இந்திய அணியின் துருப்புச்சீட்டு.. ஏன் ஷமியை விட சிராஜ் சிறந்தவர்.. தேர்வு செய்யுமா பிசிசிஐ?
சென்னை: முழுமையான உடற்தகுதி மற்றும் நல்ல மனநிலையில் சிறப்பாக பந்துவீசி வரும் முகமது சிராஜை டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
நேற்றுடன் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிவடைந்துள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 99 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 100 ரன்கள் என்ற இலக்கை மிக எளிதாகவும், நிதானமாகவும் இந்திய அணி விரட்டியது. இந்தப் தொடரின் நாயகனாக முகமது சிராஜ் அறிவிக்கப்பட்டார்.
அதற்கான காரணம் ஒவ்வொரு போட்டியிலும் பவர் ப்ளே ஓவர்களை வீசியதோடு, விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி சாதகத்தை ஏற்படுத்தியது தான். இந்திய அணி வெற்றிபெற்ற இரு போட்டிகளிலும் சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த ஏதுவாக இவர் ரன்களை விட்டுக்கொடுக்காமல் ஒரு பக்கம் பவர் ப்ளே ஓவர்களில் கட்டுக்கோப்பாக வீசியதுதான் காரணமாக அமைந்தது.
”ஏலியனின் ஜெராக்ஸ்” தென் ஆப்பிரிக்காவை தனி ஒருவனாக அசால்ட் செய்த சூர்யகுமார் யாதவ்!
தொடர் நாயகன் சிராஜ்
கிட்டத்தட்ட இரண்டாம் தர இந்திய அணி என்று விளையாடிய இந்தத் தொடரில், தென் ஆப்பிரிக்கா முழுமையான பலத்துடன் களமிறங்கியது. அதில் சிராஜ் தனது திறமையை மிகச்சிறப்பாக நிரூபித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பவர் ப்ளே, மிடில் ஓவர்கள், டெத் ஓவர்கள் என ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் பந்துவீசக் கூடிய பவுலராக சிராஜ் முன்னேற்றமடைந்துள்ளார். இதனால் டி20 உலகக்கோப்பைத் தொடரில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளது.
ஷமியிடம் உள்ள பிரச்சினை
அதற்கான காரணங்களும் சரியாக இருக்கின்றன. குறிப்பாக முகமது ஷமியால் பவர் ப்ளே ஓவர்களில் சீமை பிடித்து நன்றாக வீச முடிந்தாலும், டெத் ஓவர்களில் ஷமியின் பந்துவீச்சு இதுவரை எடுபட்டதில்லை. அதற்கு அவரிடம் வெரைட்டி இல்லாததும் ஒரு காரணம் என்று கூறலாம். அதனாலேயே டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஷமியை இந்திய அணி நிர்வாகம் விலக்கி வைத்தது.
வேரியேஷன் காட்டும் சிராஜ்
ஆனால் சிராஜிற்கு அப்படியல்ல. அவரால் புதிய பந்தில் ஸ்விங் செய்யவும் முடியும், கிராஸ் சீமி பந்துகளை பிடித்து வீசவும் தெரியும், வாபுல் சீமும் வீச முடியும். யார்க்கர், வைட் யார்க்கர், பிலாக் ஹோல், பவுன்சர் என்று பலவகை பந்துகளை அவரால் வீச முடியும். அவரிடம் இதுதான் தேவை, இந்த பந்துகளை வீசினால் போதும் என்று சரியான திட்டங்களை கொடுத்தால், அந்த திட்டத்தை சரியாக செயல்படுத்தக் கூடிய திறமை சிராஜிடம் அதிகம் இருக்கிறது.
இந்திய வீரர்களின் பிரச்சினை
இதனை ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட ஆடுகளங்களில் செய்துகாட்டியவர். ஹர்சல், அர்ஷ்தீப், புவனேஷ்வர் குமார், ஹர்திக் ஆகியோரால் ஆட்டத்தின் அனைத்து நேரங்களிலும் வீச முடியாது. புவனேஷ்வர் குமாருக்கு டெத் ஓவர் பிரச்சினை இருக்கிறது, ஹர்சல் படேல் ஃபார்மின்றி தவித்து வருகிறார், அர்ஷ்தீப் சிங் ஆஸி. ஆடுகளத்தில் எப்படி வீசப் போகிறார் என்று தெரியாது, ஹர்திக் பாண்டியாவால் டெத் ஓவர்கள் வீச முடியாது என்று ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் ஒரு பிரச்சினை இருக்கிறது.
யாரை தேர்வு செய்வார்கள்?
இந்தப் பிரச்சினைகளை சரிசெய்யும் வகையில் சிராஜை இந்திய அணி தேர்வு செய்து ஆஸ்திரேலியாவில் களமிறக்கினால், சரியான பலன் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால் பும்ரா இல்லாமல் இந்திய ஒருநாள் அணிக்கு, பவர் ப்ளே மற்றும் டெத் ஓவர்களில் பந்துவீசி முழுமையான உடற்தகுதியிடனும், நல்ல மனநிலையிலும் இருக்கிறார். ஆனால் ஷமியா அல்லது சிராஜா என்ற ஆப்ஷனில் இந்திய அணி நிர்வாகம் யாரை தேர்வு செய்யும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.