மனமுருகி வணங்கிய ஓபிஎஸ்.. ஓபிஆரை இழுத்து முன்னால் விட்ட வைத்தி.. உற்சாக ஆரவாரம் செய்த தொண்டர்கள்!
சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்ததையடுத்து ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார் ஓ.பன்னீர்செல்வம். அங்கு, ஜெயலலிதா சமாதி முன் மனமுருகி வேண்டினார் ஓபிஎஸ்.
Recommended Video
ஜூலை 11-ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பளித்துள்ளார்.
தீர்ப்பு வந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் வெளியேயும், ஓபிஎஸ் இல்லத்தின் முன்பும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்றனர். அப்போது, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அங்கு திரண்டு உற்சாக முழக்கமிட்டனர்.

பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்குகளின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து முடிந்த நிலையில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்துள்ளார். அதன்படி, கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்பு
இதன்மூலம், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றாகியுள்ளது. மேலும், கட்சியில் புதிதாக நியமனம் செய்யப்பட்டது, நீக்கப்பட்டது எதுவுமே செல்லாது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

ஓபிஎஸ் அணி உற்சாகம்
ஐகோர்ட் தீர்ப்பு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக வந்ததை அடுத்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பாக திரண்ட அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தனது ஆதரவாளர்களை தனது வீட்டில் சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம். அவருக்கு மூத்த நிர்வாகிகள் பலரும் இனிப்பு வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

ஜெ.நினைவிடம் சென்ற ஓபிஎஸ்
இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் வைத்திலிங்கம், ஜெசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, கோவை செல்வராஜ், ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடன் சென்றனர். ஏராளமான தொண்டர்களும் அங்கு திரண்டனர்.

மனமுருகி வேண்டிய ஓபிஎஸ்
தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்த நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தின் முன்பு கண்களை மூடி, கைகூப்பி வணங்கி, குனிந்து சமாதியின் மீது தலைவணங்கி மனமுருகி வேண்டினார் ஓ.பன்னீர்செல்வம். மேலும், எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் வணங்கி, மலர்தூவி மரியாதை செலுத்தினார் ஓபிஎஸ். தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவு
நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னால் இழுத்துவிட்ட வைத்திலிங்கம்
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத், பின்னால் நின்று கொண்டிருந்த நிலையில், அவரைக் கவனித்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ஓபிஆரையும் முன்னாள் இழுத்துவிட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தச் செய்தார்.

ஆன்மாக்களுக்கு வணக்கம்
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மாக்களுக்கு அதிமுக தொண்டர்களின் வணக்கம். வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைச் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. தொண்டர்களின் இயக்கத்தை யார் பிளவுபடுத்த நினைத்தாலும் அது நடக்காது. சர்வாதிகாரமும் நடக்காது. இது அதிமுகவுக்குக் கிடைத்த முழுமையான வெற்றி எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications