காலையிலேயே.. அடுத்தடுத்த விமானத்தில் டெல்லிக்கு பறந்த தலைமை செயலாளர், டி.ஜி.பி.. பரபர பின்னணி
சென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன், உள்துறை செயலாளர் பிரபாகர், போலீஸ் டிஜிபி திரிபாதி, உள்துறை இணைசெயலாளர் முருகன் ஆகியோர் இன்று காலை டெல்லிக்கு அவசரமாக கிளம்பி சென்றது பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக 234 தொதிகளுக்கும் நடந்து முடிந்தது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால். மே 2ம் தேதிக்கு பிறகு அமையும் அரசே கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க முடியும்.
அதுவரை நிர்வாக ரீதியான உத்தரவுகளை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, தலைமை செயலாளர், உள்துறை செயலாளர். டிஜிபி ஆகியோர் பிறப்பிப்பார்கள். அந்த நடைமுறையின்படி தான் நேற்று கொரோனா கால கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
உள்துறை இணை செயலாளர்
இந்நிலையில் தமிழக அரசு உயர் அதிகாரிகளான சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி, உள்துறை இணைசெயலாளர் முருகன் ஆகியோர் காலை 6.30 மணிக்கு ஏர்இந்தியா விமானத்தில் டெல்லிக்கு அவசரமாக புறப்பட்டு சென்றனர்.
உள்துறை செயலாளர்
இதேபோல் தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன், உள்துறை செயலாளர் பிரபாகர் ஆகிய இருவரும் இன்று காலை 7.15 மணிக்கு சென்னையில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் டெல்லிக்கு அவசரமாக புறப்பட்டு சென்றனர். மத்திய அரசின் அழைப்பின் பேரில் சென்றார்கள்.
4 அதிகாரிகள்
தமிழக அரசின் முக்கிய உயர் அதிகாரிகளான இந்த நான்கு பேரும் டெல்லியில் உள்துறை செயலாளரை சந்தித்து பேசுவதற்காக சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குரூப்-1 அதிகாரிகள் சிலருக்கு ஐ.பி.எஸ். பதவி உயர்வு வழங்குவதில் சிலரது பெயர் விடுபட்டிருந்ததால் அதுகுறித்து ஆலோசிப்பதற்காக மத்திய அரசு அழைப்பு விடுத்ததின் பேரில் இவர்கள் டெல்லி சென்றுள்ளதாக சொல்கிறார்கள்.
மத்திய அரசு ஆலோசனை
இதனிடையே வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக முக்கிய ஆலோசனை நடத்த உயர் அதிகாரிகள் டில்லி சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை வரும் மே2ம் தேதி நடக்கிறது. அதன்பிறகு புதிய அரசு அமைய உள்ளது. இந்த சூழலில் மத்திய அரசு, அதிகாரிகளை அழைத்து முக்கிய ஆலோசனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.