பிளஸ் 2 தேர்வு: திமுக, கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்தும் தமிழக அரசு ரத்து செய்தது ஏன்?.. ஸ்டாலினின் சமயோஜிதம்
சென்னை: பிளஸ்2 தேர்வை நடத்த வேண்டும் என திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தும் தமிழக அரசு ரத்து செய்தது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக இருந்து வரும் நிலையில் பிளஸ் 2 தேர்வை நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து பல கட்ட ஆலோசனைகளை தமிழக அரசு நடத்தியது.
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு குறித்து மத்திய அரசின் முடிவை பொருத்தே தமிழக அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
கல்வியாளர்கள்
இதற்கு மதிமுக, கல்வியாளர்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து அனைத்து கட்சிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் திமுகவும் கூட்டணி கட்சிகளும் தேர்வை நடத்த வேண்டும் என தெரிவித்தனர். அதிமுகவோ கட்சியின் மெஜாரிட்டி முடிவே எங்கள் முடிவு என கூறிவிட்டது.
பாமக
பாஜகவும் பாமகவும் கொரோனா சூழலில் மாணவர்களுக்கு தேர்வை நடத்தினால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் இதனால் கடும் விளைவுகள் ஏற்படும் என்றும் தங்கள் கருத்தை தெரிவித்தன. அது போல் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை ரிஸ்க் எடுத்து தேர்வு எழுத அனுமதிக்க மறுத்தனர்.
நிலைப்பாடு
இந்த நிலையில் திமுகவும் கூட்டணி கட்சிகளும் தேர்வை நடத்த ஆதரவை தெரிவித்தும் தமிழக அரசு தேர்வை ரத்து செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது பொதுமக்கள் பிரதிநிதிகளும், பொதுமக்களும், பாமக, பாஜகவும் தேர்வை நடத்துவது ஆபத்தை விளைக்கும் என அறிவுறுத்தியதை வைத்து அரசு இந்த நிலைப்பாட்டை நடத்தியதாக தெரிகிறது.
தடுப்பூசி
இதற்கு என்ன காரணம் என ஆராய்ந்தோமேயானால் தேர்வு நடத்த வேண்டும் என்றால் மிகப் பெரிய அளவில் திட்டமிட வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம், அத்துடன் ஆசிரியர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும். மேலும் தேர்வு நடத்தினால் பறக்கும் படையினர், ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள் என தேர்வுடன் தொடர்புடைய அனைத்து கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.
ஆபத்து
தற்போது தடுப்பூசியும் பற்றாக்குறையாக உள்ளது. முதல் அலையை விட இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகம் என்பதால் தடுப்பூசி போடுவது மட்டுமே ஆசிரியர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும். அவர்கள் போட்டால்தான் மாணவர்களுக்கு அரனாக இருக்கும். இது ஒரு புறம் இருக்க, ஒரு வேளை தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் கொரோனாவை தொற்றிக் கொண்டு விட்டால் அது எத்தனை ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும் அரசு உணர்ந்தது.
பொதுமக்கள்
மேலும் இத்தகைய சூழலில் சொந்த கட்சியும் கூட்டணி கட்சியும் சொல்கிறதே என்ற காரணத்தால் ரிஸ்க் எடுத்து தேர்வை நடத்தினால் அதனால் கடும் பின்விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும். இது பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும் ஏற்படுத்தும். திமுக அரசு பொறுப்பேற்ற முதல் அதன் செயல்பாடுகளை பொதுமக்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சியினரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழக அரசு தேர்வு ரத்து
இந்த ஒரு மாத காலத்தில் அரசு எடுத்த எந்த முடிவையும் பொதுமக்கள் எதிர்க்கவில்லை. அவ்வாறு இருக்கும் போது தேர்வை நடத்தி ஏதேனும் ஆபத்துகள் ஏற்பட்டால் அது காலத்திற்கும் திமுக அரசு மீது கறையாக படிந்திருக்கும். மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் நலனில் அக்கறை கொண்டதாலும் தங்கள் அரசு மீது களங்கம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் தமிழக அரசு தேர்வை ரத்து செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.