"பாரிவேந்தர்தான் காரணம்".. உதயநிதி ஸ்டாலினுக்கு செம டஃப் .. யார் இந்த முகமது இத்ரிஸ்
உதயநிதியை எதிர்த்து சேப்பாக்கத்தில் முகமது இத்ரிஸ் களம் காண்கிறார்
சென்னை: "நான் அரசியலுக்கு வர காரணமே பாரிவேந்தர்தான்" என்று மார்தட்டி சொல்கிறார் முகமது இத்ரிஸா.. யார் இவர்? சேப்பாக்கம் முழுக்க இவரை பற்றின பேச்சாகத்தான் இருக்கிறது.
தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் உள்ளது.. திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர், மநீம என ஐந்து முனை போட்டி நடந்து வருகிறது.. ஆளுக்கு ஒரு பக்கம் பிஸியாக இருக்கிறார்கள்.
இதில், ஒருசில தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்தை பெற்று வருகிறது.. அதில் ஒன்றுதான் சேப்பாக்கம்திருவல்லிக்கேணி தொகுதி.. இது திமுகவின் கோட்டை.. கலைஞரின் ஆஸ்தான தொகுதி.. அவரை முதலமைச்சராக்கிய தொகுதி.. அதனால், உதயநிதி இங்குதான் போட்டியிடுகிறார்..

பாமக
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கஸ்ஸாலி என்பவர் களம் காண்கிறார். இவர்கள் இருவரை பற்றின செய்திகள் வரும்போதுதான், திடீரென முகமது இத்ரிஸா என்ற பெயர் ஒலிக்க தொடங்கி உள்ளது.. இவர், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆவார்.. முதுகலைப் பட்டதாரியாம்.. கட்டுமானத்துறை வல்லுநரும்கூட.

சேப்பாக்கம்
ஆக, சேப்பாக்கத்தில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.. இஸ்லாமிய மக்கள் அதிகமாக வசிக்கும் இந்த சேப்பாக்கத்தை பொறுத்தவரை தமிழகத்தின் சிறிய தொகுதி.. இப்போது, சில பகுதிகளை இணைந்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி என்று அழைக்கப்படுகிறது. சில வரலாற்று சிறப்புக்களையும் இந்த தொகுதி பெற்றுள்ளது.. புரட்சி கவிஞர் பாரதியார் நினைவு இல்லம், பாரம்பரியமிக்க பார்த்தசாரதி திருக்கோயில், கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் நினைவிடம் உள்ள பெரிய மசூதி, கிரிக்கெட் ஸ்டேடியம் என, எண்ணற்ற சிறப்புகள் வாய்ந்ததுதான் சேப்பாக்கம்..

குறைகள்
ஆனால், இந்த பெருமைகளுடன் பல குறைகளையும் இந்த சேப்பாக்கம் தாங்கி வருகிறது.. இந்த தொகுதியில் போக்குவரத்து நெரிசல் இன்றுவரை தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது... அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளும் தொகுதியில் நிறைவேற்றப்படவில்லை... பல்வேறு இடங்களில் பைக்கை நிறுத்த முடியாத நிலைதான் உள்ளது.. இதைதவிர,

வேதனை
தினமும், கழிவு நீர் பிரச்சினை, நடைபாதை கடைகளால் சாலைகள் ஆக்கிரமிப்பு போன்றவற்றால், தொகுதி மக்கள் வேதனையில் உள்ளனர்.. போதிய சாலை வசதி இல்லை.. கூட்ட நெரிசல் மற்றும் சுகாதாரமற்ற சுற்றுச் சூழலால் பல்வேறு நோய் பாதிப்புக்கு உள்ளாகும் அவலம் உள்ளது.. சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டை நவீன வசதிகளுடன் கூடிய மீன் மார்க்கெட்டாக மாற்றி அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இன்றுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

பாரிவேந்தர்
இவற்றுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டதான் முகமது இத்ரிஸ் களம் இறங்கி உள்ளார்.. பல நாட்கள் தீர்க்கப்படாத மக்கள் பிரச்சனைகளை தன்னால் தீர்க்க முடியும் என்று மார்தட்டி சொல்கிறார்.. இதில் பாரிவேந்தர் பெயரையும் மறக்காமல் பதிவு செய்கிறார்.. காரணம், டாக்டர் பாரிவேந்தர் ஏழை எளிய மக்களுக்கு கோடி கோடியாய் வாரிக் கொடுத்து உதவுவதைப் பார்த்துதான், தானும் அவரைப்போல் மக்களுக்கு உதவ வேண்டும் என்கிற ஆசையில் அரசியலுக்கு வந்தேன் என்று பூரித்து போய் சொல்கிறார்.

இத்ரிஸ்
தனக்கே வெற்றி வாய்ப்பு சாத்தியமாகும் என்றும் இத்ரிஸ் நம்பிக்கையுடன் சொல்கிறார்.. இதற்கு காரணம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை என சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் தனது நேர்மையான, நேர்த்தி மிகுந்த தொழில் சார்ந்த அணுகுமுறையால் மக்களிடம் செல்வாக்குடன் திகழ்வதால்தான் தொகுதியில் வெற்றி சாத்தியம் என்று நம்புகிறர் முகமது இத்ரிசுக்கு..

கூட்டணி
அதுமட்டுமல்ல, அதிமுக - பாமக கூட்டணி சண்டையும் முகமது இத்ரிஸ் வெற்றிக்கு கை கொடுக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கணிப்பும் உள்ளது. மேலும், பாமக வேட்பாளருக்கு அதிமுகவினர் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.அங்கு ஏகப்பட்ட உள்ளடி வேலைகள் நடக்கின்றன. இதெல்லாம் சேர்ந்துதான், உதயநிதி ஸ்டாலினுக்கும் முகமது இத்ரிசுக்கும்தான் நேரடி போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திமுக
எத்தனையோ முறை திமுகவுக்கு வாய்ப்பு கொடுத்தும் அடிப்படைகள் வசதிகள் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நிறைவேற்றித் தரப்படாததால், பாரிவேந்தரை பின்பற்றி ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து தங்களது சொந்தப் பணத்திலாவது அடிப்படை வசதிகளை செய்து தருவார்கள் என்ற நம்பிக்கையில் முகமது இத்ரிசுக்குத்தான் எங்கள் ஓட்டு என்கிறார்கள் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மக்கள். பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications