பேரறிவாளனுக்கு எப்போ கல்யாணம்... அம்மா முடிவு செய்வார் என்கிறார் அப்பா குயில்தாசன்
பேரறிவாளனுக்கு எப்பேது திருமணம் செய்வது என்று அவரது அம்மா முடிவெடுப்பார் என்று குயில்தாசன் கூறியுள்ளார்.
ஜோலார்பேட்டை: பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளதால் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீரில் திளைக்கின்றனர். மகனின் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார் பேரறிவாளன் தந்தை குயில்தாசன். பேரறிவாளனுக்கு எப்போது திருமணம் செய்வது என்று அவரது அம்மா முடிவெடுப்பார் என்று கூறியுள்ளார் குயில்தாசன்.
Recommended Video
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனை முழுமையாக விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்தனர்.161வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால் உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வழிவகுக்கிறது 142 பிரிவு.
உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், 'ஆளுநர் காலதாமதம் செய்ததால் நீதிமன்றமே தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுவிக்கிறது. அரசியல் சாசனப் பிரிவு 161ன் படி மாநில அரசு எடுத்த முடிவை ஆளுநர் செயல்படுத்தவில்லை. ஆளுநர் காலதாமதம் செய்தது தவறு.
ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தது அரசியல் அமைப்பு சட்டப்படி தவறு. ஆளுநர் செயல்படாத விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசின் கருத்தை பெறத் தேவையில்லை. முழுமையாக ஆராய்ந்த பிறகே பேரறிவாளனை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.
மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. பேரறிவாளன் விவகாரத்தை மீண்டும் ஆளுநர் பரிசீலனைக்கு அனுப்ப விரும்பவில்லை. பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஆளுநர் காலதாமதம் செய்ததாலேயே உச்சநீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுதலை பேரறிவாளன் உறவினர்களுக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்துள்ளது. ஜோலார்பேட்டை இல்லத்தில் அனைவரும் குவிந்துள்ளனர். தீர்ப்பு குறித்து கேள்விப்பட்ட உடன் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கின்றனர். பேரறிவாளனை கட்டி அணைத்து ஆனந்த கண்ணீரை வெளிப்படுத்தினர்.
அம்மா, சகோதரிகள் அனைவருக்கும் இனிப்புகளை ஊட்டினார் பேரறிவாளன். செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், மனிதாபிமானத்தோடு போராடிய அனைவருக்கும் நன்றி என்று கூறினார். அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று குடும்பத்தோடு பேசி முடிவு செய்வோம் என்று கூறினார் குயில்தாசன்.
பேரறிவாளன் திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த குயில்தாசன் எல்லாமே குடும்பத்தோடு பேசி முடிவெடுப்போம். அம்மாதான் முடிவு செய்து கூறுவார்கள் என்று தெரிவித்தார் மகிழ்ச்சியாக. பேரறிவாளன் விடுதலையால் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் குடும்பத்தினர்.












Click it and Unblock the Notifications