16 இரவு கிளம்பி 17ல் பிரதமருடன் மீட்டிங்.. டெல்லியில் யாரை எல்லாம் சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்?
சென்னை : ஆகஸ்ட் 16ஆம் தேதி டெல்லி செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்தும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க அறிவுறுத்துவது குறித்தும் பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுவார் எனக் கூறப்படுகிறது.
மேலும், டெல்லி விசிட்டின்போது, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து புதிய பிரதமர் யார்?.. ரிஷி சுனக்குக்கு வலுக்கும் எதிர்ப்புகள்.. முன்னிலையில் லிஸ் டிரஸ்!
ஸ்டாலின் டெல்லி விசிட்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி இரவு தலைநகர் டெல்லிக்குச் செல்கிறார். அடுத்த நாளான ஆகஸ்ட் 17-ஆம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின், தன்னைச் சந்திப்பதற்கு பிரதமர் மோடி நேரம் ஒதுக்கியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்ததற்கும், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொண்டதற்காகவும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் நன்றி கூறுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட்
சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த 44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடியை அழைக்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்வதாக இருந்தது. அந்த நேரம் பார்த்து, முதல்வர் ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டதால், நேரில் சென்று பிரதமரை விழாவுக்கு அழைக்க முடியவில்லை. தொலைபேசியில் பேசி, நிலையை எடுத்துச் சொல்லி அழைப்பு விடுத்தார் ஸ்டாலின். மூத்த எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பிரதமரைச் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
சென்னை வந்த பிரதமர் மோடி
முதல்வர் நேரில் வந்து அழைக்காவிட்டாலும், பெருந்தன்மையாக விழாவுக்கு வந்துவிட்டுச் சென்றார் பிரதமர் மோடி. இதனை ஸ்டாலினும் விழா மேடையிலேயே குறிப்பிட்டுப் பேசினார். மே மாதம் வந்த போது மோடி - ஸ்டாலின் இடையே பெரிதாக ஒட்டுதல் இல்லாத நிலையில், இந்த முறை இருவரும் நெருக்கமாகக் காணப்பட்டனர். இருவரும் இந்த விழா மேடையில் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது கவனம் ஈர்த்தது.
பாராட்டிய பிரதமர்
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததற்தாக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்ட ஸ்டாலின், விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு பண்புகள், தொடர்ச்சியாக உங்களது ஆதரவையும் இது போன்ற இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
டெல்லி பயணத்தில்
இந்நிலையில், டெல்லி செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் தனது அழைப்பை ஏற்று கலந்து கொண்டு சிறப்பித்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்க இருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது, மாநில நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்பான கோரிக்கை மனுவையும் முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முக்கிய கோரிக்கை
மேலும், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். அந்த மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்துவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி சென்ற ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் தனியாகச் சந்திக்க அனுமதி மறுத்த பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உடனே ஓகே சொல்லியுள்ளார்.
இருவரையும் நேரில் சந்தித்து
மேலும், நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்மு, 14வது துணை குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஜெகதீப் தன்கர் ஆகியோரையும் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். திரௌபதி முர்மு, ஜெகதீப் தன்கர் ஆகியோர் முன்பு தங்களுக்கு ஆதரவு கேட்டு சென்னை வந்தபோது ஸ்டாலினை சந்திக்கவில்லை. பதவியேற்ற பிறகு இருவருக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
நாளை அறிவிக்கப்படும்
இந்நிலையில், டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், திரௌபதி முர்மு, ஜெகதீப் தன்கர் ஆகிய இருவரையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவிக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாலினின் டெல்லி பயணத் திட்டம் தொடர்பான முறையான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.