விட்டு விலகும் இபிஎஸ்! பியூஷ் கோயலை சந்திக்க சம்மன் அனுப்பிய பாஜக? தம்பிதுரை சந்திப்பு பின்னணி என்ன?
சென்னை: பாஜகவிடம் இருந்து விட்டு விலகி செல்வது என்பது எடப்பாடி பழனிசாமியின் திட்டவட்டமான முடிவாகவே தெரிகிறது. இதனை தெளிவுபடுத்தும் வகையில்தான் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்க தமது தூதர் தம்பிதுரையை அனுப்பி வைத்தார் எடப்பாடி பழனிசாமி என கூறப்படுகிறது.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மீண்டும் வென்று மத்தியில் ஆட்சியை தொடருவோம் என்பது அகில இந்திய பாஜக தலைவர்களின் நம்பிக்கை. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலாவது தமிழகத்தில் பாஜக சில இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்பதும் அக்கட்சியின் வியூகம்.
எதிர்க்கட்சியாக ஒன்று.. ஆளுங்கட்சியான பின் வேறு.. யார் அரசியல் செய்கிறார்கள்.. அண்ணாமலை விளாசல்!
சிதறிய அதிமுக
தமிழகத்தில் பாஜக வெல்ல வேண்டும் எனில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் கூட்டணியால்தான் சாத்தியம். ஆனால் அதிமுகவோ ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, தினகரன் என 4 ஆக சிதறிப் போயிருக்கிறது. இதனால் எப்படியாவது 4 கோஷ்டிகளையும் ஓரணியில் சேர்த்துவிட வேண்டும் என துடியாய் துடிக்கிறது பாஜக.
மோடி, அமித்ஷா வருகை
அண்மையில் மதுரைக்கு வந்த பிரதமர் மோடி, ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரது கரம் கோர்த்து வைத்து தமது விருப்பத்தை சொல்லிச் சென்றார். ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) கோஷ்டி துளியும் விரும்பவில்லை என்பதை மத்திய அமைச்சர் அமித்ஷாவின் சென்னை விசிட்டை புறக்கணித்தது மூலம் தெளிவுபடுத்தியது.
எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
எடப்பாடி பழனிசாமி கோஷ்டியைப் பொறுத்தவரை, ஓபிஎஸ்- சசிகலா, தினகரன் என யாரையும் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர். இதனை வலியுறுத்தும் வகையில்தான் ஓபிஎஸ், தினகரன் என யாரையும் அதிமுகவிலோ, கூட்டணியிலோ சேர்க்க முடியாது என இன்று கூட திட்டவட்டமாக கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
பாஜகவுக்கு குட்பை?
எடப்பாடி அணியானது, அதிமுகவின் பெரும்பான்மை நிர்வாகிகள் பலம் தமக்கு இருக்கிறது என்பதில் உறுதியாக உள்ளது. ஆகையால் ஆகட்டும் பார்க்கலாம் என்ற முடிவில் உறுதியாக உள்ளது. பாஜகவை கழற்றிவிட்டு மெகா கூட்டணியை அதிமுகவின் எடப்பாடி கோஷ்டி அமைப்பதற்கான சாத்தியங்களையும் மறுப்பதற்கு இல்லை. கடந்த சில நாட்களாக எடப்பாடி கோஷ்டி தலைவர்களின் பேச்சுகள் இதனைத்தான் வெளிப்படுத்தி வருகின்றன.
பியூஷ் கோயலுடன் சந்திப்பு
இந்நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை, அதிமுகவின் மூத்த தலைவர் தம்பிதுரை இன்று சந்தித்து பேசியிருக்கிறார். இச்சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த தம்பிதுரை, எடப்பாடி பழனிசாமி சொன்னதன் பேரில்தான் பியூஷ் கோயலை சந்தித்ததாக தெரிவித்திருக்கிறார். பாஜகவிடம் இருந்து விலகிச் செல்லும் எடப்பாடி தரப்பின் விளக்கம் தெரியத்தான் இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், இனியும் எங்களை தொந்தரவு செய்யாதீங்க.. ஓபிஎஸ், தினகரன், சசிகலாவை சேர்க்க முடியாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு என வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக தம்பிதுரை மூலம் சொல்லி இபிஎஸ் சொல்லி அனுப்பியிருக்கலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.