ஓட்டு வாங்க ‘பல்டி’.. பாஜக ‘பி’ டீமுக்கு எதுக்கு இந்த வேலை? - கெஜ்ரிவாலை விளாசிய கே.எஸ்.அழகிரி!
சென்னை : பாஜக வாக்குகளைப் பெற ஆம் ஆத்மி கட்சி பல்டி அடிக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமி படங்களை அச்சிட வேண்டும் என டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்தார்.
அவரது பேச்சு பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் யோசனையை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
ரூபாய் நோட்டில் கடவுள் போடச் சொல்வது மூடநம்பிக்கை. ஏன் பாஜக பி டீம் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது? என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி படம்
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படத்துடன் லட்சுமி, விநாயகர் படங்களையும் சேர்க்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், இனி அச்சிடப்படும் புதிய ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் படமும் மறுபுறம் லட்சுமி மற்றும் விநாயகரின் படங்களையும் சேர்க்க வேண்டும். ரூபாய் நோட்டுகளில் கடவுகளின் படங்களை சேர்ப்பது நாடு செழிக்க உதவும் எனப் பேசினார்.

கடவுள் அருள் தேவை
மேலும் இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவின் ரூபாயில் விநாயகர் படம் இடம்பெற்றுள்ளதை அரவிந்த் கெஜ்ரிவால் சுட்டிக் காட்டியுள்ளார். "80% இஸ்லாமியர்களைக் கொண்டுள்ள இந்தோனேசியாவால் முடியும் என்றால் ஏன் இதை நம்மால் செய்ய முடியாது? கடவுள் படங்களை புதிய ரூபாய் நோட்டுகளில் அச்சிடலாம். நாம் என்ன தான் முயற்சி செய்தாலும் கடவுள் அருள் இல்லையென்றால் பலன் அளிக்காது" என அவர் தெரிவித்துள்ளார்.

கடுமையான விவாதம்
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த யோசனை கடுமையான விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது. மதச்சார்பற்ற நாட்டில் பொருளாதார பிரச்சனைக்கு தீர்வு சொல்கிறேன் என்ற பெயரில் மூட நம்பிக்கைகளை ஆதரிக்கும் விதமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்திருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குஜராத் தேர்தலைக் குறிவைத்து வாக்கு வங்கி அரசியலுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் இவ்வாறு பேசுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன.

காங்கிரஸ்
அதேசமயம், அம்பேத்கர் படத்தை இடம்பெறச் செய்யலாம் என்றும் காங்கிரஸ் கட்சியின் மனீஷ் திவாரி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் அனீஸ் சோஸ் ட்விட்டரில், அரவிந்த் கெஜ்ரிவால், லெட்சுமி மற்றும் கணேஷ் ஆகியோரால் செழிப்பை கொண்டு வர முடிந்தால், நாம் இன்னும் செழிப்பை பெறுவதை உறுதி செய்ய, அல்லா, இயேசு, குருநானக், புத்தர் மற்றும் மகாவீரரையும் சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

ஆம் ஆத்மி பல்டி - கேஎஸ் அழகிரி
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாஜக வாக்குகளைப் பெற ஆம் ஆத்மி கட்சி பல்டி அடிக்கிறது. பல வருடங்களாக நாம் தெய்வங்களை வேண்டிக்கொண்டிருக்கிறோம். அதுவே போதுமானது. ரூபாய் நோட்டில் போடச் சொல்வது மூடநம்பிக்கை. மகாத்மா காந்தி புகைப்படம் மட்டுமே இருக்க வேண்டும். ஏன் பாஜகவின் பி டீம் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications