எல்லாத்துக்கும் காரணம் விஜய் பிரபாகரன் பேசிய பேச்சா? ராஜ்யசபா எம்பி சீட் மறுக்கப்பட்ட பின்னணி
சென்னை: கும்பகோணத்தில் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் பேசிய பேச்சு, அத்துடன் தேமுதிகவின் அண்மைக்கால போக்கு ஆகியயவற்றால் அதிருப்தி அடைந்த அதிமுக தலைமை தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்பி தேர்தலில் சீட் தரவில்லை என்று அதிமுகவினர் சொல்கிறார்கள், அதேநேரம் பாஜக ஆதரவால் வாசனுக்கு சீட் தந்ததாக கூறப்படுகிறது.
ராஜ்யசபா தேர்தலில் எப்படி சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தேமுதிக இருந்தது. ஆனால் தேமுதிகவுக்கு பதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசனுக்கு சீட் கொடுக்கப்பட்டது.
கடைசி வரை கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த தேமுதிக எம்பி சீட் கிடைக்காததால் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளது.
சுதீஷ் வருத்தம்
இந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ், அதிமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ராஜ்யசபா எம்பி சீட் அளிக்காதது வருத்தம் அளிக்கிறது என்றார். இதனிடையே ராஜ்யசபா எம்பி சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் தொடர்வதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளாராம்.
கடுப்பான அதிமுக
இதற்கிடையே அதிமுகவோ வேறு ஒரு சமயத்தில் பார்க்கலாம் என்று சமாதானம் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் கும்பகோணத்தில் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் பேசும் போது, தேமுதிகவுக்கு இரண்டு சதவிகிதம் வாக்கு உள்ளது என்றும், விஜயகாந்த் உடல் நலம் இல்லாமல் இருப்பதால் நிர்வாகிகள் தொய்வு அடைந்திருப்பதாகவும் சொல்கிறவர்கள் ஏன் எங்கள் வீட்டுவாசலில் கூட்டணிக்காக நின்றார்கள். எங்களிடம் வைத்துக்கொள்ளவேண்டாம். கொடுப்பதை வாங்கும் கட்சி இல்லை. நாங்கள் ஓங்கி கொடுக்கும் கட்சி. வரும் சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் இல்லாமல் உங்க ஆட்சி இல்லை என்று கடுமையாக பேசினார். அவரது பேச்சு சில இடங்களில் ஒருமையில் இருந்தது. இதை கண்டு அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அதிமுகவினர் குமுறல்
அத்துடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தின் அண்மைக்கால பேச்சுக்களும் அதிமுகவினருக்கு அதிருப்தியை தந்துள்ளது. இதனால் வாக்குவங்கி இல்லாத தேமுதிகவுக்கு முக்கியத்துவம் ஏன் கொடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் குமுறியுள்ளார்கள். இதையடுத்தே அதிமுக தலைமை தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்பி சீட்டை தரவில்லை என்று கூறப்படுகிறது.
ஒபிஎஸ் தரப்புக்கும் சீட்
இதில் சுவாரஷ்யமான விஷயம் என்னவென்றால் ஜிகே வாசன், தம்பித்துரை, கேபி முனுசாமி ஆகியோருக்கு எம்பி சீட் கொடுக்கப்பட்டது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜிகே வாசன் பாஜக ஆதரவுடன் எம்பி சீட் பெற்றுள்ளார். கேபி முனுசாமி அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் அத்துடன் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் அவருக்கும் சீட்டு கொடுத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதன் மூலம் பாஜக, மற்றும்ஓபிஎஸ் அணியினரை குஷிப்படுத்தி உள்ளார். ஏற்கனவே பாமகவை குஷிப்படுத்திய முதல்வர் இப்போது மற்ற கூட்டணி கட்சிகளையும், ஒபிஎஸ் தரப்பையும் உற்சாகப்படுத்தியதன் மூலம் சட்டசபை தேர்தலில் வலுவான அடித்தளத்திற்கு அச்சாரம் போட்டு வருகிறாராம்.