"ஆள் திரட்டுகிறாராமே".. மெகா ஷோ காட்ட துடிக்கும் அழகிரி.. நமட்டு சிரிப்பு சிரிக்கும் திமுக!!
முக அழகிரி வருகையால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற விவாதம் எழுகிறது
சென்னை: முக. அழகிரி வருகையால் திமுகவின் ஓட்டுக்கள் பிரியும் என்று ஒரு குரூப் சொல்லி கொண்டிருக்க, அழகிரியால் எந்தவித பெரிய மாற்றமும் நடந்துவிடாது என்று மற்றொரு தரப்பு சொல்லி கொண்டிருக்க.. சத்தமே இல்லாமல் அதிருப்திகளின் "கட்சி தாவல்" மூவ்கள் நடந்து கொண்டிருக்கிறதாம்!
கடந்த ஞாயிற்றுகிழமை மு.க. அழகிரி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.. புது கட்சியை ஆரம்பிக்க போவதாக 6 மாதமாக அரசல் புரசலாக செய்திகள் வந்த வண்ணம் இருந்ததாலேயே, ஒருவித எதிர்பார்ப்பு தொற்றி கொண்டது.. ஆனால், இவரும் ரஜினிகாந்த் பார்ட்-2 என்பதை வழக்கம்போல நிரூபித்து சென்றுவிட்டார்.
அதேசமயம், அழகிரி புது கட்சி ஆரம்பித்தால், திமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமா? எந்தவிதமான தாக்கத்தை தரும்? அழகிரிக்கே அது எம்மாதிரியான சாத்தியக்கூறுகளை பெற்று தரும் என்பது குறித்த விவாதமும் எழுந்து வருகிறது. அந்த வகையில் அரசியல் நோக்கர்கள் சிலரிடம் பேசினோம்... அவர்கள் சொன்னதாவது:
புதுக்கட்சி
'கலைஞர் திமுக' என்ற பெயரில் புது கட்சி ஆரம்பிப்பதாக 3 வருஷத்துக்கு மேலாகவே சொல்லப்பட்டு வருகிறது.. அப்படி ஒரு தகவல் வரும்போதெல்லாம் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடும்.. எப்போதெல்லாம் தன்னுடைய நிர்வாகிகள் டயர்ட் ஆகிறார்களோ, அப்போதெல்லாம் மறுபடியும் இந்த புதுக்கட்சியை பற்றி அழகிரி பேச்செடுப்பார்.
ரஜினி
இப்போது இந்த விவகாரம் பெரிதாக்கப்படுவதற்கு காரணம், தேர்தல் நெருங்குகிறது.. மற்றொன்று ரஜினி ஜகா வாங்கிவிட்டார் என்பதால்தான்.. ஆனால், அழகிரியால் திமுகவுக்கு ஆபத்து இருக்குமா என்றால் அது சந்தேகம்தான்.. அன்று நடந்த மீட்டிங்கில்கூட, அவரது பேச்சு மொத்தமும் ஸ்டாலினை டேமேஜ் செய்யும்வகையில்தான் இருந்ததே தவிர திமுகவை டேமேஜ் செய்ய அவர் நினைக்கவில்லை.. அப்படி நினைக்கவும் மாட்டார்.
டென்ஷன்
அழகிரியின் குறி ஸ்டாலின் மட்டும்தான்.. அந்த வகையில் அழகிரி கட்சியே ஆரம்பித்தாலும் சரி, பாஜக பின்னணியில் இருப்பதாக சொல்லப்பட்டாலும் சரி, பெரிதாக அவரால் சோபிக்க முடியாது.. வேண்டுமானால் திமுக தலைமைக்கு டென்ஷனை ஏற்படுத்தலாம்.. ஸ்டாலின் பெயருக்கு களங்கம் விளைவிக்கலாம்.. இதெல்லாம் பங்காளிகள் சண்டை மாதிரிதான் வெளியில் இருந்து பார்க்கப்படும்.. இந்த குடும்ப விவகாரத்தில் யாரும் தலையிடவும் மாட்டார்கள். இல்லாவிட்டால், கலைஞரின் நினைவிடத்திற்கு இப்போது வரை போகாமல் இருப்பாரா?
நினைவஞ்சலி
தனக்கு பெருவாரியான ஆதரவு இல்லை என்பது அழகிரிக்கும் தெரியும்.. தன்னால் ஒரு நினைவஞ்சலி கூட்டத்தைகூட நடத்த முடியாது என்பதை அவர் நன்றாகவே உணர்ந்துள்ளார்... தேர்தல் நெருங்குகிறது என்பதால், அதிருப்தியாளர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சிகளும் நடந்து வருவதாக தெரிகிறது.
தொண்டன்
அதேசமயம், அழகிரியை பொறுத்தவரை மிகச்சிறந்த மனிதர்.. ஒரு தொண்டனும் மேலே வர வேண்டும் என்று ஆசைப்படுபவர்.. பலருக்கு வாழ்க்கை தந்தவர்.. அதற்காக ஸ்டாலினுக்கு எதிராக அவரால் ஒருபோதும் அரசியல் செய்ய முடியாது.. எனினும், அழகிரியை யாரோ தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றே தெரிகிறது.. ஒருவேளை அழகிரியின் பின்னால் பாஜக இருப்பது உறுதியானால் அது திமுக தொண்டர்கள், ஆதரவாளர்களின் எதிர்ப்பைதான் சம்பாதிக்க வேண்டி இருக்கும்.. இதையும் மீறி புதுகட்சியை அழகிரி தொடங்கினால், பத்தோடு பதினொன்றாக அந்த கட்சி தோன்றி மறைந்துவிடும்..!" என்கின்றனர்.