ஜெயலலிதா சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல மறுத்தது இதற்காகத்தான்.. சசிகலா வெளியிட்ட சீக்ரெட்
சென்னை: நான் இருக்கும் வரை தொண்டர்கள் சோர்வு அடையமாட்டார்கள். அதிமுகவை ஒன்றிணைக்கும் பணியை தொடங்கிவிட்டேன். அது ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. என்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல மறுத்தது எதற்காக என்பதற்கும் பதிலளித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
அதில் பங்கேற்ற சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இதுதான் எம்.ஜி.ஆர் காட்டிய வழி
எல்லோருக்கும் பொதுவான ஆளாகத்தான் நான் இருக்கிறேன். இப்பவும் எந்த பக்கமும் நான் இல்லை. தொண்டர்களை பொருத்தவரை யாரையும் பிரித்து பார்க்கவில்லை. பலன் பெற்றவர்கள் கூட இருக்காலாமே தவிர தொண்டர்கள் அனைவரும் இணைந்து எடுக்கும் முடிவுதான் என்றைக்குமே நிரந்தரமானது. அதுதான் எம்.ஜி.ஆர் காட்டிய வழி. அந்த வழியில்தான் ஜெயலலிதாவும் செயல்பட்டார். நானும் அதே வழியில்தான் செயல்படுகிறேன். எனக்கு என தனி ஆள் யாரும் இல்லை.

நான் இருக்கும் வரை..
எல்லா மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி... எல்லா இனத்தை சேர்ந்தவர்களும் சரி... எல்லாருமே ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு தாய் மக்களாகத்தான் எம்.ஜி.ஆரும் ஜெயலிதாவும் நடத்தினார்கள். அந்த வழியில் தான் நானும் செயல்படுகிறேன். நான் இருக்கும் வரை தொண்டர்கள் சோர்வு அடையமாட்டார்கள். அதிமுகவை ஒன்றிணைக்கும் பணியை தொடங்கிவிட்டேன். அது ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. புயல் வெள்ளத்தினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

வெட்ட வெளிச்சமாக தெரிகிறது
அரசாங்கம் கரும்புகளை வாங்காவிட்டால் இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு அடிமாட்டு விலைக்கு வாங்குவார்கள். அப்படி நடக்கக்கூடாது என்பதுதான் ஜெயலலிதாவின் எண்ணமாக இருந்தது. அதனால்தான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் ஒரு கரும்பு கொடுத்தார். அதே மாதிரி கொடுக்க வேண்டும் என்றுதான் நான் சொன்னேன். ஆனால், அதை அரசு செய்யவில்லை. அவர்கள் (திமுக) தேர்தல் அறிக்கை எந்த அளவுக்கு இருந்தது... இப்போது நடந்து கொள்வது எப்படி? என்பது அனைவருக்குமே வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

யாராலும் அசைக்க முடியாது
தனக்கு பின் யார் வந்தால் சரியாக இருக்கும் என்பது ஜெயலலிதாவுக்கு தெரியும். அந்த வேலைகளும் நடந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், திடீரென உடம்பு முடியாமல் போனது. யாருமே எதிர்பார்க்காத அளவு நடந்து விட்டது. அதன்பிறகு வழக்கில் தீர்ப்பு வந்தது. அப்போது பெங்களூரு செல்ல வேண்டிய நிலை வந்த போதும் கூட அதிமுகவை ஆட்சியில் இருக்க வைத்து விட்டுத்தான் நான் சென்றேன். அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்பதை இப்போதும் தைரியமாக சொல்கிறேன்.

பாதத்தை பார்த்து தான் நடப்பேன்
எல்லோருடைய மனதும் ஒரே மாதிரியாக இருக்காது. என்னை எந்த உயரத்தில் வைத்தாலும் நான் என்னுடைய பாதத்தை பார்த்துதான் நடப்பேன். அதனால் ஒருவருடைய செயல்பாடுகள் மாறும் போதும் யாரும் எதுவும் செய்ய முடியாது. ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட அத்தனை பதில்களுக்கு எழுத்து மூலமாக நான் பதில் கொடுத்தேன். எய்ம்ஸ் மருத்துவர்கள் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளவர்களா? அவர்கள் பொதுவானவர்கள்.. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவர்கள்..

வெளிநாடு சிகிச்சை செல்வதற்கு ஜெயலலிதா..
வெளிநாடு சிகிச்சை செல்வதற்கு ஜெயலலிதா சம்மதம் தெரிவிக்கவில்லை. எங்களுக்கு வெளிநாடு அழைத்து செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், இங்கே சிகிச்சை நன்றாகவே நடக்கிறது என ஜயலலிதா கூறிவிட்டார்" என்றார். இவ்வாறு சசிகலா பேசினார். ஓபிஎஸ் நடத்திய கூட்டத்தில் அதிமுகவில் பிடித்த நோய் எடப்பாடி பழனிசாமிதான் என்று விமர்சித்துள்ளர்கள்.. அது பற்றிய உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சசிகலா கூறியதாவது:-

10 பிள்ளைகள் இருந்தாலும் தாய் ஒன்றுதான்
என்னை பொருத்தவரை நல்ல டாக்டர்கள் இருந்தால் நோயாளிகளை குணப்படுத்திவிடலாம். என்னை பொருத்தவரை நாம் பயந்து ஓடி ஒளியும் ஆள் கிடையாது. தமிழக மக்களுக்கு என்ன தேவையோ அதை கேட்டு பெறுவோம். அதை செய்யும் தைரியமும் நம்பிக்கையும் எனக்கு உள்ளது" என்றார். அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஸ் இருவருமே தலைமை பொறுப்புக்கு வரவேண்டும் என்று விரும்புவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சசிகலா, "ஒரு வீட்டில் 10 பிள்ளைகள் இருந்தாலும் தாய் ஒன்றுதான்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications