தங்கம் வாங்க முடியாத உயரத்திற்கு செல்வதற்கு என்ன காரணம்.. உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் விஷயம்
சென்னை: தங்கம் விலை கடந்த 9 மாதங்களில் மட்டும் 22 ஆயிரத்து 500 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கம் விலை இந்த அளவிற்கு அதிகரிக்க என்ன காரணம் என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருப்பது ஒருபுறம் எனில், வெறும் ஒரு மாதத்தில் மட்டும் 12 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏறி உள்ளது. இப்படி வாங்கவே முடியாத உயரத்திற்கு பின்னால் உள்ள காரணங்கள் சுவராஸ்யமானது. பிரதான காரணம் அமெரிக்கா மேலும் வட்டி விகிதங்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுவது தான்.
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.83 ஆயிரத்தை 440 ஆக கடந்து கடந்து புதிய உச்சத்தை தொட்டது. இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்தது. ஒரு பவுன் கிட்டத்தட்ட 1,680 ரூபாய் உயர்ந்து ரூ.85,120-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலையை பொறுத்தவரை கடந்த ஆண்டு இறுதியில் ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதன் பின்னர் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்தது. கடந்த 9 மாதங்களில் பவுனுக்கு ரூ.21 ஆயிரம் அதிகரித்து, கடந்த 6-ந்தேதி அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை கடந்து புதிய உச்சமானது. இப்போது 85 ஆயிரத்தை கடந்துள்ளது.

தங்கம் விலை விரைவில் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தொட்டு விடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் விலை வெறும் ஒரு மாதத்தில் 10 ஆயிரம் அளவிற்கு உயர்ந்துள்ளது. இப்படி வாங்கவே முடியாத அளவிற்கு தங்கம் விலை உயர்வுக்கு என்ன காரணம் என்று பலரும் யோசித்து வருகிறார்கள். அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி குறைப்புதான் காரணம் ஆகும்.
கடந்த வாரம் வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்ததுதான் விலை அதிகரிக்க காரணமாக இருந்தது. அதேபோல் முன்னதாக அமெரிக்கா வட்டியை குறைக்கும் எதிர்பார்ப்பு காரணமாக தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக ஏறியபடியே ஏறியது. இப்போது தங்கம் விலை, மீண்டும் ஏறிக் கொண்டே இருக்கக் காரணம், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவது தான். அந்த எதிர்பார்ப்பு தான், தங்கத்தின் மீதான முதலீட்டை பலரையும் அதிகப்படுத்த வைத்துள்ளது. அமெரிக்காவின் பெடரல் வங்கியில் வட்டி விகிதங்கள் குறையும்போது, டாலரின் மதிப்பு குறைந்து, தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும் என்பது பொதுவான கருத்து. அதுவே நடந்து வருகிறது.
வரும் வாரத்தில் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் தலைவர்கள் வட்டி குறைப்பு குறித்து உரையாற்றுவார்கள் என எதிர்பார்ப்பது அதிகரித்துள்ளது. அதுவும் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக உள்ளது. அதேபோல் அமெரிக்காவின் தனிநபர் நுகர்வோர் செலவினப் பணவீக்கத் தரவு வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.. இதுதான் அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டியை குறைக்குமா என்ற எதிர்பார்ப்புக்கு காரணம். வட்டி குறைந்தால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவார்கள்.
எனவே இப்போதே பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுவதால், முதலீடு அதிகரித்தபடி உள்ளது. எனவேதான் தங்கம் விலை அதிகரிக்கிறது. வெள்ளிக்கிழமை வெளியாகும் பணவீக்க தரவு பட்டியல் தான் தற்போது உலகமே எதிர்பார்க்கும் விஷயமாக உள்ளது. அது வெளியானால் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தங்கம் விலை உயர்வுக்கு ரஷ்யா-உக்ரைன் போரும் காரணமாக உள்ளது. தற்போது பிரிட்டன் போன்ற நாடுகளில் மத்திய வங்கிகள் மீண்டும் தங்கத்தை அதிக அளவில் வாங்கத் தொடங்கியுள்ளன. இதுவும் தங்கத்தின் விலை உயர காரணமாக உள்ளது.











Click it and Unblock the Notifications