சேலத்துப் புள்ளிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு.. ஓபிஎஸ் பாசிட்டிவ் சிக்னல் - பிரகாசமான நிர்வாகிகள் முகம்!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் சுமார் மூன்றரை மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சேலம் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு கிடைத்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் தனியாகப் பேசியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
சமீபத்தில், சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் இன்னும் பலரையும் அழைத்து வருவதாக ஓபிஎஸ்ஸிடம் உறுதியளித்திருந்த நிலையில், அதற்கான வேலைகள் நடந்து வருகிறதாம்.
இந்நிலையில், சேலத்தில் தம் பலத்தை அதிகரிப்பதற்காக அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கு பல்வேறு யோசனைகளையும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுக பிளவு
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையேயான பிளவை பெரிதாக்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான நிலையில், இரு தரப்பினரும் மாறி மாறி கட்சியை விட்டு நீக்கி, தங்களது ஆதரவாளர்களை நிர்வாகிகளாக பதவியில் அமர்த்தி வருகின்றனர். அதிமுகவில் முடிவுகளை எடுக்க யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பது தொடர்பாக இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வரும் நிலையில், சமீபத்தில், 40 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்டச் செயலாளர்களை நியமித்தார் ஓ.பன்னீர்செல்வம். மற்ற மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது ஓபிஎஸ் தரப்பு. இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் மற்றும் தலைமைக் கழகப் பொறுப்பாளர்களுடன் நேற்று சுமார் மூன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் ஆலோசனை
ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தனது ஆதரவாளர்களான முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரகாகர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும், ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர். அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாகவும், தமிழகம் முழுவதும் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயண திட்டம் தொடர்பாகவும் ஓபிஎஸ் ஆலோசித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சேலத்துப் புள்ளிகள்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் வந்திருந்தனர். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடன் தனியாகச் சந்தித்துப் பேசினார் ஓபிஎஸ். மற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் சில நிமிடங்கள் மட்டுமே பேசிய ஓ.பன்னீர்செல்வம், சேலம் மாவட்டத்திற்கு மட்டும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சேலம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் ஓபிஎஸ்.

ஸ்பெஷல் கவனிப்பு
எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டப் பொறுப்பாளர்களிடம் தனிக் கவனம் செலுத்தியுள்ளார் ஓபிஎஸ். சேலம் மாவட்டத்தில் லோக்கலில் நிலவும் பிரச்சனைகளைக் கேட்ட ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கோட்டையில் இருந்து தம் பக்கம் ஆதரவாளர்களைக் கொண்டு வருவது பற்றி தீவிரமாக ஆலோசித்துள்ளார். அதில் அவர் சந்தோஷப்படும் படியான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.

கவலை வேண்டாம்
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பேசிய ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் நம்முடன்தான் இருக்கிறார்கள், அதிமுக தொண்டர்களுடன் சென்று வேலை செய்யுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு நமக்குத்தான் சாதகமாக இருக்கும், எனவே எதிர்காலத்தைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று ஓ.பி.எஸ் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். இதனால், இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு மாவட்ட செயலாளர்கள் உற்சாகத்துடன் கிளம்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications