சில, பல வாரங்கள் வரை தொடர்ச்சியாகவோ அல்லது ஒரு முறை சிகிச்சைக்குப் பிறகு இரண்டு, மூன்று வாரங்கள் கழித்தோ சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இது நோயின் தாக்கத்தையும், தீவிரத்தையும் பொருத்து மாறுபடும்.
கீமோவின் பக்க விளைவுகள்
கீமோதெரபி சிகிச்சைமுறை பல நன்மைகளைப் பெற்றிருந்தாலும், சில பக்க விளைவுகளையும் உள்ளடக்கியிருக்கிறது. ஏனெனில் இவ்வகையான சிகிச்சை முறையில் அளிக்கப்படும் மருந்துகள் கேன்சர் செல்களை அழிக்கும் செயல்முறையில் கேன்சர் செல்களை மட்டும் அழிக்காமல் ஆரோக்கியமான செல்களையும் அழிக்க நேரிடுகிறது.
எனவே தான் சோர்வு, மலச்சிக்கல், வாந்தி, குமட்டல், பசியின்மை, முடி உதிர்வு, தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இவை நோயின் தன்மை மற்றும் சிகிச்சை முறை பொருத்து மாறுபடக் கூடும். பெரும்பாலான நோயாளிகளுக்கு நோயின் தொடக்க நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டால் அது நோயின் பிடியிலிருந்து முழூவதுமாக விடுபட ஏதுவாக இருக்கும்.
நோயாளிகள் இவ்வகையான சிகிச்சை முறையை மேற்கொள்ளும் முன்னர் மருத்துவர்களிடம் தகுந்த ஆலோசனைகளைப் பெற்று மனதையும், உடலையும் தயார் நிலையில் வைத்திருத்தல் மிகவும் அவசியம்.
- வருணி