நடிகையை சிக்க வைத்து.. கருணாநிதியின் பேரன் என மோசடி.. ஞாபகம் இருக்கா? யார் இந்த சுகேஷ் சந்திரசேகர்?
சென்னையில் கைதாகி உள்ள சுகேஷ் சந்திரா யார் தெரியுமா?
சென்னை: கருணாநிதியின் பேரன் என்று சொல்லி கொண்டு பல மோசடிகளில் ஈடுபட்ட சுகேஷ் சந்திரசேகர் கைதாகி உள்ளார். இவரது சென்னை கானாத்தூர் வீட்டில் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த 5 நாட்களாக அதிரடி சோதனை நடத்தி, 20 சொகுசு கார்கள், லேப்டாப் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளனர்..
அரசியல்வாதிகள், மிக முக்கிய பிரமுகர்களை போல, 5 நாட்கள் தொடர்ந்து சுகேஷிடம் அதிகாரிகள் ரெய்டு நடத்த வேண்டிய காரணம் என்ன? யார் இந்த சுகேஷ்? மொத்தம் பகீர் 2 சம்பவங்களில், இந்திய நாட்டையே அதிர வைத்தவர்தான் சுகேஷ்..!
முதல் சம்பவம்:
கடந்த 2017-ல் சசிகலா சிறை சென்ற சமயம், டிடிவி தினகரனுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஒன்று ஏற்பட்டது.. இரட்டை இலையை கைப்பற்றினால்தான், தன்னை நிரூபிக்க முடியும் என்ற கட்டாயத்துக்கும் நெருக்கடிக்கும் ஆளானார்.

டிடிவி தினகரன்
அப்போது, தேர்தல் ஆணையத்தின் செல்வாக்கை பயன்படுத்தி இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக ஒரு புரோக்கர் சொன்னதாகவும், அவரை நம்பி டிடிவி தினகரன் ரூ.60 கோடி பேரம் பேசியதாகவும் பரபரப்பான செய்திகள் வெளிவந்தன.. அந்த புரோக்கர்தான் இந்த சுகேஷ் சந்திரசேகர்... இவருக்கு சுதீஷ் சந்திரா என்று இன்னொரு பெயர் உண்டு.. சந்திரசேகர் என்று இன்னொரு பெயரும் உண்டு.

பணம் பறிமுதல்
டிடிவி தினகரன் 50 கோடி லஞ்சம் தந்தார் என்ற தகவல் பரவியதுமே, டெல்லி போலீஸார் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷிடம் இருந்து ரூ.1.30 கோடி பணம் பறிமுதல் செய்து அவரை அதிரடியாக கைது செய்திருந்தனர்... அந்த பணம் தினகரன் லஞ்சமாக தந்த பணம் என்பதும் தெரியவந்தது.. இதையடுத்து, உடனடியாக, சென்னை ஈசிஆரில் உள்ள சேகர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.. அங்கேயும் கோடிக்கணக்கில் பணத்தையும், சொத்துக்களையும் ஆவணங்களையும் அள்ளிக் கொண்டு போனார்கள் அதிகாரிகள்..

சுகேஷ்
மேலும், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீதும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தினகரனோ, சுகேஷ் சந்திரசேகர் யார் என்றே தனக்கு தெரியாது, அவரிடம் நான் பேசியதுகூட இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்... இது தொடர்பான விசாரணை டெல்லியில் நடந்தபோதெல்லாம் ஆஜரானார் தினகரன்... கடைசியில், தினகரனும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்...

விடுதலை
பிறகு தினகரன் ஜாமீனிலும் விடுதலையானார்.. இந்த சம்பவம் நடக்கும் சமயத்தில்தான், பாஜக தன்னுடைய விஸ்வரூப வளர்ச்சியை எடுத்து கொண்டிருந்தது.. தினகரன் விஷயத்தில் கறாராகவும் நடந்து கொண்டு சிறையில் தள்ளியதையும் தன்னுடைய வெற்றியாகவும், ஊழலுக்கு எதிரான கட்சியாகவும் தன்னை காட்டிக் கொண்டது. இந்த வழக்கு இன்னமும் விசாரணையில் இருக்கிறது.. சுகேஷ் யாரென்றே எனக்கு தெரியாது" என்று சாதித்து டிடிவி தினகரனுக்கு இந்த வழக்கு தொடர்பான அரசியல் கறையும், களங்கம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது..!

