லண்டன் கனவில் அண்ணாமலை? வெயிட் பண்ண சொன்ன அமித்ஷா? அடுத்த தலைவர் யார்?
சென்னை: அண்ணாமலை லண்டன் பயணம் பற்றி முடிவு எடுக்காமல் பாஜக தேசிய தலைமை காலதாமதம் செய்து வருவதாகவும், யாரை இடைக்கால தலைவராக நியமிப்பது என்பது தொடர்பாகக் குழப்பத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை அரசியல் வாழ்க்கையைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, மீண்டும் கல்லூரி மாணவராக மாற இருப்பதுதான் இப்போதைக்கு தமிழக அரசியலில் ஹாட் நியூஸ். சர்வதேச அரசியல் பற்றிப் படிப்பதற்காக இந்தியாவில் உள்ள 12 அரசியல் தலைவர்களுக்கு லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதில் ஒருவராக அண்ணாமலை தேர்வாகி உள்ளார். இதற்காக அவர் செப்டம்பர் லண்டன் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கே அவர் 6 மாதங்கள் தங்கிப் படிப்பார் எனத் தெரிகிறது.

முதலில் 1 மாதம் என்றுதான் சொல்லப்பட்டுவந்த நிலையில், இந்தப் படிப்பு 6 மாதம் வரை இருக்கும் என்று பிறகு தகவல் வெளியானது. இந்த விவகாரம் பற்றி விளக்கம் அளிக்காமல் அண்ணாமலை, "கட்சித் தலைமை அனுமதி அளித்த பிறகே வெளிப்படையாகப் பேச முடியும்" என்று கூறியிருந்தார். இந்த விசயம் தொடர்பாக காங். மாநிலத் தலைவர் செல்லவப்பெருந்தகை, 'அண்ணாமலை லண்டனுக்குச் சென்று, உலக அரசியலை கற்றுக் கொண்டு, அமெரிக்க அதிபர் ஆவதற்கு முயற்சி செய்கிறார்' என்று கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அண்ணாமலை, "கட்சியில் அனுமதி கேட்டிருக்கிறேன். அது கிடைத்த பிறகுதான் நான் அது பற்றி வெளிப்படையாகச் சொல்ல முடியும்" என்றவர் செல்லப்பெருந்தகையில் விமர்சனம் பற்றிப் பேசும்போது அவரைப் போல ரவுடி என்று மக்கள் என்னைப் பற்றிச் சொல்லவில்லையே? குற்றப்பின்னணி கொண்டவர் அவர் இன்று காமராஜர் அமர்ந்த பதவியில் உட்கார்ந்திருக்கிறார் என்று கூறியிருந்தார்.
அதன்பின்னர் அவரது லண்டன் பயணம் பற்றி பேச்சி இல்லாமல் இருந்தது. அப்படி அண்ணாமலை லண்டன் போனால் யார் மாநிலக் கட்சியின் பொறுப்புகளைக் கவனித்துக் கொள்வார்கள் என்று கேள்வி எழுந்தது. இது தொடர்பாக பாஜக வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்புகள் தொண்டர்கள் மத்தியில் கிளம்பியுள்ளன.
தேர்தல் களத்தில் அண்ணாமலையையே பாஜக முன்னிறுத்திப் பல வேலைகளைச் செய்தது. அவரால்தான் அதிமுக கூட்டணி உடைந்தது. ஆனால், ஒரு சில தொகுதிகளை வென்று தன் மீதான நம்பிக்கையை எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என்று அண்ணாமலை திட்டமிட்டிருந்த நிலையில், வழக்கமாகக் கிடைக்கும் கன்னியாகுமரி கூட கைநழுவிப் போய்விட்டது. இந்தத் தோல்வியைப் பொறுப்பேற்று அவரே தனது பதவியை ராஜினாமா செய்திருக்கவேண்டும் என்று கமலாலயத்திற்குள் உள்ளாகவே ஒரு கோஷ்டி குரல் எழுப்பி வருகிறது.
