ஆளுங்கட்சி... திமுக தலைவர் ஸ்டாலினின் பல ஆண்டுகால கனவு எப்போது நனவாகும்
விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்ற வார்த்தையை ஸ்டாலின் கடந்த பல ஆண்டுகளாகவே சொல்லி வருகிறார். இதோ இன்று கூட 8 மாதத்தில் திமுக ஆளுங்கட்சியாக மாறும் என்று கூறியுள்ளார். ஸ்டாலினின் நீண்ட கனவு எப்போது நிறை
சென்னை: திமுக எட்டு மாதத்தில் ஆளுங்கட்சியாக மாறும் என்று பொதுக்குழு கூட்டத்தில் பேசியுள்ள ஸ்டாலின் கூறியுள்ளார்.கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது திமுக. கடந்த 2015ஆம் ஆண்டு முதலே ஸ்டாலின் அடுத்தது திமுக ஆட்சிதான் என்று சொல்லி வருகிறார். நமக்கு நாமே பயணம் தொடங்கி பலமுறை மக்களை சந்தித்த போதும் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று சொல்லி வருகிறார். ஸ்டாலினின் ஆளுங்கட்சி கனவு எப்போது நனவாகும் என்று திமுகவினர் எதிர்பார்க்கத் தொடங்கி உள்ளனர்.
தமிழக சட்டசபைக்கு இன்னும் பல மாதங்கள் இருந்தாலும் எதிர்கட்சியான திமுக இப்போதே களப்பணியாற்ற தயாராகி விட்டது. கொரோனா பரவல் இல்லை என்றால் இந்த நேரத்தில் மக்களை சந்திக்க மாநிலம் முழுவதும் பயணம் செய்திருப்பார் ஸ்டாலின். இருந்தாலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கட்சி நிர்வாகிகளிடம் பேசி வருகிறார்.
கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சியின் மொத்த பொறுப்பையும் தன் வசமாக்கிய ஸ்டாலின், தன் மகன் உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பை கொடுத்தார். இப்போது கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றுள்ளது.
சட்டசபையில் ஒரு சூப்பர்ஸ்டார்.. ஸ்டாலின் புகழ்ச்சியால் ஆனந்த கண்ணீர் சிந்திய துரைமுருகன்!
நிர்வாகத்தில் புது ரத்தம்
கருணாநிதி பின்னர் ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் இப்போது புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவிற்குப் பிறகு தற்போது புதிய பொதுச்செயலாளராக துரைமுருகன் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொருளாளராக டி.ஆர் பாலு தேர்வாகியுள்ளார்.துணை பொதுச்செயலாளராக அ.ராசா, பொன்முடி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிர்வாக மாற்றம் கட்சியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று தொண்டர்கள் கூறி வருகின்றனர்.
கட்சியின் வளர்ச்சிக்கு உதவும்
பொதுக்குழுவின் பேசிய ஸ்டாலின், பொதுச்செயலாளர் பதவி அண்ணா, அன்பழகன் வகித்த பதவி அந்த பொறுப்பினை துரைமுருகன் ஏற்றிருக்கிறார். துரைமுருகன் யாரையும் கனிவோடு அணுகுபவர், பொருளாளர் டி.ஆர் பாலு எப்போது கண்டிப்பாக இருப்பார். இந்த கனிவும் கண்டிப்பும் கட்சி வளர்ச்சிக்கு உதவும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
திமுக ஆளுங்கட்சியாக மாறும்
திமுக இன்னும் எட்டு மாதத்தில் ஆளுங்கட்சியாக மாறும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின். திமுகவைத்தான் ஆளுங்கட்சியாக நினைக்கிறார்கள் என்று கடந்த 2015ஆம் ஆண்டு முதலே கூறி வருகிறார் ஸ்டாலின். நமக்கு நாமே பயணம் சென்ற போதும் மக்களை சந்தித்து பேசிய போதும் அடுத்தது திமுக ஆட்சிதான் என்று கூறி வந்தார். 2016ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையிலும் தனித்து போட்டியிட்ட அதிமுகவை ஜெயித்து ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.
ஸ்டாலின் பல ஆண்டு கனவு
2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017ஆம் ஆண்டு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம், கட்சியில் ஏற்பட்ட பிளவும் கூட ஆட்சியை பாதிக்கவில்லை. காரணம் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபித்து தக்கவைத்துக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த நேரத்தில் கூட விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று கூறி வந்தார் ஸ்டாலின். அவரது பல ஆண்டு கால கனவு இன்னும் நனவாகவே இல்லை. தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்ற அதிமுக தனது ஆட்சி காலத்தை நிறைவு செய்யப்போகிறது.
ஸ்டாலினின் தளராத நம்பிக்கை
கடந்த 10 ஆண்டு காலமாக எதிர்கட்சி வரிசையிலே திமுக அமர்ந்துள்ளது. 2011 முதல் 2016 வரை எதிர்கட்சி அந்தஸ்து கூட திமுகவிற்கு கிடைக்கவில்லை. 2016 முதல் வலிமையான எதிர்கட்சியாக உள்ள திமுக இந்த முறை அதிக இடங்களை வென்று ஆளுங்கட்சியாக ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும் என்பது முக ஸ்டாலின் கனவு. இந்த கனவு வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே நனவாகும்.
முதல்வர் பதவியில் யார்
திமுக ஆளுங்கட்சியாக இருக்கும் என்றுதான் கூறியிருக்கிறார் ஸ்டாலின் அதே நேரத்தில் தான் முதல்வராக அமர்வேன் என்று சொல்லவேயில்லை. கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று தளராத நம்பிக்கையோடு பேசி வருகிறார் ஸ்டாலின். திமுக ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பது உடன்பிறப்புக்களின் எதிர்பார்க்கவும் உள்ளது. ஸ்டாலினின் பல ஆண்டு கனவு நனவாகுமா? தொண்டர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா பார்க்கலாம்.