வளைந்து கொடுக்காத தாமரை! களத்தில் இறங்கிய ஓபிஎஸ்! தூபம் போடும் சசிகலா? இறங்கி வருவாரா எடப்பாடி?
சென்னை : அதிமுக தொடர்பான விவகாரங்களில் ஒரு பக்கம் பாஜகவின் நெருக்கடி, மறுபுறம் ஓபிஎஸ் இன்னொரு புறம் சசிகலா, தற்போது தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஆணைய அறிக்கை என அடுத்தடுத்து நெருக்கடிகள் வருவதால் எடப்பாடி பழனிச்சாமி இறங்கி வருவாரா என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதிமுகவில் இலை மறை காயாக இருந்த அதிகார மோதல் ஜூன் மாதம் தொண்டர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கிறது. ஏற்கனவே பிரிந்து சென்ற சசிகலா ஒரு பக்கம் தற்போது புதிதாக பிரிந்து சென்றுள்ள ஓபிஎஸ் மறுபக்கம் என அடுத்தடுத்து அணிகள் தொடங்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
எது எப்படி இருந்தாலும் நிர்வாகிகள் ஆதரவு தனக்கு தான் இருக்கிறது என்பதால் தெம்பாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் ஓபிஎஸ்ஐ போலவே அவருக்கும் சில சிக்கல்கள் அடுத்தடுத்து பல ரூபங்களில் கிளம்பி வருகிறது.

அதிமுக விவகாரம்
எது எப்படி எனினும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருந்து நிரந்தர பொது செயலாளராக மாறிவிட வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார். ஆனால் அது சாத்தியப்படுமா என்பதை மில்லியன் டாலர் கேள்வி. ஓபிஎஸ் நீதிமன்றம், தேர்தல் ஆணையம், ஆதரவாளர்களை வளைப்பது என பல்வேறு அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறார். பாஜக தலைமையும் அவருக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே நீதிமன்றத்தில் தீர்ப்பு எப்படி வந்தாலும் தேர்தல் ஆணைய விசாரணையில் ஓபிஎஸ் கை ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இணைவார்களா?
மேலும் வருகின்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்பட வேண்டும் என பாஜக தலைமை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது என பாஜக நிர்வாகிகள் கூறி வந்தாலும் இருவரும் இணைந்து செயல்படுவது மேலும் பலத்தை அதிகரிக்கும் என பல தலைவர்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன் அமித் ஷாவை சந்தித்த போதும் இதையே அவரும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

சசிகலா
இது ஒரு புறம் இருக்க மீண்டும் சசிகலா அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் அவர் மீது குற்றம் சாட்டி இருக்கிறது. இது அவருக்கு பின்னடைவாக இருந்தாலும் அவர் சில வீடியோக்களை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று வெளியான ஆடியோவும் ஜெயலலிதா சுயநினைவு தான் இருந்தார் என்பதை வெளிப்படுத்தியுள்ள நிலையில், இவற்றின் மூலம் தன் மீதான குற்றச்சாட்டுகளை அழிப்பதோடு, தொண்டர்களிடையே மீண்டும் நன்மதிப்பை பெற முடியும் என சசிகலா நம்புகிறார்.

இறங்கி வருவாரா எடப்பாடி?
அரசியல் ரீதியாக உட்கட்சி விவகாரங்கள் இப்படி இருக்க மேலும் ஒரு சிக்கலும் எடப்பாடிக்கு வந்திருக்கிறது. அது அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை. எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் மூலம் மேலும் அவருக்கு நெருக்கடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால் எடப்பாடி பழனிசாமி இறங்கி வருவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications