பேரறிவாளனை கட்டியணைத்த "தமிழக முதல்வர்!" கடுகடுக்கும் கதர்கள்! கருணாநிதி பாணியில் களமாடும் ஸ்டாலின்?
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை செய்யப்பட்டுள்ள பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலின் கட்டிப்பிடித்து வரவேற்ற நிகழ்வை கதர் சட்டையை சேர்ந்த சில சீனியர் தலைவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
பேரறிவாளன், ஆயுள் தண்டனையை முடித்ததால், சட்டப்படி விடுதலை செய்யப்பட்டிருக்கிறாரே தவிர அவர் நிரபராதி என்று விடுதலை செய்யப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி வெளியிட்ட அறிக்கை இதன் பின்னணியில் இருந்து வந்தது என்கிறார்கள் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தினர்.
ஈழத்தமிழர் விவகாரத்தில் எப்போதுமே ஆதரவு நிலையை எடுத்து வந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. இவரது வெளிப்படையான ஆதரவு நிலைப்பாடு காரணமாகத்தான் இரண்டு முறை கட்டம் கட்டப்பட்டு மத்திய ஆட்சியாளர்களால், ஆட்சி கலைப்புக்கு உள்ளானார்.
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு.. வாயில் வெள்ளை துணி கட்டி காங். இன்று தமிழ்நாடு முழுக்க போராட்டம்
திமுக படுதோல்வி
1991ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது ராஜீவ் காந்தி படுகொலை விவகாரத்தை முன்வைத்து அதிமுக, காங்கிரஸ் நடத்திய தீவிர பிரச்சாரத்தின் விளைவாகத்தான் திமுக மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது. சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். எனவே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்ட திமுகவுக்கு எதிராக தமிழகத்தில் மாபெரும் எதிர்ப்பு அலை உருவானது. இதன் காரணமாகத்தான் கருணாநிதி உட்பட திமுகவிலிருந்து இரண்டு சட்டசபை உறுப்பினர்கள் மட்டுமே அப்போது தேர்வு செய்யப்பட்டனர். திமுக கூட்டணி மொத்தம் வென்ற இடங்கள் வெறும் ஏழு மட்டுமே.
Recommended Video
ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார்
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 164 தொகுதிகளை வென்றது. கூட்டணியிலிருந்த காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகளை வென்றது. ஆக மொத்தம் 225 தொகுதிகளை வென்று மிகப் பெரும் பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. ஒரு வகையில் சொல்லப்போனால் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் ஜெயலலிதா ஆட்சியைப் பிடிப்பதற்கு எளிதாக வழி அமைத்துக் கொடுத்தது. இரண்டு முறை ஆட்சி கலைப்புக்கு உள்ளாகியதோடு மட்டுமல்லாது, ஈழத்தமிழர் ஆதரவுக்காக, இந்த தேர்தலில் மாபெரும் தோல்வியை மக்கள் தனக்கு பரிசளித்ததால்தான் கருணாநிதி தனது நிலைப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்ள ஆரம்பித்தார். இதன் பிறகு அவர் "தீவிர" ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகிக்கொண்டார்.
அமைதிப்படையை வரவேற்காத கருணாநிதி
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது தான் இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு தமிழ் பெண்கள் மீது அமைதிப் படையினர் அத்துமீறலில் ஈடுபட்டதாக வந்த புகார்களை தொடர்ந்து அவர்கள், சென்னை வழியாக தாயகம் திரும்பிய போது முதல்வராக இருந்த கருணாநிதி நேரில் சென்று வரவேற்பதை தவிர்த்து விட்டார். அந்த அளவுக்கு வெளிப்படையாக இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் நிலைப்பாட்டை எடுத்தவர்தான் கருணாநிதி. இதன் பலனைத்தான் டெல்லி அவருக்கு பரிசாக வழங்கியது.
பேரறிவாளனை கட்டியணைத்த ஸ்டாலின்
இந்த நிலையில்தான், தற்போது கருணாநிதியின் மகனும், முதல்வருமான ஸ்டாலின், ஈழத் தமிழர் விவகாரத்தில் பழைய கருணாநிதி காலத்து அக்கறையை காட்ட ஆரம்பித்திருக்கிறார். 31 வருடங்களுக்கு பிறகு பேரறிவாளன், சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவதாக, உச்சநீதிமன்றம் அறிவித்த சில மணி நேரங்களில் சென்னை விமான நிலையத்தில் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது பேரறிவாளனை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஸ்டாலின். முன்னதாக, அற்புதம்மாளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
அழகிரி காட்டமான அறிக்கை
இந்த நேரத்தில்தான் காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி அறிக்கை, கவனத்தில் கொள்ளப்படுகிறது. பேரறிவாளன் நிரபராதி கிடையாது, கொலையாளிதான். தண்டனை காலம் முடிவடைந்து விட்டதால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அவரை விடுதலை செய்துள்ளது என்று அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார் அவர். கொலையாளி.. அதுவும் முன்னாள் பிரதமர் ஒருவரை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்றவரை தமிழக முதல்வர் கட்டியணைத்து வரவேற்றது வட இந்தியாவைச் சேர்ந்த பல நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்கள் சமூகவலைத்தளங்களில் போட்ட பதிவுகளிலிருந்து அது தெரியவந்தது.
வாயில் துணி கட்டி போராட்டம்
காங்கிரஸ் கட்சியில் நாம் பேசிய நிர்வாகிகள் சிலர் தங்கள் கட்சிக்குள் இந்த விஷயத்தில் அதிருப்தி இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். இருப்பினும் அகில இந்திய தலைமை ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் இந்த விஷயத்தில் பெருந்தன்மையாக நடந்து கொள்வதால் மேற்கொண்டு தங்கள் அதிருப்தியை அறிவாலயம் பக்கம் ஷிப்ட் செய்யமுடியாது. அந்த நிலைதான் தங்களுக்கு இருக்கிறது என்றும், தெரிவித்தார்கள். தமிழகத்தைப் பொறுத்த அளவில் திமுக தயவு இல்லாமல் காங்கிரஸ் கட்சியால் தனித்து போட்டியிடும் சூழ்நிலை இல்லை என்பதையும், அதே நேரம் தங்கள் அதிருப்தியை காட்டுவதற்காகத்தான் வாயில் துணியை கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தி வருவதாகவும் பேசுகின்றனர் அந்த கதர் சட்டை வட்டாரத்தினர். அதாவது இந்த போராட்டம் தீர்ப்புக்கு எதிராக இல்லையாம், திமுகவின் ஆர்வத்திற்கு எதிராகவாம்.