தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை மக்கள் போட தயக்கம் ஏன்?.. ஆய்வில் வெளியான காரணங்கள்!
சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை மக்கள் போட தயங்குவது ஏன் என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா முதல் அலை வந்த போது நமக்கு தடுப்பூசிகள் ஏதும் இல்லை. மேலும் இரண்டாவது அலை தீவிரமடைந்து நிறைய உயிரிழப்புகளை சந்தித்த போது தடுப்பூசி குறித்து மக்களுக்கு ஒருவித விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து காலை 4 மணி முதல் காத்திருந்து தடுப்பூசியை போடுகிறார்கள். சில இடங்களில் தடுப்பூசி இல்லை என போர்டு வைத்திருந்தாலும் சண்டையிட்டு ஏன் தடுப்பூசி இல்லை என கேட்கும் அளவுக்கு மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டதாகவே மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மக்கள் தயார்
ஆனால் அதே வேளையில் தடுப்பூசியை போட மக்கள் தயாராக இருந்தாலும் அதற்கான இருப்புகள் என்பது குறைவாகவே இருக்கிறது. மேலும் தமிழகத்தில் சில இடங்களில் தடுப்பூசியை போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பலர் தயங்குவதற்கு காரணம் என்ன என்று பொது சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்
இதுகுறித்து பொது சுதாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தாவது: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசிதான் முக்கிய ஆயுதம். அதனை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

தடுப்பூசிக்கு தயக்கம் ஏன்
இந்தநிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு தயக்கம் ஏன் உள்ளது என்பது தொடர்பான ஆய்வு ஒன்று அண்மையில் நடத்தப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 95 இடங்களில் அதனை பொது சுகாதாரத்துறை நடத்தியது. ஏறத்தாழ 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் அதுதொடர்பான தகவல்களை திரட்டினோம்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பெண்கள்
அதில் 80.3 சதவீத ஆண்களும், 81.6 சதவீத பெண்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தனர். அதேவேளையில், 19.7 சதவீத ஆண்களும், 18.4 சதவீத பெண்களும் தடுப்பூசி செலுத்துவதற்கு தயக்கம் காட்டினர். அதற்கு பிரதான காரணமாக அவர்கள் கூறியது தடுப்பூசி செலுத்திக்கொள்ள அச்சமாக உள்ளது என்பதுதான்.

அதீத நம்பிக்கை
அதற்கு அடுத்தபடியாக தனக்கு கொரோனா தொற்று வராது என்ற அதீத நம்பிக்கையில் 36 சதவீதம் பேர் உள்ளதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. தடுப்பூசி தட்டுப்பாடு, தடுப்பூசிக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பது, தடுப்பூசியின் செயல் திறன் மீதான சந்தேகம், உடன் எவரும் துணைக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வராதது என பல்வேறு காரணங்களும் முன்வைக்கப்பட்டன.
Recommended Video

தடுப்பூசியின் அவசியம்
இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் தடுப்பூசியின் அவசியம் மற்றும் அதுதொடர்பான புரிதலை பொது சுகாதாரத் துறையினர் ஏற்படுத்தினர். தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று நம்பிக்கையும் விதைத்தனர். ஊரகப் பகுதிகளில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மேலும் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

செய்திக் குறிப்பு
தமிழகத்தில் தடையின்றி தடுப்பூசிகளை செலுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தாவது விழிப்புணர்வு இல்லாமல் தயங்கும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்களா என்பதை பார்ப்போம்.












Click it and Unblock the Notifications