கட்டுப்பாட்டை மீறிய துரைமுருகன்.. "கணவனை காணவில்லை".. முறையிட்ட மனைவி.. நேற்று இரவு நடந்தது என்ன?
சென்னை: சாட்டை துரைமுருகன் கைதும், அதை தொடர்ந்து அவரின் மனைவி மாதரசியின் புகாரும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது கணவனை காணவில்லை என்று சாட்டை துரைமுருகன் மனைவி மாதரசி திருச்சி ஆணையர் அலுவலகத்தில் நேற்று இரவோடு இரவாக புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் விவரம் அறிந்தவர்களிடம் விசாரித்ததில் சாட்டை துரைமுருகனுக்கு இந்த முறை பெயில் கிடைப்பது கஷ்டம் என்கிறார்கள்!
Recommended Video
யூ டியூபர் சாட்டை துரைமுருகன் நேற்று மாலை மீண்டும் கைது செய்யப்பட்டார். இதோடு அவர் மூன்றாவது முறையாக கைது செய்யப்படுகிறார். திருச்சியில் இளைஞரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியாகி இருந்த சாட்டை துரைமுருகன் மீண்டும் கைதாகி உள்ளார்.
முதல் முதலாக திருச்சியில் குண்டர்களோடு சேர்ந்து சென்று இளைஞரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியான சாட்டை துரைமுருகன் மீண்டும் கைதாகி உள்ளார். முதல் வழக்கில் தனக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாக கூறி பிணையில் வெளியே வந்தார்.

மீண்டும் அவதூறு
ஆனால் வெளியே வந்த சாட்டை துரைமுருகன் முதல்வர் ஸ்டாலின் குறித்தும், கலவரத்தை தூண்டும் வகையில் குமரியில் பேசியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கும் போது சென்னை உயர் நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. முதல்வர் குறித்தும், அரசு குறித்தும் ஆதாரமற்ற அவதூறுகளை பரப்ப கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்தது.

எழுத்து
எழுத்துபூர்வமாக துரைமுருகனிடம் இதற்காக உறுதி மொழியும் வாங்கப்பட்டது. அதில் அரசு குறித்தும் முதல்வர் குறித்தும் இனி அவதூறு பரப்ப மாட்டேன். தவறுதலாக பேசிவிட்டேன். இனி இதுபோல அவதூறு பரப்ப மாட்டேன் என்று துரைமுருகன் உறுதியாக கூறினார். இதற்கு நீதிபதி புகழேந்தி, நீதிமன்றத்திற்கு வழங்கும் உறுதிமொழி பத்திரம் வெறும் பேப்பர்தான் என்று நினைக்காதீர்கள்.. கவனமாக இருக்க வேண்டும்.

பொய்யான செய்தி
முதல்வர் ஸ்டாலின் தனது நேரத்தை தாண்டி உழைக்கிறார். உங்களால் பாராட்ட முடியவில்லை என்றாலும் அவதூறாக பேச வேண்டாம் என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் கடும் கட்டுப்பாடுகளோடு வெளியே வந்த துரைமுருகன் மீண்டும் கைதாகி உள்ளார். இந்த முறை ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் 9 பெண் ஊழியர்கள் பலியானதாக, இவர் பொய்யான செய்தியை பரப்பியதற்காக கைதாகி உள்ளார்.

அவதூறு பரப்பினார்
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரி பாக தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பெண்கள் பூந்தமல்லி விடுதியில் உட்கொண்ட உணவு காரணமாக வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உபாதைகளுக்கு உள்ளானார்கள். இவர்கள் எல்லோரும் நல்ல உடல்நிலையில் உள்ள நிலையில், இதில் 9 பேர் பலியாகிவிட்டதாக இணையத்தில் பொய்யான செய்தி பரவியது. இதனால் ஃபாக்ஸ்கான் நிறுவன பெண் ஊழியர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சென்னை
இதனால் சென்னையே பெரும் பரபரப்பிற்கு உள்ளானது. பின்னர் ஆட்சியர் வந்து பேசிய பின்தான் யாரும் சாகவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இந்த விவகாரத்தில் 9 பெண்கள் பலியானதாக ட்வீட் செய்தவர்களில் சாட்டை துரைமுருகனும் ஒருவர். ஆதாரம் இல்லாமல் சாட்டை துரைமுருகன் இந்த போஸ்டை செய்து இருந்தார்.

விதி மீறல்
அரசுக்கு எதிராக அவதூறு பரப்ப மாட்டேன் என்று கூறியவர் அந்த விதியை மீறிய காரணத்தால் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் சாட்டை துரைமுருகனுக்கு இந்த முறை பெயில் கிடைப்பது கஷ்டம் என்கிறார்கள். ஏனென்றால் கோர்ட் விதியை இவர் மீறி உள்ளார். இன்னொரு பக்கம் இவரின் மனைவி மாதரசி நேற்று திருச்சி ஆணையர் அலுவலகத்திற்கு திடீரென வந்து தனது கணவனை காணவில்லை என்று கூறியுள்ளார்.

காணவில்லை
இது தொடர்பாக விசாரித்ததில், சாட்டை துரைமுருகன் நேற்று மாலை கைதாகி உள்ளார். 7 போலீசார் அவரை வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். ஆனால் அவரை எந்த போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றார்கள் என்று மாதரசிக்கு தெரியவில்லை. இதையடுத்து பல போலீஸ் நிலையங்களில் மாதரசி கணவனை தேடி இருக்கிறார்.

புகார்
பின்னர் சாட்டை துரைமுருகன் இருக்கும் காவல்நிலையம் தெரியாத காரணத்தால் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதரசி புகார் அளித்துள்ளார். எனது கணவனை கண்டுபுடித்து கொடுங்கள். அவரை காணவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று புகார் அளித்தார்.இதே நேரத்தில்தான் சாட்டை துரைமுருகன் அதிகாரபூர்வமாக கைதான செய்தி வெளியானதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications