திரண்டு வந்த திகவினர்.. அட பல்லக்கே வேண்டாம்.. அன்று நடந்தே சென்ற ஆதீனம்.. இப்போ மட்டும் என்னாச்சு?
சென்னை: தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல வேண்டும் என்று வைக்கப்பட்டு வரும் கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசிக, திக உள்ளிட்ட கட்சிகள் இதை எதிர்த்துள்ளது. அதேபோல் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட வலதுசாரி கட்சிகள், அமைப்புகள் கண்டிப்பாக பல்லக்கில்தான் ஆதீனம் செல்வார் என்று கூறி வருகின்றன.
தருமபுர ஆதீனகர்த்தராக கடந்த 2017ல் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி ஆதீனத்தின் 27 வது மடாதிபதியாக பதவி ஏற்றார். அதற்கு முன் இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி மரணம் அடைந்த நிலையில் மாசிலாமணி அந்த பதவிக்கு வந்தார்.
இந்த நிலையில்தான் இங்கு நடக்கும் பட்டினப் பிரவேசம் என்ற பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியை விசிக, திக ஆகிய அமைப்புகள், கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.
விஸ்வரூபம் எடுத்த பட்டினப் பிரவேச தடை... தருமபுர ஆதீனத்தை நேரில் சந்தித்து ஆலோசித்த மதுரை ஆதீனம்
அது என்ன பட்டினப் பிரவேசம்?
அதாவது ஆதீனத்தை அவரின் சீடர்கள் பல்லக்கில் சுமந்து, ஆதீனத்தை வலம் வருவார்கள். ஆதீனத்தை கோவிலுக்கு கொண்டு சென்று வழிபட செய்வார்கள். பல காலமாக இருக்கும் வழக்கம் இது. இருந்தாலும் கடந்த சில வருடங்களாகவே பட்டினப் பிரவேசம் நிகழ்விற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாம் 21ம் நூற்றாண்டில் இருக்கிறோம். இப்போதும் கூட உயர் பதவியில் இருக்கிறார் என்பதற்காக ஒருவரை பல்லக்கில் தூக்கி செல்வது எப்படி நியாயம் ஆகும்? பல்லக்கில் தூக்கி செல்வது ஏற்றத்தாழ்வை குறிக்கும்.. எந்த மனிதனும் இன்னொரு மனிதனை தூக்கி சுமக்க வேண்டிய கட்டாயம் கிடையாது கூறி வருகின்றன.
என்ன நடந்தது
கடந்த வருடங்களிலும் இதேபோல் ஆதீனங்களை பல்லக்கில் தூக்கி செல்வதை விசிக, திக போன்ற அமைப்புகள் கடுமையாக எதிர்த்து இருக்கின்றன. 2020ல் தருமபுரம் மடத்தின் ஆதீனமான மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியை பல்லக்கில் தூக்கி செல்ல கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் திக, விசிக போன்ற கட்சிகள் இதற்கு எதிராக கடுமையான போராட்டங்களை செய்வோம் என்று அறிவித்து இருந்தன. ஆனால் ஆதீனம் இதற்கு எதிர்வினை எதுவும் கொடுக்காமல் இருந்தார்.
போராட்டம்
2020ல் இந்த சம்பவத்தின் போது திருப்பனந்தாளில் உள்ள அருணஜடேஸ்வரர் கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் செல்வதாக இருந்தது. ஆனால் அவரை எதிர்த்து விசிக, திகவினர் போராட்டம் செய்ய தயாராக இருந்தனர். கோவிலுக்கு வெளியே நூற்றுக்கணக்கில் இவர்கள் திரண்டு இருந்தனர். போலீசாரும் அப்போது குவிக்கப்பட்டு இருந்தனர். ஆதீனத்திற்கு எதிராக கடுமையாக கோஷங்கள் எழுப்பப்பட்டு வந்தன.
கோஷங்கள்
அப்போது உள்ளே வழிபாட்டில் இருந்த ஆதீனத்திடம்.. சுவாமி வெளியே கடுமையான போராட்டங்கள் நடக்கின்றன. என்ன செய்யலாம் என்று கேட்டுள்ளனர். அதற்கு ஆதீனம் சரி.. பல்லக்கு வேண்டாம். நடந்தே செல்கிறேன் என்று கூறினார். இது போலீசிடம் தெரிவிக்கப்பட்டு உடனே போலீசார் வெளியே இருந்த விசிக, திகவினரிடம் இந்த தகவலை தெரிவித்தனர். இதை கேட்டதும் உற்சாகம் அடைந்த விசிகவினர், திகவினர்.. பெரியார் வாழ்க.. அம்பேத்கர் வாழ்க என்று கோஷம் எழுப்பினர். இது நடந்தது 2020ல்.. ஆதீனம் அதே தருமபுரம் ஆதீனம்.
Recommended Video
இப்போது ஏன்?
அப்போது நடந்தே போகிறேன் என்று கூறிய தருமபுரம் ஆதீனம் இப்போது மீண்டும் பல்லக்கில் செல்வேன் என்று கூறி இருப்பதுதான் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் விசிக, திக புகாரை தொடர்ந்து வட்டாச்சியர் இதற்கு தடை விதித்து உள்ளார். 2020ல் நேரடி தடை இல்லாத போதே பல்லக்கை தவிர்த்த ஆதீனம் ஞானசம்பந்தம் இந்த முறை அரசு தடைக்கு இடையே செய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால்.. 2020 போலவே இந்த முறையும் ஆதீனம் எல்லோரையும் போல நடந்தே செல்லும் முடிவை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.