கூட்டணி கட்சிகளிடம் ஸ்டாலின் காட்டும் கறார்.. பலமா, பலவீனமா?
மு.க.ஸ்டாலினின் அரசியல் கறார்தன்மையை கடைப்பிடிக்க காரணம் என்ன?
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினின் இந்த கறார்தனம் கட்சிக்கு பலமானதா? பலவீனமானதா?
செயல்தலைவராக இருந்த ஸ்டாலினுக்கும், திமுக தலைவராக உள்ள ஸ்டாலினுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
இப்போது முதிர்ச்சி பெற்ற தலைவராகவும், பக்குவம் நிறைந்த அரசியல்வாதியாகவும் ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார் என்பதில் சந்தேகமே இல்லை.
கண்ணியம் தவறாத பேச்சு
எதையுமே பொறுமையுடன் அணுகுவதுடன்,உணர்ச்சிவசப்படாமல் பேசுவதிலும், தரக்குறைவான, கண்ணியம் குறைந்த வார்த்தைகளை எளிதில் விடாமல் பேசுவதிலும் ரொம்ப கவனமாகவே உள்ளார். இந்த போக்கும், மனநிலையும்தான் மாநில அளவையும் தாண்டி தேசிய அளவு வரை தன்னை பற்றி பேச வைத்தும் வருகிறார். எனினும் சில கறாரான விஷயங்களையும் அவர் கையில் எடுத்துள்ளார்.
காங்கிரசுக்கு "சிங்கிள்"
குறிப்பாக சீட் ஒதுக்கீடு விஷயத்தில் ஸ்டாலினின் இந்த "கறார்" நன்றாக வெளிப்படுகிறது. திமுகவுடன் கூட்டணி என்று முதன்முதலாகவும், முடிவாகவும் சொன்னது காங்கிரஸ்தான். ஆனாலும் சிங்கிள் டிஜிட் சீட் மட்டும் கொடுக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. உறுதியாக 5 வருஷத்துக்கு கூட இருக்க போகும் அணி என்று தெரிந்தும் சிங்கிள் டிஜிட்தான் என்றால், கூட்டணிக்கு வரும் மற்ற கட்சிகள் நிலை என்ன என்று தெரியவில்லை.
பேரம் பேசக்கூடாதோ?
அதேபோல, விடுதலை சிறுத்தைகள், மதிமுகவிடமும் இதே கறார்தான் தொடர்கிறது. ரொம்பவும் ஒட்டுதலும் இல்லாமல், பிரிவும் இல்லாமல் தாமரை இலை தண்ணீராக உறவு இப்போது உள்ளது. இவர்கள் இருவரும் இன்னும் கூட்டணிக்குள் இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியவில்லை. ஆனால் நெருக்கம் குறைந்தே ஸ்டாலினின் அணுகுமுறை இருக்கிறது. இதற்கு காரணம், இருவரும் தன்னிடம் சீட் அதிகம் வேண்டும் என்று கேட்டுவிடக்கூடாது, பேரம் பேசிவிடக்கூடாது என்பதற்காகவா என தெரியவில்லை. ஆனால் இரு கட்சிகளுடனும் கறார் போக்கு தொடர்கிறது.
ஊழல் குற்றச்சாட்டுகள்
இதேபோலதான் குடும்ப அரசியலிலும். ஏற்கனவே முழுசாக அறியப்படாத சபரீசன் இப்போது டெல்லியில் அறியப்படுகிறார். ஆனால் டெல்லி என்றாலே நம் முன் வந்து போகும், கனிமொழியோ, தயாநிதி மாறனோ இப்போது வருவதில்லை. இவர்கள் விஷயத்தில் ஸ்டாலின் இன்னமும் கறாராகத்தான் உள்ளார். இவர்களே இப்படி என்றால் அழகிரிக்கும் அதே நிலைதான். யார் மீதெல்லாம் ஊழல் கறை உள்ளதோ, சர்ச்சைகள் உள்ளதோ அவர்களை சற்று ஒதுக்கி வைத்தே வருகிறார் ஸ்டாலின்.
பலமா? பலவீனமா?
மேலோட்டமாக பார்த்தால் இந்த கறார்தன்மைகள் எல்லாம் பலவீனமாக பார்க்கப்பட்டாலும், இந்த அத்தனையையும் கட்சியின் வளர்ச்சிக்காகவே என்றுதான் ஸ்டாலின் முன்னெடுத்து செல்கிறார் என்று திமுக பிரமுகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஒரு கட்சி இந்த பிடிவாதம் கூட இல்லை என்றால் எப்படி? நாளை எப்படி கட்சியை வழிநடத்துவது என்று கேள்வியும் எழுப்புகிறார்கள். பார்ப்போம்... ஸ்டாலினின் கறார்தன்மை கட்சிக்கு பலமா? பலவீனமா என்று!!