5வது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் மநீம..நேற்று வந்த விஜய் மக்கள் இயக்கம் அளவுக்குகூட சாதிக்காதது ஏன்?
சென்னை: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சாதித்த அளவுக்கு கூட மக்கள் நீதி மய்யம் சாதிக்கவில்லையே இது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

விஜய் மக்கள் இயக்கம்
இதில் காலையில் வாக்குப் பதிவு தொடங்கியதுமே விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் வார்டுகளில் வென்றுள்ளார்கள். ஆனால் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. ஒரு ஓட்டை தவிர பெறவில்லை. சில இடங்களில் நேற்று வந்த விஜய் மக்கள் இயக்கம் 5ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் மக்கள் நீதி மய்யத்தின் நிலையோ பரிதாபத்துக்குரிய வகையில் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மக்கள் நீதி மய்யம் தேர்தலை சந்தித்து வருகிறது. சட்டசபை தேர்தலில் வெற்றியின் படிக்கட்டை தொட்டுபார்த்துவிட்டு திரும்பி வந்தார் கமல்ஹாசன்.

கமல்ஹாசனின் தேர்தல் வியூகங்கள்
கடந்த சட்டசபை தேர்தலின் போதே கமல்ஹாசனின் தேர்தல் வியூகங்கள் சரியில்லை என கூறி மகேந்திரன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து விலகினர். தற்போது தனது வியூகத்தை சற்று மாற்றியிருந்த போதிலும் அவரது வேட்பாளர்களை மக்கள் ஏற்கவில்லை. இத்தனைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நேரங்களில் அரசியல் பேசி வந்தார். ஆனால் விஜய் இதுவரை தனது ரசிகர்களுக்கு ஓட்டு போடுங்கள் என கேட்டதில்லை.

கமல்ஹாசன் நடிப்பு
அது போல் கமல்ஹாசன் 50 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் கோலோச்சி வருகிறார். நடிகர் விஜய் 25 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனாலும் கமல்ஹாசனை விட விஜய்க்கு மக்கள் செல்வாக்கு அதிகம் என கூறிவிட முடியாது. விஜய் தனது படங்களிலும் இசை வெளியீட்டு விழாவில் மட்டுமே அரசியல் பேசி வருகிறார். ஆனால் கமல்ஹாசன் நாட்டில் நடைபெறும் சமூகம் சார்ந்த எந்த பிரச்சினைக்கும் குரல் கொடுத்து வருகிறார்.

தவறு எங்கே?
அவ்வாறிருக்கையில் எங்கே தவறு நடந்திருக்கும்? இதுகுறித்து விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மக்களோடு மக்களாக பழகி வருகிறார்கள். மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். மழை, வெள்ளம், புயல் , கொரோனா நேரங்களில் மக்களுக்கு பக்க பலமாக இருந்தார்கள். ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அது போல் செய்ததாக பெரிதாக வெளியே தெரியவில்லை. இது ஒரு காரணமாக இருக்குமோ?

நிதியுதவி
நகர்ப்புற தேர்தல் செலவுக்காக கமல்ஹாசன் பொதுமக்களிடம் நிதியுதவி அளிக்குமாறு கேட்டிருந்தார். அது பொதுமக்களுக்கு முகம் சுளித்துவிட்டதா? இல்லை வேட்பாளர்கள் தேர்வு சரியில்லாமல் போய்விட்டதா? அதாவது உள்ளூர் செல்வாக்கு மிக்கவரை வேட்பாளராக தேர்வு செய்யாமல் விடப்பட்டுவிட்டதா ? உள்ளிட்ட கேள்விகள் எழுகின்றன.

சட்டசபை தேர்தல்
கடந்த சட்டசபை தேர்தலை போல் வேட்பாளர்களையும் கட்சியினரையும் கமல்ஹாசன் குறை சொல்லாமல் அடுத்த தேர்தலுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போதிலிருந்தே திட்டமிட வேண்டும். கட்சியை தொடங்குவதற்கு முன்னர் தொகுதி தொகுதியாக கமல்ஹாசன் போய் குறைகளை கேட்டறிந்தார். அது போல் அவர் தேர்தலில் இறங்கி பணியாற்றவில்லை என மக்கள் கருதுகிறார்களா? இப்படி நிறைய கேள்விகள் இருக்கின்றன என்றார்கள். எதுவாக இருந்தாலும் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய நாள் பிப்ரவரி 21 ஆம் தேதி. 5ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நாளில் அவருக்கு இப்படி ஒரு சோகம் நிகழ்ந்திருக்கக் கூடாது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications