உஷார்..! கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! வாட்ஸ்ஆப் அட்மின்களுக்கு வலை வீசும் போலீஸ்! இத்தனை பேர் கைதா?
சென்னை : கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் படித்து வந்த பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கலவரத்திற்கு காரணமாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியதாக நான்கு வாட்ஸ்ஆப் குழுக்களின் அட்மின்கள் மற்றும் செய்திகளை பரப்பியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என சைபர் கிரைம் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 17-ஆம் தேதி அன்று பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரம் மாறியது.
இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நியமித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்..தனியார் பள்ளியை சூறையாடிய மேலும் 4 பேர் கைது...15 நாட்கள் சிறை
கள்ளக்குறிச்சி கலவரம்
தொடர்ந்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வீடியோ ஆதாரங்களை கொண்டும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் கலவரத்தில் ஈடுபட்ட கலவரக்காரர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் வாட்ஸ் அப் குழுக்களை அமைத்து அதில் உறுப்பினர்களை சேர்த்து கலவரத்தை தூண்டும் வகையில் தகவல் மற்றும் கருத்துக்களை பதிவிட்ட கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜய், கள்ளக்குறிச்சி மாவட்டம் துருவூர் கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி,காச்சக்குடி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் உள்ளிட்ட மூன்று வாட்ஸ் அப் குழு அட்மின்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிரடி கைது
மேலும் பள்ளியில் நடந்த கலவரத்தின் போது போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதாக புதுபல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் உள்ளிட்ட நான்கு பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். தொடர்ந்து குற்றவாளிகள் நான்கு பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.
வதந்தி
தற்போது இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மட்டுமல்லாது சென்னை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவி மரணம் குறித்து வதந்தி பரப்பியதாக சிலரை கைது செய்துள்ளனர். மேலும் கலவரத்துக்குப் பிறகும் மாணவி மரணம் குறித்து வதந்தி பரப்பிய நபர்களின் விவரங்கள் வாட்ஸ் ஆப், பேஸ்புக், ட்விட்டர், டெலிகிராம் உள்ளிட்ட நிறுவனங்களிடம் கோரப்பட்டுள்ளன.
தீவிர விசாரணை
அந்த விவரங்கள் கையில் கிடைத்தவுடன் கைது நடவடிக்கை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவி மரணம் மற்றும் கலவரத்தின்போது வதந்தி பரப்பி, ஊடக விசாரணை நடத்திய 63 யுடியூப் இணையதளங்கள், 31 டிவிட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.. தற்போது வரை இந்த விவகாரம் தொடர்பாக 300 பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.