ஒபிஎஸ்ஸா.. தங்கமா.. டிடிவி தினகரன் எடுத்த அதிரடி முடிவு.. செம்ம பரபரப்பில் தேனி!
சென்னை: தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இவரது அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆர் கே நகர் தொகுதியிலும் , தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும் என 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் என டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.
டிடிவி தினகரன் இந்த முறை எடுத்து வைக்கப்போகும் அரசியல் 2வது இன்னிங்ஸாக பார்க்கப்படுகிறது, சசிகலா வருகைக்கு பின்னர் அவரது அரசியல் நகர்வு எப்படி இருக்க போகிறது என்பத குறித்த எதிர்ப்பார்ப்பு அமமுகவினரிடையே அதிகமாக உள்ளது.

ஆர்கேநகர் வெற்றி
சென்ற முறை ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர், அவர் வெற்றி பெற்ற சென்னை ஆர்கே தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டார். அதில் அதிமுக, திமுகவை தோற்கடித்த சுயேட்சையாக டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதில் திமுக டெபாசிட்டையும் இழந்தது.

கணிசமான வாக்குகள்
அதன்பிறகு தான் அதிமுகவில் இருந்து பிரிந்து டிடிவி தினகரன் பின்னால் பலர் சென்றார்கள். தினகரன் மீது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்க வைத்தது ஆர்கே நகர் தேர்தல் வெற்றி. ஆனால் அதன் பிறகு நடந்த அரசியல் மாற்றங்களால் நாடாளுமன்ற தேர்தலிலும் 18 தொகுதி சட்டமன்ற தேர்தலிலும் டிடிவி தினகரனின் அமமுக தோல்வியை சந்தித்தது. ஆனால் 5 சதவீதம் அளவிற்கு வாக்குகளை கைப்பற்றியது. அதிமுகவின் தோல்விக்கு அமமுக பிரித்த ஓட்டுக்கள் முக்கிய காரணமாக இருந்தது.

ஆர்கே நகர் தேனி
ஆனால் இப்போது சசிகலா வருகைக்கு பின்னர் டிடிவி தினகரனை முன்னிலைப்படுத்தியே அரசியல் செய்வார் என்பதால், டிடிவியின் ஒவ்வொரு அரசியலும் தீவிரமாக அரசியல் கட்சியினரால் கவனிக்கப்படுகிறது. இன்று டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், நான் ஆர் கே நகர் தொகுதியிலும் , தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும் என 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் என்று கூறினார்.

ஆண்டிப்பட்டி
ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடுவதை வெளிப்படையாக சொன்ன டிடிவி தினகரன், தேனி மாவட்டத்தில் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்பதை தெளிவாக சொல்லவில்லை. தேனி மாவட்டத்தில் அவர் எம்பியாக தேர்வான பெரியகுளம் தற்போது தனித்தொகுதியாக உள்ளது. எனவே கம்பம், போடி அல்லது ஆண்டிபட்டியில் போட்டியிடலாம் என தெரிகிறது. ஒருவேளை தேனிமாவட்டத்தின் எல்லையில் உள்ள மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உசிலம்பட்டியில் கூட போட்டியிடலாம் என எதிர்பார்ப்பும் உள்ளது.

சசிகலா போட்டி
ஆனால் டிடிவி தினகரன் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடவே அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் போடி தொகுதியில் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் போட்டியிடுவார் என்பதால் அங்கு இரு பெரும் தலைகள் போட்டியிட வாய்ப்பு இல்லை என தெரிகிறது. டிடிவி தினகரனுக்கு ஆண்டிபட்டியில் நின்றால், திமுகவிற்கு போன தங்கதமிழ்செல்வன் கடும் போட்டியை சந்திப்பார் என தெரிகிறது. ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதி என்பதுடன் அவருக்கு கிடைத்த ஆதரவு தனக்கும் ஆண்டிப்பட்டியில் கிடைக்கும் என்று உறுதியாக டிடிவி நம்புகிறார். சசிகலாவிற்கும் இதில் சம்மதம் இருப்பதாக தெரிகிறது. அத்துடன் அவர் சார்ந்த சமுதாயத்தினர் ஆண்டிபட்டியில் அதிகம் என்பதால் டிடிவி ஆண்டிபட்டியில் போட்டியிடவே வாய்ப்பு உள்ளது. ஒருவேளை சசிகலா தண்டனைக்கு உள்ளாகாமல் இருந்திருந்தால் ஆண்டிபட்டியில் தான் சசிகலா போட்டியிடடிருப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் உறுதியாக சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications