திடீர் குஜராத் பயணம் ஏன்? "டைரக்ட் டீல்”.. எடப்பாடிக்கு நெருக்கடி.. பிளான் சொல்லும் ஓபிஎஸ் ஆதரவாளர்!
சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் குஜராத்துக்கு புறப்பட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். ஓபிஎஸ் திடீரென குஜராத் செல்வது ஏன் என்பது பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர் கண்ணன் பேசியுள்ளார். பாஜக தேசிய தலைமையே இறுதி முடிவெடுக்கும் என்பதால், தேசிய தலைவர்களை சந்தித்துப் பேசவுள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கண்னன் தெரிவித்துள்ளார்.
நேற்று ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு கோரினர். எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் அண்ணாமலையைச் சந்தித்து ஆதரவு கோரினர்.
இருவரும் தனித்தனியாக களமிறங்குவதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக யாரை ஆதரிக்கும் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், திடீரென குஜராத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் ஓபிஎஸ்.
இடைத்தேர்தல் பரபரப்புக்கிடையே ஃப்ளைட் ஏறிய ஓபிஎஸ்.. குஜராத் பயணம்..
ஓபிஎஸ் அணி போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றால், தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம். அதேநேரத்தில், பாஜக போட்டியிடுவதாக விருப்பம் தெரிவித்தால், நிச்சயம் ஆதரவளிப்போம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அதிரடியாக அறிவித்தார்.
தலைவர்களுடன் சந்திப்பு
தொடர்ந்து, ஜிகே வாசன், ஜான் பாண்டியன், அண்னாமலை உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு கோரியது ஓபிஎஸ் அணி. எனினும், யாருமே ஓபிஎஸ் அணிக்கு இதுவரை வெளிப்படையாக தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவில்லை. இதில், பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதுதான் தமிழ்நாடு அரசியல் களம் எதிர்நோக்கி இருக்கும் முக்கியமான கேள்வி.
குஜராத்துக்கு வண்டியேறிய ஓபிஎஸ்
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட மூவர் இன்று திடீரென குஜராத்துக்கு கிளம்பியுள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்குச் செல்லும் ஓ.பன்னீர்செல்வம், அங்கு பாஜகவின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து, இடைத்தேர்தலில் ஆதரவு கோர இருப்பதாகக் கூறப்படுகிறது. அகமதாபாத்தில் தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்க ஓபிஎஸ் செல்வதாக கூறப்பட்டாலும், பிரதான நோக்கம், பாஜக தலைவர்களைச் சந்திப்பதுதான் எனக் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் ஆதரவாளர்
ஓபிஎஸ்ஸின் இந்த பயணம் குறித்துப் பேசியுள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் கண்ணன், "பாஜகவின் இறுதி முடிவுகளை எப்போதுமே தேசிய தலைமைதான் அறிவிக்கும். மாநில தலைமை, இங்குள்ள நிலவரத்தை மத்திய தலைமைக்கு சொல்லுவார்கள். அந்த அடிப்படையில், நேற்று மாநில தலைமையைச் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ், நேரடியாக தேசிய தலைமையுடன் பேசுவதற்காக இன்று குஜராத் செல்கிறார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து அதிமுகவின் ஆதரவைக் கொடுப்பது, கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து பேசவுள்ளார்." எனத் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் கைப்பாவை
இந்தப் பயணம் பற்றி ஈபிஎஸ் ஆதரவாளர் சுரேஷ் கண்ணன் பேசுகையில், "ஓபிஎஸ்ஸின் இந்த திடீர் புறப்பாடு குறித்து எங்களுக்கு தெரியவில்லை. குஜராத்தில் ஏதும் இடைத்தேர்தல் நடக்கிறதா? அங்கு ஆதரவு கேட்டு சென்றுவிட்டாரா என்று தெரியவில்லை. பாஜகவின் கைப்பாவையாக ஓபிஎஸ் செயல்படுவது இதன் மூலம் முழுமையாகத் தெரிகிறது. ஓபிஎஸ் அதிமுகவைக் காப்பாற்ற நினைக்கவில்லை, பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டார். அதிமுக தலைமை சென்னையில் முடிவெடுக்கும். பாஜக தலைமைதான் குஜராத்தில் முடிவெடுக்கும். இதுவே, ஓபிஎஸ்ஸின் நிலை என்ன என்பதை மக்களுக்கு காட்டிவிட்டது.
ஓபிஎஸ்ஸுக்கு மைனஸ்
ஓபிஎஸ்ஸின் இந்தப் பயணம் அவருக்கு பிளஸ்ஸாக அமையாது, மைனஸ் தான். பாஜக விரும்பினால் விட்டுக்கொடுப்போம் என்று ஓபிஎஸ் சொன்னதே அதிமுக தொண்டர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் இப்போது பாஜகவிடம் முழுமையாக சரணாகதி அடைந்துவிட்டார். ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு ஓபிஎஸ் பாஜகவில் தான் ஐக்கியமாவார். அதற்கு இப்போதே தயாராகிவிட்டார்" எனக் கூறியுள்ளார்.