தலைவர் பதவியை ஏற்க மறுத்த ரஞ்சித்? பிஎஸ்பி ஆனந்தன் உடைத்த உண்மை! நடந்தது என்ன?
சென்னை: பிஎஸ்பியின் மாநிலத் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு இயக்குநர் ரஞ்சித்திற்கு நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டதாக அக்கட்சியின் புதிய தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாகப் பொன்னை பாலு, அருள், பெண் தாதா அஞ்சலை உள்ளிட்ட 21 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால், இந்தப் படுகொலைக்குப் பின்னால் வேறு சில அரசியல் கட்சிகளின் சதி இருப்பதாகக் கூறி, விசாரணையைச் சரியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துக் கடந்த மாதம் 20 ஆம் தேதி நீலம் பண்பாட்டு இயக்கம் சார்பில் இயக்குநர் ரஞ்சித் பேரணி நடத்தினார். அந்தப் பேரணியில் விசிக தொண்டர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று திருமாவளவன் ஒரு அறிக்கை வெளியிட்டதால் விசயம் பரபரப்பானது. கூட்டத்தில் பேசிய ரஞ்சித் திமுகவைக் கடுமையாக விமர்சித்தது சமூக வலைத்தளத்தில் சர்ச்சையாக மாறியது. உடன்பிறப்புகள் பலர் கருத்து கூறிவந்தனர்.
இந்தப் பேரணி நடத்தப்படுவதற்கு முன்னதாகவும் ஆம்ஸ்ட்ராங் மறைவை ஒட்டி பிஎஸ்பியின் புதிய மாநில தலைவராக ரஞ்சித் நியமிக்கப்படுவார் என்று சில ஊகங்கள் வெளியாகின. அது குறித்து ரஞ்சித் மறுப்பு தெரிவித்திருந்தார். இதனிடையே தான் புதிய தலைவராக பி.ஆனந்தன் கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இயக்குநர் ரஞ்சித்தை பிஎஸ்பி மாநிலத் தலைவர் பதவியை ஏற்குமாறு நேரடியாகத் தானே அழைப்பு விடுத்ததாக ஆனந்த் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் இந்த விவகாரம் குறித்து விரிவாக சில உண்மைகளை வெளிப்படையாகக் கூறியுள்ளார். ஆனந்த் பேசும்போது, “கட்சியில் பல ஆண்டுகளாக ஆம்ஸ்ட்ராங்குடன் சேர்ந்தே பயணித்தவன் நான். ஆகவே தொண்டர்கள் அனைவரையும் எனக்குத் தெரியும். கூடவே ஆம்ஸ்ட்ராங்குடன் நான் எந்தளவுக்கு நெருக்கமாக இருந்தேன் என்பது பலருக்கும் தெரியும். குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் மனைவி எனக்கு ஒரு அண்ணியைப் போன்றவர். ஒரு குடும்ப உறவாகவே அண்ணன் ஆம்ஸ்ட்ராங்குடன் நான் பழக்கம் வைத்திருந்தேன். அதை அண்ணியும் அறிவார்.
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்குப் பிறகு அண்ணியைத்தான் கட்சியின் தலைவர் பொறுப்புக்குக் கொண்டுவர நான் உட்படப் பலரும் விரும்பினோம். ஆனால், அவரது மனநிலை இந்தப் பதவியை ஏற்கும் நிலையில் இல்லை. அவர் தனது கணவரை இழந்து மிகப்பெரிய சோகத்தில் இருக்கிறார். அவர் மனக் காயங்கள் ஆற சில காலங்கள் ஆகும். ஆகவே அவர், 'உங்களை எனக்கு நன்றாகத் தெரியும். எனது கணவருக்கு எந்தளவுக்கு நீங்கள் பக்கபலமாக இருந்தீர்கள் என்பதும் தெரியும். எனவே நீங்களே தலைவர் பதவியை ஏற்றுக் கட்சியை வழிநடத்துங்கள்’ என்று கோரிக்கை வைத்தார். அதை நான் உட்படப் பலரும் எதிர்பார்க்கவே இல்லை.
அதன்பிறகு அண்ணன் ஆம்ஸ்ட்ராங் இறப்புக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் பிஎஸ்பியின் அடுத்த தலைவராக இயக்குநர் ரஞ்சித் நியமிக்கப்படலாம் என்று ஊகங்கள் அடிப்படையில் செய்திகள் வந்தன. அதை நானும் எங்கள் கட்சி தொண்டர்களும் அறிந்திருந்தோம். என் கவனத்திற்கு அந்தத் தகவல் வந்தவுடன் நானே இயக்குநர் அழைத்துப் பேசினேன். அவர் பல ஆண்டுகளாக பிஎஸ்பியின் ஒரு விசுவாசியாக இருந்துவருகிறார். அவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் மீது அளவு கடந்த அன்புக் கொண்டவர். அவர் எங்கள் கட்சிக்கு தலைவராக வருவதால் கட்சியை மேலும் வலு சேர்க்கும். அந்த நல்ல எண்ணத்தில் தான் சகோதரர் ரஞ்சித்தை அழைத்து கட்சித் தலைமை பதவியே ஏற்கும்படி அழைப்பு கொடுத்தேன். அவரிடம், 'ஆம்ஸ்ட்ராங் அண்ணன் மனைவியைத்தான் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் என்று இருக்கிறோம். ஒருவேளை அவர் இந்தப் பதவியை ஏற்க மறுத்தால், நீங்கள் தலைவராக இருக்க வேண்டும்’ என்று நேரடியாக நானே கோரிக்கை வைத்தேன். ஆனால், அவர் அதை மறுத்துவிட்டார்.
மேலும், தனக்கு சில படங்களை இயக்கும் பொறுப்புகள் உள்ளதாகவும் ஆகவே கட்சியை ஏற்று நடத்துவது கஷ்டம் என்றும் சொன்னார். கூடுதலாக என்னையே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். நான் உங்களுடன் இருந்து ஆம்ஸ்ட்ராங்கிற்கு எந்தளவுக்கு ஆதரவாக இருந்தேனோ அதே ஆதரவை உங்களுக்கும் அளிப்பேன் என்றார்.
அப்போது கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கும் நிலையில் நான் இல்லை. அண்ணியைத்தான் அனைவரும் நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்திருந்தோம். அவரை சந்தித்து கோரிக்கை வைத்த போது அவரும் மறுத்துவிட்டதோடு என்னையே தலைமைப் பொறுப்பை ஏற்று நடந்த சொன்னார். அதை அப்படியே ஏற்காமல் கட்சி சார்பாக 3 பேர்களை தலைமைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. அதில் என் பெயரும் இருந்தது. இறுதியாகத் தேசிய தலைமைதான் என் பெயரைத் தேர்வு செய்து அறிவித்தது. இந்த விவகாரத்தில் நடந்த உண்மையான விசயங்கள் இவைதான்” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications