விட முடியாது.. கட் அண்ட் ரைட்டாக சொன்ன ஓபிஎஸ்! கஷ்டப்பட்டுட்டாரே.. சீறிய இபிஎஸ்! உற்று பார்த்த பாஜக!
சென்னை: அதிமுகவில் இரண்டு ராஜ்ய சபா எம்பி வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக ஒரு மீட்டிங், ரகசியமாக சில மீட்டிங்குகளை நடத்தியும் கூட அதிமுகவால் எம்பி வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியவில்லை.
ராஜ்ய சபா தேர்தல் தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ளது. ராஜ்ய சபா என்பது நாடாளுமன்றத்தில் இருக்கும் மாநிலங்களவை ஆகும். ஜூலையில் தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 6 ராஜ்யசபா இடங்களுக்கும் தேர்தல் நடக்கவிருக்கிறது.
சட்டமன்றத்தில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக 4 இடங்களையும் அதிமுக 2 இடங்களையும் எளிதாக கைப்பற்றும்.
உங்களுக்கு ஒன்னு எங்களுக்கு ஒன்னு! அடம்பிடிக்கும் ஓபிஎஸ்! விட்டு கொடுக்காத இபிஎஸ்! இழுபறியில் அதிமுக
திமுக
திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், கேஆர்என் ராஜேஷ்குமார், ரா கிரிராஜன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னொரு எம்பி பதவி காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் அதிமுக இன்னும் எம்பி வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது. பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இதில் அதிமுகவிற்கு நேரடியாக ஆதரவு கொடுத்துள்ளது. ஆனால் ஆதரவு இருந்தும் உட்கட்சி பூசல் காரணமாக இன்னும் ராஜ்ய சபா எம்பி வேட்பாளர்களை அக்கட்சி தேர்வு செய்ய முடியவில்லை.
ஆனாலும் திணறல்
அதிமுகவில் இப்படி உட்கட்சி மோதல் நிலவ என்ன காரணம் என்று ரத்தத்தின் ரத்தங்கள் பக்கம் விசாரித்தோம். அவர்களோ.. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயக்குமாரை எம்பி ஆக்க நினைக்கிறார்.. அவர் கட்சிக்காக ஜெயிலுக்கு எல்லாம் போய் கஷ்டப்பட்டு விட்டார் . அதிமுக ஆட்சியில் கடந்த முறை தினமும் செய்தியாளர்களை சந்தித்து விமர்சனங்கள் வராமல் பார்த்துக்கொண்டார். சசிகலாவிற்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்தார்.
விசாரித்தோம்
அவர் டெல்லியில் இருந்தால் நன்றாக இருக்கும். அவரை டெல்லிக்கு கொண்டு சென்றால்.. அங்கே பாஜக தரப்பிடம் பேசவும் வசதியாக இருக்கும் என்று கூறி இருக்கிறாராம். அதேபோல் ஜெயக்குமாரும் சென்னையில் சேகர் பாபு, மா. சு போன்ற அமைச்சர்கள் இருப்பதால் திமுக பலமாக இருக்கிறது. மூத்த தலைவரான நான் எம்பியாக இருந்தால் அதிமுகவிற்கு பலமாக இருக்கும். இல்லையென்றால் சென்னையில் மாநகராட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது போல.. அதிமுக காணாமல் போகும் நிலை ஏற்படும் என்று வருந்தி இருக்கிறாராம்.
ஜெயக்குமார் ரேஸ்
ஆனால் ஜெயக்குமார் இப்படி ரேஸில் இருப்பதை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் விரும்பவில்லையாம். ஏனென்றால் ஜெயக்குமார் எடப்பாடி டீம்.. அவர் ஓபிஎஸ்ஸிற்கு எதிராக நிலைப்பாடு கொண்டவர். அவரை டெல்லிக்கு அனுப்பினால் கட்சியில் தன்னுடைய பவர் மேலும் குறையும் என்று ஓ பன்னீர்செல்வம் கருதுகிறாராம். அது போக ஜெயக்குமார் மகன் முன்னாள் எம்பி ஜெயவர்தன் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்கனவே போட்டியிட விரும்புகிறார்.
ஓபிஎஸ் விட மாட்டார்
அவர் வந்தால் ஒரே வீட்டில் ரெண்டு எம்பி இருப்பது சரியாக இருக்காது. அதனால் அவரை விட மாட்டேன் என்று ஓபிஎஸ் கருதுகிறாராம். இது ஒரு பக்கம் இருக்க தனக்கு ஆதரவாக இருக்கும் முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த ஒரு புள்ளியை எம்பியாக்க வேண்டும். ஜெயக்குமார் எம்பி ஆக்கப்பட்டால்.. தனக்கு ஆதரவாக இருக்கும் முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த ஒருவர்தான் எம்பி ஆக வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் கருதுகிறாராம்.
மற்றவர்கள் போட்டி
ஆனால் ஒரு எம்பி கண்டிப்பாக வன்னியர் பிரிவில் இருக்க வேண்டும் என்று பாமக ரகசிய கண்டிஷன் போட்டு உள்ளதாம். அப்போதுதான் கூட்டணிக்கு ஆதரவு தருவோம் என்று பாமக கண்டிஷன் போட்டு இருக்கிறதாம். இதன் காரணமாகவே இன்னொரு எம்பி வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் அதிமுக திணறி வருகிறதாம். கோவை சத்யன், செம்மலை ஆகியோரும் இந்த பதவிக்கு முயன்று வருகிறாரக்ள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக கூர்ந்து கவனிக்கிறது
இதை எல்லாம் பாஜக உற்று கவனித்து வருவதாக கூறப்படுகிறது. நேரடியாக இதில் தலையிடவில்லை என்றாலும் ராஜ்ய சபா எம்பியாக போகும் நபர் பாஜகவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும். வாக்கெடுப்புகளில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். எனவே அதற்கு ஏற்றபடி நபர் இருப்பாரா என்று பாஜக கவனித்து வருகிறதாம். அதிகபட்சம் இன்று அல்லது நாளை இரண்டு பேரை அதிமுக இறுதி செய்யும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.