கட்சித் தலைவர்களே, போனா வராது.. சுளையா 20 தொகுதி.. நல்ல சான்ஸ் விட்ராதீங்க!
சென்னை: தமிழகத்தில் 20 சட்டசபைகளின் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இது யாருக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தகுதிநீக்க வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டு விட்டது.
திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளின் உறுப்பினர்கள் காலமாகிவிட்டதால் அந்த தொகுதிகளுடன் சேர்த்து 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்த தேர்தல்களில் யாருக்கெல்லாம் நல்ல எதிர்காலம் உள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதில் திமுக, அமமு, மக்கள் நீதி மய்யம், தேமுதிக ஆகியன ஆகும். இந்த கட்சிகள் திறமையாக செயல்பட்டால் நிச்சயம் ஒரு அதிமுக அரசு கவிழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்டாலின்
ஆர்கே நகர் இடைத்தேர்தலை போல் இந்த 20 தொகுதிகளையும் கோட்டை விடாமல் பார்த்து ஸ்டாலின் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாகும். கருணாநிதிக்கு பிறகு சந்திக்கும் தேர்தல் என்பதாலும் திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ளதாலும் திமுகவை விட ஸ்டாலினுக்கு பொறுப்புகள் நிறையவே இருக்கின்றன.
அமமுக கட்சியின் தினகரன்
அதுபோல் தினகரனும் இந்த தேர்தலை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆர் கே நகரில் சுயேச்சையாக இருந்து தினகரன் வெற்றி பெற்றதை போல் இந்த 20 தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை பெற்று அமமுகவை நல்ல வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே அவர் சார்ந்த நிர்வாகிகளின் கோரிக்கையாகும்.
மக்கள் நீதி மய்யம்
அடுத்தப்படியாக அரசியலுக்கு புதிதான கமல்ஹாசன். இவர் 234 தொகுதிகளில்தான் போட்டியிடுவேன் என பிடிவாதம் பிடிக்காமல் 20 தொகுதிகளில் மக்களின் மனவோட்டத்தை அறிந்து கொள்ள வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்குள் நல்ல ஒரு இடத்தை பெற்று விட வேண்டும் என்றும் கருதுகின்றனர்.
விஜயகாந்த்
புதிய கட்சி தொடங்குகிறீர்களா தேமுதிகவை போல் இருங்கள். குறைந்த காலத்தில் கணிசமான வாக்குகளை எப்படி எடுப்பது என்பதை விஜயகாந்தை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொல்லிவிட்டது 2006-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல். எனவே தேர்தலில் போட்டி என்பது விஜயகாந்துக்கு புதிதல்ல. சமயோஜிதமாக செயல்பட்டு 20 தொகுதிகளிலும் கேப்டன் இறங்கினால் நன்றாக இருக்கும் என அவரது தொண்டர்கள் விரும்புகின்றனர். 2016-ஆம் ஆண்டு தவறிய வெற்றியை தற்போது பிடித்து விட நல்ல வாய்ப்பு என்பது கேப்டனுக்கு தெரியாதா என்ன?
ஒன்று திரள வேண்டும்
இந்த கோரிக்கைகளுக்கு மத்தியில் அதிமுக அரசை இயக்கி வரும் பாஜகவை வீழ்த்த மேற்கண்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால் நிச்சயம் அதிமுக அரசு கவிழும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். 20 தொகுதிகளையும் லட்டு போல் அடிப்பது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.