ஏய்யா கூட்டணிக்காக அலையறீங்க.. தில்லிருந்தா தனியா நிக்கலாமே.. மக்கள் சவால்
சென்னை : எதுக்காக கூட்டணி வேண்டும் என்று இந்தக் கட்சிகள் அலைய வேண்டும். தில் இருந்தால் நாம் தமிழர் கட்சி மாதிரி தனியா போட்டியிட வேண்டியதுதானே என்று மக்கள் கட்சிகளைப் பார்த்து சவால் விடும் அளவுக்கு சில கட்சிகளின் நிலை போய் விட்டது.
சட்டசபை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் துவங்குவதற்கு இன்றும், நாளையும் மட்டுமே அவகாசம் உள்ளது. ஆனால் பிரதான கட்சிகளான அதிமுக, திமுகவை தவிர்த்து பல கட்சிகள் கூட்டணிக்காகக அல்லாடிக் கொண்டுள்ளனர்.
சில கட்சிகள் இன்று வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதாக தெரிவித்துள்ளன. இருந்தாலும் கூட்டணிக்குள் குழப்பமான நிலை நீடிக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை. கூட்டணி மாறும் நிலை ஏற்பட்டுள்ளதால், வேட்பாளர் பட்டியலிலும் கூட கடைசி நிமிடத்தில் மாற்றம் வரலாம் என்றே சொல்லப்படுகிறது.
தேமுதிக.,வால் வந்த குழப்பம்
அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்தது முதல் மற்ற கட்சிகள், தேமுதிக.,வை தங்கள் பக்கம் இழுக்க படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றன. தேமுதிக விலகியதால் தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கேட்பதால் அதிமுக கூட்டணிக்குள் குழப்பம். தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வந்தால் மற்ற கட்சிகளுக்கு ஏற்கனவே ஒதுக்கிய தொகுதிகளை எப்படி குறைப்பது என்ற குழப்பத்தில் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் உள்ளன.
ஏன் கூட்டணிக்கு அலையனும்
இதுவரை ஆண்ட கட்சிகளும் சரி, மாற்றத்தை கொண்டு வர போவதாக கூறி அரசியலுக்கு வந்துள்ள கமலும் சரி தங்கள் கூட்டணியில் மற்ற கட்சிகளை வளைப்பதிலேயே அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றன. தனித்து போட்டியிட தைரியம் இல்லையா? தங்கள் செல்வாக்கு மீது நம்பிக்கை இல்லையா? மக்கள் மீது நம்பிக்கையில்லையா? என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
ஜெ., பாணியை பின்பற்றும் சீமான்
தமிழக அரசியலில் இதுவரை ஜெயலலிதா மட்டுமே 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு, அதில் வென்றும் காட்டியவர். மற்றவர்கள் தேர்தல் என்றாலே முதலில் யோசிப்பது யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பதை தான். ஆனால் ஆண்ட, ஆளும் கட்சிகளான அதிமுக, திமுக.,விற்கு இல்லாத துணிச்சல் சீமானுக்கு உள்ளது. ஓட்டு வங்கி, செல்வாக்கு எதையும் நினைக்காமல் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து, பிரசாரத்தையும் துவக்கி விட்டார்.
யாருக்கும் தைரியம் இல்லையா
பல சாதனைகளை செய்ததாக கூறி பிரசாரத்தை துவக்கி உள்ள அதிமுக, மக்கள் ஆதரவு பெருகி வருவதாக கூறி வரும் திமுக, மக்கள் மாற்றத்தை விரும்புவதாக கூறும் கமல், தேசிய அளவில் மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்தருப்பதாக கூறும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, பழம்பெரும் கட்சி என கூறிக் கொள்ளும் காங்கிரஸ் இவற்றில் எந்த கட்சியும் தனித்து போட்டி என்பதை அறிவிக்க முடியவில்லை. தேர்தலில் போட்டியிடுவதை கூட கூட்டணி ஏறக்குறைய உறுதியான பிறகு தான் பல கட்சிகள் அறிவித்துள்ளன.
ஒருமுறை தனித்து நின்னா தான் என்ன
ஒருமுறையாவது அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டு, தங்கள் பலத்தையும் செல்வாக்கையும் காட்டினால் தான் என்ன...அப்போது மற்ற கட்சிகளுக்கும், மக்களுக்கும் எந்த கட்சிக்கு உண்மையான மக்கள் ஆதரவு, அதிக மக்கள் செல்வாக்கு உள்ளது என்பதை காட்டி விடலாமே...வெறும் மேடை பேச்சில், பிரசாரத்திற்கு கூட்டம் சேர்ப்பது என்பதை தாண்டி மக்கள் ஆதரவை பெறும் கட்சி எது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்து விடுமே...
கடைசி நிமிடம் வரை குழப்பமா
பலமான கட்சிகள் என கூறிக் கொள்ளும் அதிமுக, திமுக.,வால் கூட இந்த முறை உடனடியாக கூட்டணியையோ, வேட்பாளர்களையோ முடிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாததன் வெற்றிடம் தான் இதற்கு காரணமா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழாமல் இல்லை. தேர்தல் கமிஷன் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடும் வரை இந்த குழப்பம் தொடருமோ என்னவோ...