வேலுமணி மீது முதல்வர் ஸ்டாலினுக்கு "ஒரு விஷயத்தில்" கோபம்.. அதனால்தான் ரெய்டு: மாஜி அமைச்சர் மணியன்
சென்னை: கடன் வாங்காத அரசே இல்லை என்றும், ஆட்சி நடத்த முடியாவிட்டால் அதிமுகவிடம் ஆட்சியை ஓப்படைத்துவிட்டு செல்லுங்கள் என்றும், மயிலாடுதுறையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மேலும், வேலுமணி மீது ஸ்டாலின் கோபப்பட என்ன காரணம் என்று ஒரு காரணத்தையும் மணியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அதிமுக கட்சி அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு பேசினார்.

பானையில் இல்லை
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு தன்னுடைய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்கிறது என்றால் பானையில் இல்லை, அகப்பையில் வரவில்லை என்று சொல்வதற்காகத்தான். இதற்காகத்தான், வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கடன் வாங்காத அரசு யார்
கடன்பெற்றுதான் ஆட்சி நடத்துகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். பல்வேறு இயற்கை இடர்பாடுகள் சந்திக்கும் போது மக்களை சிக்கலில் இருந்து விடுவிக்க வேண்டும், மக்கள் மகிழ்ச்சியோடு, இன்னல்கள் இல்லாமல் வாழவேண்டும். அதற்கு அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்துகிறது. அதற்கு நிதிதேவை. நிதி இல்லாதபோது கடன் வாங்கி ஆட்சி நடத்துகிறோம். கடன் வாங்காத அரசு நாட்டில் எங்கே இருக்கிறது.

ஆட்சியை கொடுத்து விடுங்கள்
வெள்ளை அறிக்கை தாக்கல் செய்கிறோம். கடன் அவ்வளவு இருக்கு, இவ்வளவு இருக்கிறது என்று சொல்லும் திமுக.., அதிமுக இவ்வளவு கடன்வைத்துவிட்டு வெளியே செல்ல விரும்புகிறார்கள் என்று கூறுவது உகந்தது அல்ல. கடன் அதிகமாக இருப்பதால், நாங்கள் ஆட்சி நடத்தவிரும்பவில்லை, அதிமுகவே ஆட்சி நடத்தட்டும் என்று கூறவேண்டியதுதானே. ஆட்சிக்கு வந்தவர்கள் இருக்கிறதை வைத்து ஆட்சி நடத்தவேண்டும். அதிமுக மீது பழியை சுமத்துவது வேண்டாத அவசியமற்றது. இது மற்றவர்களை ஏளனம் செய்ய வேண்டுமென்பதற்காக கூறுவது.

அச்சுறுத்த முடியாது
திமுக கெட்டிக்காரத்தனமாக ஆட்சி நடத்த வேண்டும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடக்கிறது. அச்சுறுத்தியோ, மிரட்டியோ முடக்கிபோட இதுபோன்ற செயல்களில் திமுக ஈடுபடுகிறது. அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. ஆளும்கட்சி, எதிர்கட்சி என்று மாறிமாறி பார்த்திருக்கிறோம். அதிகார துஷ்பிரயோகம் செய்யும் வகையில் திமுக செயல்பாடுகள் இருக்கிறது. இதனை அதிமுகவில் உள்ள அனைவரும் நிமிர்ந்து நின்று சந்திப்பார்கள்.

மேகதாது அணை கட்ட முடியாது
வேளாண் பட்ஜெட் வரட்டும், அதுவும் வெள்ளையாக இருக்கிறதா, பச்சையாக இருக்கிறதா என்பதை பார்ப்போம். கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணைகட்டுவது என்பது நடத்த முடியாத ஒன்று. பல்வேறு சட்டப் பாதுகாப்புகள் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்க முடியாது. நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருக்கிறது. தமிழகத்திற்கு சட்டப் பாதுகாப்பை ஜெயலலிதா பெற்று தந்திருக்கிறார்கள். பேசுவார்களே தவிர கர்நாடக அரசால் அணை கட்ட முடியாது.

வேலுமணி மீது முதல்வருக்கு கோபம்
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்றதொகுதிகளில் அதிமுகவை வெற்றிபெறசெய்தவர் முன்னாள் அமைச்சர் வேலுமணி. அந்த கோபம் முதல்வருக்கு அதிகமாக இருப்பதால் அரசியல் ரீதியாக பழிவாங்கும் தாக்குதல் நடத்துகிறார்கள். வேலுமணி டெண்டர் விட்டதில் முறைகேடு என்று செய்திகள் வெளியாகி வருகிறது. டெண்டரில் மிகப்பெரிய ஒரு முறைகேட்டை, சட்டவிரோத நடவடிக்கையை, நடைமுறைப்படுத்தி காட்டியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. வீராணம் டெண்டர் வைத்தபோது எல் 1ஆக அவர்நினைத்தவர் வரவில்லை என்பதற்காக எல்2வாக இருந்தவரை டெண்டர் கொடுக்க 5 இனங்களில் டெண்டர் தொகையை குறைத்து டெண்டரை கொடுத்தார்கள். அதில் இன்னும் பல்வேறு முறைகேடுகள் உள்ளது. வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது.

இ-டெண்டரில் முறைகேடு நடக்காது
வீராணம் ஊழல் குறித்து எம்.ஜி.ஆர்., இந்திய கம்யூ. கட்சி தலைவர் கல்யாணசுந்தரம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அமைக்கப்பட்ட சர்காரியா கமிஷனில் சொல்லப்பட்ட விபரங்கள் நிதித்துறைக்கு செல்லாமல் முதல்வர் முடிவெடுத்துள்ளார், தலைமை செயலாளர் விடுத்த நடவடிக்கையை எல்லாம் புறம்தள்ளி டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், டெண்டர் முறைகேடு தற்போது நடக்க சாத்தியம் இல்லை. இ-டெண்டர் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். டெண்டர் முறைகேடு என்று சொல்வதை நான் ஏற்க தயாராக இல்லை என்றார்.

வேலுமணி ரெய்டு
இதனிடையே இன்று காலை 6 மணி முதல் தொடர்ந்து, சுமார் 12 மணி நேரம் அளவுக்கு நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்பு சோதனைகள் முடிவுக்கு வந்துள்ளன. வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள் மற்றும் இடங்களில் என தமிழகம் முழுக்க 53 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த சோதனையை நடத்தி முடித்தனர். சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் வேலுமணி இருந்ததால் அங்கு வைத்து அவரிடம் துருவித் துருவி விசாரணை நடைபெற்றது. காலை முதல் மாலை வரை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று இருக்கிறது. சோதனைகள் நடைபெற்ற பகுதிகளில் தீவிரமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதிமுக தொண்டர்கள் போராட்டங்கள் நடத்திய போதிலும் கூட பெரிய அளவுக்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் காவல்துறையினர் உரிய ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள். ஒரு சில இடங்களில் மட்டும் காவல் துறையினருடன், அதிமுகவினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications