என்னை ஏன் கூப்பிடவில்லை.. டிவியில் பிளாஷ் பார்த்து டுவிட்டரில் கொதித்த குஷ்பு!
சென்னை: வசந்தகுமார் எம்பி இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தன்னை அழைக்காதது குறித்து வேதனை தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு, கட்சியை பலப்படுத்த வேண்டுமே தவிர பலவீனமாக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி எம்பியும், வசந்த் அன் கோ நிறுவனத்தின் உரிமையாளருமான ஹெச் வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவரது உடல் நேற்று அவரது சொந்த ஊரான அகஸ்தீவரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமார் எம்பி இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, திருநாவுக்கரசர் எம்பி, பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் இந்த கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின், கனிமொழி எம்பி, டிஆர்பாலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
"ஆக, திமுக சொல்றதை தானே, அதிமுக செய்யுது.. அப்ப சரியாதானே செயல்படுது" உதயநிதிக்கு குவியும் கேள்விகள்
குஷ்பு வேதனை
ஆனால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தனக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அழைப்புக்கூட விடுக்கவில்லை என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு வேதனை தெரிவித்துள்ளார்.
அஞ்சலி நிகழ்ச்சி
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இருக்கும் ஒரே தேசிய செய்தி தொடர்பாளர் நான், வசந்தகுமார் எம்பிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு குறித்து எனக்கு தெரிவிக்கப்படவில்லை. நான் பத்திரிக்கைகள் மூலமே இதை அறிந்தேன். நம்முடைய கட்சியை நாம் பலப்படுத்தத்தான் வேண்டுமே , மாறாக நம்முடைய ஈகோவால் பலவீனமாக்கக்கூடாது என்று வேதனை தெரிவித்துள்ளார்.
குஷ்பு ட்வீட்
அண்மைக்காலத்தில் குஷ்பு போட்டுவரும் எந்த ட்விட்டும் சர்ச்சையாக மாறுவது இயல்பாகவே உள்ளது. பிரதமர் மோடியையும் அவரது திட்டங்களையும் கடுமையாக ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார். ஆனால் குஷ்பு, பாஜக அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கை திட்டத்தை ஆதரித்து கருத்து தெரிவித்தார். ராகுல் காந்தி அவர்கள் மன்னிக்க வேண்டும், நான் கட்சிக்கு தலையாட்டும் பொம்மையாக எல்லாம் இருக்க மாட்டேன் என்றெல்லாம் கூறியிருந்தார். இவரது கருத்து காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
Recommended Video
அதிருப்தியில் நிர்வாகிகள்
இந்த சூழலில் பாஜகவில் சேர குஷ்பு நாள் பார்த்து வருவதாகவும் இடையில் ஒருமுறை காங்கிரஸார் கொளுத்தி போட்டனர். இதற்கு குஷ்பு மறுப்பு தெரிவித்தாலும், இன்னமும் சர்ச்சைகள் ஓயவில்லை என்பது இப்போதைய சம்பவம் காட்டுகிறது. தன்னை காங்கிரஸ் நிர்வாகிகள் ...வசந்தகுமார் எம்பி இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு அழைக்காததை வெளிப்படையாக குஷ்பு கண்டித்துள்ளார். இதன் மூலம் இன்னமும் நீர் பூத்த நெருப்பாக காங்கிரஸில் சலசலப்பு உள்ளது தெரிகிறது.