"ஸ்டாலின் சார் கிட்ட சொல்லிட்டேன்.. நிறைய நம்பறேன்".. முதல்வரை திடீர்னு சந்தித்த நடிகை ரோஜா.. ஏன்?
முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளார் நடிகை ரோஜா
சென்னை: 2 நாளைக்கு முன்பு, நடிகர் விஜய்யை புதுவை முதல்வர் சந்தித்துள்ள நிலையில், இப்போது ஆந்திர மாநில எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆந்திர அரசியலில் ஃபயர் பிராண்ட் என்ற பெயரை பெற்றவர் நடிகை ரோஜா.. ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா, பல அதிரடிகளையும் செய்து வருபவர்..
இந்த அதிரடிகளுக்கு தனக்கு பெரிதும் காரணமாக இருப்பது மறைந்த ஜெயலலிதா தான் என்றும், அவரது பாணியையே தான் கையில் எடுத்து வருவதாகவும் அடிக்கடி நெகிழ்ச்சியுடன் சொல்லி வருபவர்..
ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ரோஜா நடனமாடியதாக வீடியோ.. மார்ஃபிங் செய்த 3 பேரை லபக்கிய போலீஸ்
பாதிப்பு
இதில் கைத்தறி நெசவாளர்களுக்கு ரோஜா ஆரம்ப காலம் முதலே ஆதரவாக இருப்பவர்.. ஒருமுறை ஆந்திராவில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் விவசாயிகள், விசைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நடிகை ரோஜா தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தது, அப்போதைய அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது..
நெசவு செய்த ரோஜா
அதேபோல, எப்போது தேர்தல் நடந்தாலும் நெசவாளர்களின் வாக்குகளை முழுவதுமாக பெறுவதில் குறியாக இருப்பார் ரோஜா. வாக்கு கேட்டு செல்லும்போதெல்லாம், நெசவாளர்களின் வீட்டுக்குள் உரிமையாய் நுழைந்து, அங்கிருந்த விசைத்தறியில் அமர்ந்து நெய்து பார்த்து, அவர்களின் கஷ்டங்களை கேட்டறிந்து, நம்பிக்கை வார்த்தைகளை சொல்வார்.. இப்போதுகூட நெசவாளர்களின் ஆதரவு ரோஜாவுக்கு நிறையவே அங்கு உள்ளது..
கைத்தறி நெசவாளர்கள்
அவர்களின் வாழ்வாதாரத்துக்காக பல ஏற்பாடுகளையும் செய்து தந்து வருகிறார்.. அதே முயற்சியை தமிழகத்திலும் ஏற்படுத்த முனைந்துள்ளார். அதற்காக, நகரி தொகுதி எம்எல்ஏவான ரோஜா, தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து பேசினார்.. அவருடன் கணவரும் இயக்குனருமான ஆர்.கே. செல்வமணியும் முதல்வரை சந்தித்து பேசினார்.. தமிழக நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்காக தான் ஆரம்பிக்க போகும் திட்டங்கள் குறித்து முதல்வரிடம் ரோஜா எடுத்துரைத்ததாக தெரிகிறது..
ரோஜா பேட்டி
முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ரோஜா. அவர் சொன்னதாவது: "முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.. தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே உள்ள ஒரு சில பிரச்சினைகள் குறித்து அவரிடம் எடுத்து சொன்னேன்.. அந்தப் பிரச்சினைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி தந்திருக்கிறார்.. விசைத்தறி நெசவாளர்கள் ஆர்டர்கள் இல்லாமல், வேலைகள் இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க..
ரோஜா பேச்சு
அவங்களுக்காக ஒரு கம்பெனியை நாங்க பேசி வெச்சிருக்கோம்.. அதை ஆந்திராவில் ஏற்கனவே பண்ணிட்டு இருக்கோம்.. தமிழகத்தில் அதை தொடங்க முயன்று வருகிறோம்.. முதல்வர் ஸ்டாலினிடம் இதுகுறித்து பேசியுள்ளோம்..அப்பாயிண்ட்மென்ட் உடனே கிடைத்தால், அவரை சந்தித்து பேசிவிட்டோம்.. முதல்முறையாக முதல்வரை சந்தித்து பேசினேன்.. தமிழக அரசு, கார்ப்பரேஷன் மூலமாக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி உதவினால், அதாவது 65 சதவீதம் ஒதுக்கிவிட்டு, நூல்களுக்கான ஆர்டரையும் தரக்கூடிய வாய்ப்பு இருக்கு..
முதல்வர் ஸ்டாலின்
என்னுடைய இந்த கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்தேன்.. அவரும் பரிசீலித்து நிறைவேற்றி தருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. அங்கே எங்களுடைய முதல்வர், என்னுடைய அண்ணா, ஜெகன் மோகன் ரெட்டி, நெசவாளர்களுக்கு நிறைய சப்போர்ட் பண்றார்.. அதே மாதிரி ஸ்டாலின் சார்கூட சப்போர்ட் பண்ணுவார்னு ரொம்ப நம்பறேன்.." என்றார். இந்த சந்திப்பின்போது, நெசவு செய்யப்பட்ட துணியில், முதல்வர் ஸ்டாலின் உருவம் பொறிக்கப்பட்டதை எடுத்து காட்டி விளக்கினார்.. மேலும் தன்னுடைய தொகுதியில் உள்ள நெசவாளர்கள் உற்பத்தி செய்த பட்டு சால்வையை முதல்வருக்கு அளித்தார் எம்எல்ஏ ரோஜா..!