டெல்லி காட்டிய பச்சை கொடி.. "ஸ்வீட் எடுத்துக்கோங்க பாஸ்".. குஷியில் துள்ளும் டிடிவி! அப்போ சுபம்தான்
சென்னை: சசிகலா பற்றி சமீபத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்து ஒன்று இணையம் முழுக்க வைரலானது. அவர் கருத்தின் சூடு தணியும் முன்பே டிடிவி தினகரன் பற்றி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் இருந்தது. இதற்கு சுகேஷ் சந்திரா என்று இடைத்தரகரிடம் அவர் பணம் கொடுத்ததாகவும் புகார் உள்ளது.
சுகேஷ் சந்திரா மீது ஏற்கனவே பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. அதில் டிடிவி தினகரனிடம் லட்சம் பெற்றதாகவும், இரட்டை இலை சின்னத்தை மீட்டு தருவேன் என்று அவர் பொய்யாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியதாகவும் புகார் வைக்கப்பட்டது.
என்னடி மீனாட்சி.. சொன்னது என்னாச்சு? திமுக சாயம் வெளுத்துருச்சு - அட்டாக் மோடில் டிடிவி தினகரன்!
என்ன வழக்கு?
2017ல் அதிமுகவில் மோதல் நிலவிய போது இரட்டை இலை சின்னத்தை பெற கடும் போட்டி நிலவி வந்தது. அப்போது டிடிவி தினகரன் தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்பதே புகார். இந்த வழக்கில் ஏற்கனவே கைதாகி விடுதலை செய்யப்பட்டார் டிடிவி தினகரன். அதே சமயம் இந்த வழக்கில் டிடிவி தினகரனை ஏமாற்றியதாக சுகேஷ் சந்திரா மீதும் புகார் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திராவும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கில் மேற்கொண்டு இதில் விசாரணை நடத்தப்படவில்லை.
விசாரணை இல்லை
இதில் விசாரணைக்கு இடைக்கால தடை இருந்தாலும், இன்னொரு பக்கம் அமலாக்கத்துறை வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறது. அதில் லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரனுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்ற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதில் விசாரணையை அமலாக்கத்துறை வேகப்படுத்தி உள்ளது. இதுவரை வழக்கில் நடந்தது எல்லோரும் அறிந்ததே. இதன் பின் இரண்டு முறை அமலாக்கத்துறை டிடிவிக்கு சம்மன் அனுப்பியது.
இரண்டு முறை
இரண்டு முறை தினகரன் அமலாக்கத்துறை முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதில் முதல் முறை காலை 10.40 மணிக்கு டிடிவி தினகரன் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர் ஆனார். இரவு 10.40 மணி வரை அவரிடம் விடாமல் விசாரணை நடத்தப்பட்டது. எப்போதெல்லாம் அழைக்கிறோமோ அப்போதெல்லாம் ஆஜராக வேண்டும் என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் அமலாக்கத்துறை தினகரனுக்கு வேறு வகையில் செக் வைக்கிறதா அல்லது வழக்கில் இன்னும் விலகாத மர்மங்கள் ஏதாவது இருக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.
கேள்வி மேல் கேள்வி
இல்லை டெல்லி தரப்பில் இருந்து தினகரனுக்கு வேறு விதமான அழுத்தங்கள் எதுவும் கொடுக்கப்படுகிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த பத்திரிகையை டெல்லி சிபிஐ நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அந்த குற்றப்பத்திரிக்கையில் டிடிவி பெயர் இல்லை.
சுகேஷ்
சுகேஷ் மற்றும் குற்றவாளி என்று கூறி அவரின் பெயர் மட்டுமே சேர்க்கப்பட்டு உள்ளது. டிடிவி பெயர் இதில் இடம்பெறவில்லை. அவர் விசாரணைக்கு மட்டுமே ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் டிடிவி தரப்பிற்கு பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. வழக்கில் இனி அவர் பிரதான குற்றவாளி கிடையாது. சசிகலா பற்றி சமீபத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்தார். சசிகலாவிற்கு பெரிய சமூக பின்னணி உள்ளது. அவர் யாருக்கு ஆதரவு அளித்தாலும் அந்த கட்சி ஜெயிக்கும் என்று கூறி இருந்தார்.
தினகரன்
இந்த நிலையில்தான் தற்போது டிடிவி தினகரனுக்கு டெல்லியில் இருந்து குட் நியூஸ் வந்துள்ளது. அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதை.. எல்லாம் சுபமாக முடிந்தது என்று சந்தோசமாக ஸ்வீட் எடுத்து கொண்டாடி வருகிறார்கள். டிடிவிக்கு டெல்லி பாஜக மூலம் விடுக்கப்பட்ட வெள்ளை கொடி தூதுதான் இந்த குற்றப்பத்திரிகையோ என்ற கேள்வி எழுந்து இருக்கிறது... அதிமுக - பாஜக கூட்டணி முறியும் பட்சத்தில் டிடிவி - சசிகலா ஆதரவை பாஜக நாட பிளான் போடுகிறதோ... அதற்கான அடித்தளம்தான் இந்த கிரீன் சிக்னலோ என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.