குறிப்பாக மூத்த பாஜக தலைவர்கள் அண்ணாமலை மீது நம்பிக்கை இழந்துள்ளதாகச் சொல்கிறார்கள். காவல்துறை வட்டாரத்திலிருந்து அரசியல் உலகத்திற்குக் காலடி எடுத்து வைத்த அண்ணாமலை, இன்னும் அரசியலைப் பக்குவமாக அணுகவேண்டும் என்று மூத்த ஊடகத்தினர் கூட கருத்து கூறிவருகின்றனர்.
இதனால் அரசியல் களத்தைப் பற்றி அறிவதற்காகவும் சர்வதேச அரசியல் சூழல்களைப் புரிந்து கொள்வதற்காகவும் அண்ணாமலை லண்டன் சென்று படிக்க முடிவு எடுத்திருந்தார். வெறும் வார் ரூம் அரசியல்வாதிகளை நம்பினால் மட்டும் போதாது என்பதையும் அவர் உணர ஆரம்பித்துள்ளார் என்று சொல்கிறார்கள்.
ஆனால், தேசிய தலைமை கொஞ்சம் காலம் பொறுமை காக்குமாறு அண்ணாமலைக்கு ஆர்டர் போட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான், இதைப் பற்றிப் பேசியுள்ள திருச்சி சூர்யா, "அண்ணாமலை லண்டன் போவது உறுதி. அந்த இடைப்பட்ட காலத்தில் தமிழிசை செளந்தரராஜனை பொறுப்பாக நியமிக்க உள்ளது தலைமை. இப்போதைக்கு அவர் அண்ணாமலை இடத்தைப் பிடிக்கப் பல கட்ட முயற்சிகளைச் செய்து வருகிறார்.
ஏனென்றால், அவரது ஆளுநர் பதவி பறிபோய்விட்டது. வெற்றி பெற்றிருந்தால், மத்திய அமைச்சராகி இருப்பார். அதற்கும் வழியில்லை. இப்போது தமிழிசையின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆகவேதான், அவர் மாநிலத் தலைவர் பதவியைப் பெற்ற முயன்று வருகிறார்" என்று கூறியுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது என்று மோடியே குறிப்பிட்டுப் பேசும் அளவுக்கு அண்ணாமலை செல்வாக்கு உயர்ந்துள்ளது. தமிழிசை தலைமையிலிருந்த போது இந்தளவுக்கு 'என் மண் என் மக்கள்' போன்ற யாத்திரைகளை எல்லாம் கட்சி நடத்தவில்லை.
மேலும் இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் எனப் பலகட்ட பணிகள் தொடர்ந்து நடக்க உள்ளதால் அண்ணாமலை படிப்பு விசயத்தைக் கொஞ்சம் தள்ளிப்போடச் சொல்லி இருப்பதாகவும் ஒரு பக்கம் நியூஸ் கசிந்து வருகிறது.
அதேசமயம், கட்சியின் மூத்த தலைவர்களான வானதி சீனிவாசன் அல்லது நயினார் நாகேந்திரன் இவர்களில் ஒருவர் யாரேனும் பொறுப்பு தலைவரா நியமிக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள். அதை அண்ணாமலை விரும்பவில்லை என்றும் அவரது தேர்வில் நாராயணன் திருப்பதி அல்லது கரு.நாகராஜன் ஆகிய இருவரும் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த லண்டன் வாய்ப்பு அண்ணாமலையை தேடி வந்துள்ளது. அதைத் தவறவிட்டால் திரும்பக் கிடைக்காது. ஆகவே, அழுத்தம் கொடுத்து இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தியே ஆக வேண்டும் என அண்ணாமலை துடியாய் துடித்து வருகிறார் என்று அவரது நட்பு வட்டம் தகவலைத் தட்டி விடுகிறது.












Click it and Unblock the Notifications