இரண்டாவது சம்பவம்:
இந்த சுகேஷ் சந்திரா அடிப்படையிலேயே ஒரு கிரிமினல்.. ஏற்கனவே இவர் மீது பல மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன... வங்கிகளில் கடன்பெற்று மோசடி என்பது உள்ளிட்ட ரூ200 கோடிக்கான மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன... அதில் சுகேஷுடன் அடிபட்ட பெயர்தான் லீனா மரியா பால்.. இவர் ஒரு கேரள நடிகை.. தேசிய விருது பெற்ற மெட்ராஸ் கபே படத்தில் நாயகியாக நடித்தவர்..

காதலன்
இவரது காதலன்தான் சந்திரசேகர்.. அதாவது சுகேஷ் சந்திரா.. கோரேகாவ் மேற்கு லிங்க்சாலையில் உள்ள இம்பேரியல் ஹைட்ஸ் என்ற அபார்ட்மென்ட்டில் கடந்த 2013-ல் காதலனுடன் வசித்து வந்தார்.. 2 பேரும் சேர்ந்து அந்தேரி மேற்கு, சாலிமார் மோர்யா மார்க் கட்டிடத்தில் 'லயன் ஓக் இண்டியா' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர்... இந்த நிறுவனத்தின் சார்பில் 20-க்கும் மேற்பட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் கீழ் மாதந்தோறும் 20 சதவீத வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாக பண வசூலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மோசடி
இதைதவிர, தவிர குலுக்கல் முறையில் கார் பரிசாக கொடுப்பதாகவும் அறிவித்து உள்ளனர்.. இந்த பேச்சை நம்பி, அந்த நிறுவனத்தில் மும்பையை சேர்ந்த பலர் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர்... அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை வசூல் செய்து வந்திருக்கிறார்கள்.. ஆனால், கடைசிவரை அந்த நிறுவனம் தரப்பில் முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை...

விசாரணை
இதனால் தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்த முதலீட்டாளர்கள் பலர் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்... இதில், அந்த நிறுவனம் ரூ.10 கோடி வரையிலும் முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதிரடி
இதையடுத்து போலீசார் நடிகை லீனா மரியா பால், சேகர் சந்திரசேகர் இருவரையும் கைது செய்தனர்... அவர்களின் அலுவலகத்தில் சோதனையும் நடத்தினார்கள். இந்த சோதனையின் போது, ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள 117 விலை உயர்ந்த வெளிநாட்டு கைக்கடிகாரங்கள், ரூ.37 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 12 செல்போன்கள், ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் போன்றவை சிக்கின... ரூ.5 கோடி மதிப்புள்ள 9 விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களையும் போலீசார் கைப்பற்றினர்.. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 கோடியே 50 லட்சம் ஆகும்.

குற்ற செயல்கள்
இதைதவிர, 2 வெளிநாட்டு துப்பாக்கிகள், பண பரிமாற்றத்திற்காக வைக்கப்பட்டிருந்த வரைவோலைகள், காசோலைகளையும் போலீசார் அங்கிருந்து கைப்பற்றினார்கள்... இதில் என்ன ஒரு ஹைலைட் என்றால், சுகேஷ் சந்திரா திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தபோதும், ஜெயிலுக்குள்ளிருந்தே பணம் பறிப்பு, ஆட்கடத்தல் என பல குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்து, போலீசுக்கே சவால் தந்தவர்.

கருணாநிதி
எங்கே மோசடி செய்தாலும், அதற்கு முன்னதாகவே பல பக்காவான ஸ்கெட்ச்களை போட்டுதான் களமிறங்குவாராம் சுகேஷ்.. அதிலும் இவரது நடிப்பை நம்பி எத்தனையோ அதிகாரிகள் ஏமாந்துள்ளனர்.. மறைந்த கருணாநிதியின் பேரன் என்று சொல்லி ஏமாற்றி உள்ளார்.. கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி என்று சொல்லியும் ஏமாற்றி உள்ளார்..

கிரிமினல்
இப்படி தமிழகம் மட்டுமில்லை.. மும்பையிலும் ஏராளமான தொழிலதிபர்களை குறி வைத்து மோசடியில் இறங்கி வந்துள்ளார் சுகேஷ்.. அப்படி மோசடி செய்து சேர்த்த சொத்துக்கள் மட்டுமே கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் இருக்குமாம்.. அவைகளை தன்னுடைய குடும்பத்தினர் பெயரில் பல்வேறு மாநிலங்களில் முதலீடும் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.. இப்போது அவரது வீட்டில் மேலும் பல டாக்குமென்ட்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், சுகேஷ் மீதான பிடி இறுகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications