ஒன்று போனால் இன்னொன்று.. மாரிதாஸ் மீண்டும் கைது.. 3வது வழக்கு பாய்ந்தது ஏன்? பின்னணி காரணம்!
சென்னை: யூ டியூபர் மாரிதாஸ் இன்று மீண்டும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் வெளியே வருவது சிக்கலாகி உள்ளது. மூன்றாவது வழக்கு போடப்பட்டதற்கு பின் வேறு ஒரு காரணம் இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரையை சேர்ந்த யூ டியூபர் மாரிதாஸ் Maridhas Answers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். திமுகவிற்கு எதிராக தொடர்ச்சியாக கடந்த ஆட்சியில் இவர் வீடியோ வெளியிட்டு வந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்துவிட கூடாது என்று வெளிப்படையாக கூறி இவர் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அதோடு சில பாகிஸ்தான் அமைப்புகளோடும் திமுகவை ஒப்பிட்டு இவர் வீடியோ வெளியிட்டபடி இருந்தார்.
கொரோனா பரவலை முன்வைத்து மதமோதலை ஏற்படுத்தும் பேச்சு- மாரிதாஸ் மேலும் ஒரு வழக்கில் கைது!
வலதுசாரி
வலதுசாரி கொள்கை கொண்ட இவர் சமீபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மரணத்தின் போது தமிழ்நாடு குறித்து தவறுதலாக ட்விட் செய்ததாக புகார் வைக்கப்பட்டது. இதையடுத்து இவருக்கு எதிராக பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், இரண்டு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. பாலகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் கைதானார்.
என்ன நடந்தது
ஆனால் அரசியல் வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் பலர் இந்த வழக்கு கோர்ட்டில் நிற்காது என்றனர். ஏனென்றால் அவர் தனது ட்விட்டில் எந்த மதத்திற்கும், பிரிவிற்கும் எதிராக பேசவில்லை. பிபின் ராவத் மரணம் பற்றி தவறாக பேசவில்லை. அரசை நேரடியாக விமர்சிக்கவில்லை. இதனால் இந்த வழக்கு கோர்ட்டில் நிற்காது என்று வாதங்களை வைத்தனர்.
தள்ளுபடி
அதன்படியே மதுரை ஹைகோர்ட் இவர் மீதான வழக்கு பிரிவுகளை ரத்து செய்து பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரில் இருந்து மாரிதாஸை விடுதலை செய்தது. பொது அமைதியை குலைப்பது, இரண்டு பிரிவு இடையே மோதலை ஏற்படுத்துவது உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட மாரிதாஸ் மீதான வழக்குகளை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்துள்ளது. மாரிதாஸ் அப்படி பேசவில்லை என்று மதுரை ஹைகோர்ட் கிளை கூறியது.
வழக்கு
ஆனால் இன்னொரு வழக்கில் வரும் 27ம் தேதி வரை மாரிதாஸ் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி தொடுத்த போலி மெயில் வழக்கிலும் இவர் கைது செய்யப்பட்டு 27ம் தேதி வரை ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார். இதில் போர்ஜரி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அதில் வழக்கும் பதியப்பட்டுள்ளது. ஆனால் இதிலும் அவருக்கு பெயில் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
வாய்ப்பு
ஏற்கனவே ஒரு வழக்கு ரத்தான நிலையில் இதில் பெயில் பெற்று மாரிதாஸ் வெளியே வரும் வாய்ப்புகள் உள்ளன. விரைவில் இதன் விசாரணை சென்னை ஹைகோர்ட்டில் நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் மாரிதாஸுக்கு மீண்டும் செக் வைக்கும் வகையில் மூன்றாவது கேஸ் போடப்பட்டுள்ளது. முதல் கேஸில் இவர் வெளியே வருவார் என்பது உறுதியான நிலையில் எப்படி மற்ற கேஸில் நடவடிக்கை எடுக்கப்பட்டதே அதேபோல் இரண்டாவது கேஸில் வெளியே வர வாய்ப்புள்ளதால் இப்போது மூன்றாவது கேஸ் போடப்பட்டுள்ளது.
மூன்றாவது கேஸ்
இன்று யூ டியூபர் மாரிதாஸ் மீண்டும் நெல்லையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலப்பாளையம் காவல் நிலையத்தில் கடந்தாண்டு தொடரப்பட்ட வழக்கில் போலீசார் திடீர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொரோனா காலத்தில் தப்லிக் ஜமாத் அமைப்பினர் கொரோனாவை பரப்பியதாக மாரிதாஸ் வீடியோ வெளியிட்டு இருந்தார். கடந்த ஆண்டு மீரான் என்பவர் இதற்கு எதிராக புகார் அளித்த நிலையில் இன்று மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
வாய்ப்பு குறைவு
அதன்படி இதனால் இரண்டாவது வழக்கில் மாரிதாஸ் வெளியே வந்தாலும் மூன்றாவது வழக்கில் பெயில் கிடைப்பது மிக கடினம் என்கிறார்கள். மூன்றாவது கேஸ் கொஞ்சம் சிக்கலானது.இதே நிலை நீடித்தால் அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.