ஆளுநர் vs திமுக பிரச்னையே இங்கதான் ஆரம்பம்.. “இதனால்தான் கையெழுத்து போடல” சப்போர்ட்டாக வந்த அண்ணாமலை
சென்னை : ஆளுநருக்கும் திமுகவிற்கும் இடையிலான முதல் பிரச்சனை நாங்கள் கொடுத்த மசோதாவில் ஆளுநர் கையெழுத்து போடவில்லை என்பதுதான். 2021-ல் ஆளுநருக்கு வந்த அனைத்து மசோதாக்களிலும் ஆளுநர் கையெழுத்து போட்டார். சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான மசோதாக்களுக்கு மட்டும்தான் கையெழுத்திடவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கிடையே, ஆளுநரின் பேச்சுகளால் திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பனிப்போர் மூண்டுள்ளது.
ஜனவரி 9ஆம் தேதி சட்டப்பேரவையில் இந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது. இந்நிலையில், ஆளுநர் ஏன் மசோதாக்களுக்கு கையெழுத்து போடவில்லை என்பது பற்றிப் பேசியுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.

ஆளுநர் உரை எங்களுக்கும் திருப்தியில்லை
செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையில் எங்களுக்கும் திருப்தி இல்லை. ஏனென்றால் ஆளுநர் பல இடங்களில் திமுக ஆட்சியை பாராட்டி பேசியிருக்கிறார். திமுக கொடுத்ததை ஆளுநர் அப்படியே வாசித்துள்ளார். ஆளுநர் எந்த இடத்திலும் தனது சொந்த கருத்தை திணித்துப் பேசவில்லை. திமுக அரசு கொடுத்த உரையில் உள்ள சில விஷயங்களை ஆளுநர் தவிர்த்துள்ளார், காரணம் அவை பொய். அவர்கள் கொடுத்ததை ஆளுநர் அப்படியே படிக்கவில்லை என்பதுதான் திமுகவினரின் பிரச்சனை. திமுக கொடுத்ததை படித்திருக்கிறார் என்பது பாஜகவின் பிரச்சனை. அரசு கொடுக்கும் உரையை ஆளுநர் சட்டசபையில் படிப்பது என்பது மரபு. ஆனால் உண்மை நிலையை கொடுக்கவேண்டும் என திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

திமுகவுக்கும் ஆளுநருக்கும் பிரச்சனை
12 பல்கலைக்கழகங்களில் முதலமைச்சரை வேந்தராக அறிவிக்கும் சட்ட முன்வடிவை ஆளுநர் நிறுத்தி வைத்தார். யுஜிசி விதி 156 படி வரம்பு மீறியதாகும். இதனால்தான் ஆளுநருக்கும் முதல்வருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. ஆளுநருக்கும் திமுகவிற்கும் இடையிலான முதல் பிரச்சனை நாங்கள் கொடுத்த மசோதாவில் ஆளுநர் கையெழுத்து போடவில்லை என்பது திமுகவின் குற்றச்சாட்டு. 2021-ல் ஆளுநருக்கு வந்த அனைத்து பில்லிலும் கவர்னர் கையெழுத்திட்டார். 2022ல் 15 மசோதாக்களில் கையெழுத்து போடாமல் வைத்திருந்தார். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சர் வேந்தராக நியமிக்க வேண்டும் என்ற மசோதாவில் ஆளுநர் கையெழுத்து போடவில்லை.

ஏன் கையெழுத்து போடவில்லை
காரணம் அது 1956 யுஜிசி சட்டத்திற்கு எதிரானது. ஆளுநர் கையெழுத்து போட்டாலும் கோர்ட்டில் தடை விதிக்கப்படும். இது மாநில அரசின் வரம்பிற்குள் இல்லை என்பதால் அவர் கையெழுத்திடவில்லை. கேரளா மற்றும் மேற்கு வங்கம் மாநில ஆளுநர்களும் கையெழுத்து போடவில்லை. மற்றொரு பில் கூட்டுறவு சொசைட்டி நிர்வாகத்தை கலைக்கக்கூடிய அதிகாரத்தை அதிகாரிகளுக்கு கொடுக்கக்கூடிய பில். அதில் ஆளுநர் கையெழுத்து போடவில்லை. இவ்வளவு காலமாக அதில் உள்ள நடைமுறை என்னவென்றால் ஏதேனும் அதில் பிரச்சனை இருந்தால் ஒரு அதிகாரியை நியமித்து அவர் விசாரணை செய்வார். அதன் பின்பு அந்த உறுப்பினருக்கோ, தலைவருக்கோ நோட்டீஸ் அனுப்பப்படும்.

15 மசோதாக்கள் மட்டுமே
அதற்கு அவர் விளக்கம் சொல்வார். அதன் பின்பே கலைக்கப்படும். ஆனால் திமுக கொண்டு வந்துள்ள அந்த புது பில் மாநில அதிகாரியே நேரடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே. இதன் மூலம் 40,000 பேரையுமே டிஸ்மிஸ் செய்ய வைத்து மீண்டும் தேர்தல் நடத்தி திமுகவினரை உட்கார வைக்க வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் . இது ஜனநாயகத்திற்கு எதிரானது. பாஜகவை பொறுத்தவரை ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு ஆளுநரிடம் அளித்த 59 மசோதாக்களில் 15 மசோதாக்கள் மட்டுமே இதுவரை கையெழுத்து இடவில்லை மற்ற அனைத்து மசோதாக்களும் கையெழுத்து இடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications