உதயநிதி சொன்ன ‘டெல்லி’ விஷயம்.. பிளானே வேறயாம்.. ‘தலை’ கொடுத்த சிக்னல்.. பின்னணி என்ன?
சென்னை : இன்று உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்ட ஒரு விஷயம் பற்றி திமுக வட்டாரத்தில் சில பரபர தகவல்கள் கூறப்படுகின்றன.
தொடர்ந்து, இந்தியை திணிக்க முயன்றால் அடுத்தககட்ட போராட்டம் டெல்லியில் நடத்தப்படும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.
இன்றைய ஆர்ப்பாட்டமே டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டது தான், சில காரணங்களால் தான் இப்போது தமிழகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது எனக் கூறுகின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.
முதல்வர் ஸ்டாலின், தேசிய அளவில் கவனம் ஈர்க்க அடுத்தகட்டமாக டெல்லியில் நடத்தலாம் எனக் கூறியதன் அடிப்படையிலேயே உதயநிதி இவ்வாறு பேசினார் என்கின்றனர்.

இந்தி திணிப்புக்கு எதிராக முழக்கம்
மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு மற்றும் இந்தி திணிப்புக்கு எதிரான முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.

மோடி அவர்களே, அமித்ஷா அவர்களே
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, "திமுகவின் முக்கியமான கொள்கை இந்தி எதிர்ப்பு, இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம். அதிலிருந்து நாங்கள் சற்றும் விலகமாட்டோம், விட்டுக் கொடுக்கமாட்டோம். அது எங்கள் மாநில உரிமை. இப்போது வெறும் ஆர்ப்பாட்டம்தான் நடத்தியிருக்கிறோம். இதை போராட்டமாக மாற்றுவதா வேண்டாமா என்பது உங்கள் கையில்தான் உள்ளது. மோடி அவர்களே, அமித்ஷா அவர்களே முன்புபோல இங்கு நடந்து கொண்டிருப்பது அதிமுக ஆட்சி இல்லை. இப்போது முதல்வராக இருப்பவர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" எனப் பேசினார்.

டெல்லியில் வந்து
3 மொழிப்போர்களை சந்தித்தது திமுக. அதில் இரண்டை நடத்தியது திமுகவின் மாணவர் அணிதான். தற்போது மாணவர் அணியுடன் இளைஞர் அணியும் சேர்ந்து இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் களமிறங்கியிருக்கிறோம். முதற்கட்ட போராட்டம் கருணாநிதி கட்டிக் கொடுத்த வள்ளுவர் கோட்டத்தில் நடத்தியிருக்கிறோம். நீங்கள் இந்தி திணிப்பை கையில் எடுத்தால், அடுத்தகட்ட போராட்டம் தமிழகத்தில் மட்டும் நடக்காது, தலைவரின் ஆணையைப் பெற்று டெல்லியில் வந்து போராட்டம் நடத்துவோம்." எனப் பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

டெல்லியில் நடத்த திட்டம்?
இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தையே தலைநகர் டெல்லியில் நடத்துவதாகத்தான் முன்னர் திட்டம் இருந்ததாம். பிறகு தான் தமிழகத்தில் இப்போதைக்கு நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது என திமுக வட்டாரத்தில் தகவல்கள் பரபரக்கின்றன. இந்தி திணிப்பு முயற்சியைக் கண்டித்து அறிக்கை விட்ட கையோடு, திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன், உதயநிதி ஆகியோரிடம், இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இடம் கன்பார்ம்?
இதையடுத்து, மாணவரணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன், டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்து அறிக்கை தயார் செய்து உதயநிதி ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ளார். மறைந்த உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ்வின் இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்பதாக அங்கு சென்றிருந்த உதயநிதி ஸ்டாலின், எழிலரசனை தொடர்பு கொண்டு, முதல்வரிடம் இடத்தை கன்பார்ம் செய்துவிட்டீர்களா எனக் கேட்டுள்ளார்.

தேசிய அளவில் கவனம்
இதையடுத்து மு.க.ஸ்டாலினிடம் எழிலரன் பேசியுள்ளார். டெல்லியில் போராட்டம் நடத்தும் முடிவை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்தி திணிப்புக்கு எதிராக பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் குரல் கொடுத்து வருவதால், டெல்லியில் போராட்டம் நடத்தில் பெரிய அளவில் கவனம் கிடைக்கும், தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என விவாதிக்கப்பட்டுள்ளது.

முடிவு மாற்றம்
ஆனாலும், டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் குறைவான கூட்டமே திரட்ட முடியும். மற்ற கட்சிகளுக்கு எல்லாம் அழைப்பு விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்த தாமதமாகும். இப்போதைக்கு தமிழகத்திலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை பெரிய அளவில் நடத்தலாம், டெல்லியில் ஆர்ப்பாட்டத்தை முடிவெடுப்பது பற்றி அப்புறம் முடிவெடுக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சி
இதையடுத்தே சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆனாக், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கென சில இடங்கள் அரசால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியாக இருக்கும் நாம் அதை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது சரியாக இருக்காது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே வள்ளுவர் கோட்டத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.

உதயநிதி கொடுத்த க்ளூ
டெல்லியில் போராட்டம் நடத்துவது பற்றி முன்னர் ஆலோசிக்கப்பட்டது, பிறகு மற்ற கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து டெல்லியில் நடத்திக் கொள்ளலாம், இப்போது தமிழகத்தில் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது ஆகியவற்றை மனதில் வைத்தே டெல்லியில் போராட்டம் நடத்துவோம் என உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் பேசினார் என்கிறார்கள் திமுகவினர்.












Click it and Unblock the Notifications