அரசியல் நாடகம் என்று விமர்சித்தாரே கமல்ஹாசன்.. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமா ம.நீ.ம?
சென்னை: 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல், நடைபெற உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி என்ன நிலைப்பாடு எடுக்க உள்ளது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
உள்ளாட்சித் தேர்தல் என்பது, இருகட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகம் என்று இரு வருடங்கள் முன்பு கூட வர்ணித்தவர் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.
இப்படியான ஒரு சூழ்நிலையில், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் தனித்து களமிறங்க ரெடியாகிவிட்ட நிலையில், கமல்ஹாசன் கட்சி களமிறங்குமா என்பது அக்கட்சித் தொண்டர்களிடம் எழுந்துள்ள கேள்வியாக மாறியுள்ளது.

மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி அன்று கமல்ஹாசனால் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட்டது. ஆனால் 2021ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கமல்ஹாசன் கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனாலும், இந்த 2 தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யம் தோல்விதான், தழுவி இருந்தது. அந்த கட்சியைச் சேர்ந்த மகேந்திரன், பத்ம பிரியா போன்ற பிரபல வேட்பாளர்கள் திமுகவிற்கு சென்றுவிட்டனர்.

அரசியல் நாடகம்
இந்த நிலையில், 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2019ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது, இருகட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகமே உள்ளாட்சித் தேர்தல் எனவும், உள்ளாட்சி தேர்தல் மக்கள் நலனுக்காக இருக்கப்போவதில்லை, ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட வியாபாரப் பங்கீடு மட்டுமே தேர்தலில் அரங்கேறும் என்றும் கூறினார் கமல்ஹாசன். 2021ல் ஆட்சியை பிடிப்பதே மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு என அவர் தெரிவித்தார். திரைப்படங்களில், நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன், அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர் வேண்டாம் என்று கூறுவதை போல கமல் கூறுவதாக அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. அதே மாதிரிதான் சட்டசபை தேர்தலில் ம.நீ.மவிற்கு எந்த தொகுதியிலும் வெற்றி கிடைக்காமல் போய்விட்டது.

கள நிலவரம் அறிவாரா கமல்
இந்த நிலையில்தான், இப்போது கள நிலவரத்தை அறிந்து கொண்டுள்ள கமல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல்கள்தான் அடி மட்ட அளவில் மக்களோடு இணைந்து பழக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். கட்சியை அடிமட்ட அளவில் வளர்க்க உதவும். எனவே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று ம.நீ.ம தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட தேமுதிக, தனித்துப் போட்டியிட உள்ளது. எனவே ம.நீ.ம தனித்துப் போட்டியிட வேண்டும். கமல்ஹாசன், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்.

ம.நீ.ம போட்டி
இதனிடையே, ஊரக உள்ளாட்சி தேர்தலில் 1,521 வேட்பாளர்கள் கமல் கட்சி சார்பில் களம் இறங்க திட்டமிட்டுள்ளதாகவும், தேர்தலை எதிர்கொள்வதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் (கட்டமைப்பு) மவுரியா மேற்பார்வையில் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் சில நாளிதழ்கள் தெரிவிக்கின்றன. ஊரகப் பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி செல்வாக்கோடு செயல்படுபவர்களை வேட்பாளர்களாக நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. வேட்பாளர் தேர்வில் ஒவ்வொரு குழுக்களிலும் உள்ள மாநில செயலாளர்களும், மண்டல செயலாளர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் மக்கள் நீதி மய்யம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியுள்ள நிலையில், இதுவரை ம.நீ.ம தரப்பில் போட்டியிடுகிறார்களா, இல்லையா என்று தகவல் வெளியாகவில்லை. ஆனால் போட்டியிட வாய்ப்பு அதிகம் என்பது, கட்சி வட்டார தகவல்களாக உள்ளன.












Click it and Unblock the Notifications